திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்-தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான், அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? தடாது ஒழிந்தால் என்? ('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை;
இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
சினம் செல்லிடத்துக் காப்பான் காப்பான் - சினம் தாக்கக் கூடிய எளிய இடத்தில் அது எழாதவாறு அருளால் அல்லது அன்பால் தடுப்பவனே உண்மையில் அதைத் தடுப்பவனாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - அல்லாத வலிய இடத்தில் அது தானே எழாது அடங்குதலால் அதைத் தடுத்தாலென், தடுக்காவிட்டாலென்? இரண்டும் ஒன்றுதானே!
'செல்லிடம்' தவத்தில் தாழ்ந்தவரும் வறியவரும் அதிகாரமில்லாதவருமாம். 'அல்லிடம்' தவத்தில் உயர்ந்தவரும் செல்வரும் அதிகாரத்திற் சிறந்தவருமாம். வலிய இடத்திற் சினங்கொள்வதால் தனக்கே கேடாதலாலும், அதையடக்குவது அறமன்மையானும், 'காக்கினென் காவாக்காலென்' என்றார்.
கலைஞர் உரை:
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே
சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன?
காக்காவிட்டால் என்ன?
சாலமன் பாப்பையா உரை:
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கோபம் கொள்ளாதிருப்பது எதுவென்றால்) தன்னைவிட மெலிந்தவர்களிடத்தில் செலுத்திவிடாமல் கோபத்தை அடக்கு கிறவனே அதை அடக்கினவனாவான். மற்ற இடத்தில் அடக்கினா லென்ன, அடக்காவிட்டாலென்னை?
Translation
Where thou hast power thy angry will to work, thy wrath restrain;
Where power is none, what matter if thou check or give it rein?.
Explanation
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?.
Transliteration
Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk
Kaakkinen Kaavaakkaal En
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்