திருவள்ளுவர் தினத்தையொட்டி கடந்த ஜனவரி 16ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் பதிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருக்குறள், சாதாரணமானது அல்ல; இந்த பிரபஞ்சத்துக்கான வேதம். எளிமையான வரிகளில் ஏராளமான அர்த்தங்களை கொண்டது.
மனிதநேயத்தை வலியுறுத்தும் முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எப்போதோ எழுதப்பட்ட இந்த திருக்குறள், இப்போதைய காலத்துக்கும் பொருத்தமானதாக உள்ளது. திருக்குறள், எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையோ, தலைவரையோ, மொழியையோ, மதத்தையோ, ஜாதியையோ குறிப்பிடவில்லை. அனைத்து நாடுகளுக்கும், அனைத்து தரப்பினருக்கும் பொருத்தமானதாக உள்ளது.
இதனால் தான், திருக்குறளை பிரபஞ்ச வேதம் என்கிறேன். திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு தலை வணங்குகிறேன். இவ்வாறு, அந்த அறிக்கையில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய மனிதவள அமைச்சகம், திருக்குறளை இதுவரை மொழி பெயர்க்கப்படாத இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருக்குறளை, குஜராத்தில் பிறந்த பி.சி.கோகிலா என்ற பேராசிரியை, குஜராத்தியில் மொழி பெயர்த்து உள்ளார். இவர், தமிழகத்தை சேர்ந்தவர்.
பாரத பிரதமர் திருக்குறளுக்கு புகழாரம் சூட்டுவதை வரவேற்கும் இந்த வேளையில், தமிழ்மொழிக்கு உரிய ஆட்சி மொழி தகுதியை இந்திய அரசு வழங்க மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
|