ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர் ; இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர் - அவ்வொழுக் கத்தினின்று தவறுவதால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர் .
ஒருவன் ஒரு குற்றஞ் செய்தபின் , அத்தகைய குற்றம் பிறர் செய்திருப்பினும் அவையும் அவன்மேல் ஏற்றப்படுவது இயல்பாதலின் , ' எய்தாப் பழி ' எய்துவர் என்றார் .
கலைஞர் உரை:
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி
வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(சாதாரண மனிதர்கள் ஒழுக்கம் கெட்டுவிட்டால் அதை யாரும் பொருட்படுத்தமாட்டர்கள். ஆனால்) ஒழுக்கத்துக்காகவே மேன்மைப்படுத்தப்பட்டவர்கள் ஒழுக்கம் கெட்டால் அவர்கள் மற்றவர்கள் அடையாத பெரும் பழிக்கு ஆளாவார்கள்.
Translation
'Tis source of dignity when 'true decorum' is preserved;
Who break 'decorum's' rules endure e'en censures undeserved.
Explanation
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.
Transliteration
Ozhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin
Eydhuvar Eydhaap Pazhi
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்