|
||||||||
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோருக்குச் சில ஆலோசனைகள்! |
||||||||
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துள்ளவர்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வருமான வரித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. வரிக் கணக்குத் தாக்கல் விவரத்துக்கும், வருமான வரித் துறையின் ஆண்டு தகவல் அறிக்கைக்கும் (Annual Information Statement - AIS) இடையே வேறுபாடு உள்ளதால், இந்த அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
அதனால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில் அபராதம், வட்டி என்று கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். இவற்றிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வருமானத் துறை வழங்கும் ஆண்டு தகவல் அறிக்கையைச் சரியாகப் பயன்படுத்த வேண்டியது முக்கியம் ஆகும்.
ஆரம்பத்தில் வருமான வரித்துறை சார்பாக 26AS என்ற அறிக்கை வழங்கப்பட்டு வந்தது. பிறகு, 26AS அறிக்கையுடன் கூடுதலாக ஆண்டுத் தகவல் அறிக்கையும் வழங்கப்படுகிறது.
26AS அறிக்கையில் வரி தாரரின் விரிவான பணப் பரிவர்த்தனை விவரங்கள் இடம் பெற்று இருக்காது. நிதியாண்டில் வரி செலுத்துபவரின் டி.டி.எஸ், டி.சி.எஸ் பிடித்த விவரங்கள் மற்றும் அதிக மதிப்பில் வாங்கிய சொத்துகள் மற்றும் பங்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள் பற்றிய விவரங்கள் மட்டுமே 26AS அறிக்கையில் இடம் பெற்றிருக்கும்.
வரி செலுத்துபவர்கள் பெரும்பாலும் 26AS அறிக்கையுடன் தங்களின் பணப் பரிவர்த்தனைகளைச் சரிபார்த்து, அதன் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்கிறார்கள். இப்படிச் செய்வதால் தாங்கள் சில பணப் பரிவர்த்தனைகளை வரிக் கணக்கு படிவத்தில் குறிப்பிட மறந்துவிடுகிறார்கள். அதன் விளைவு, வருமான வரித் துறையிலிருந்து அறிக்கை வருகிறது.
வருமானம், செலவுகள் பற்றிய கூடுதல் விவரங்களை ஆண்டு தகவல் அறிக்கையில் சரிபார்த்துவிட்டு, அதன் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்வது நல்லதாகும்.
இந்த இரண்டு அறிக்கைகள் வாயிலாக வரி தாரர் நமது பணப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஓரிடத்தில் அறிந்துகொள்ள முடியும். ஒருவர் நடப்பு நிதியாண்டில் பல்வேறு முறைகளில் ஈட்டிய வருமானம் மற்றும் செலவுகளை பான் நம்பரைக் கொண்டு வருமான வரித்துறையினர் ஒருங்கிணைத்து வழங்குவதே இந்த ஆண்டு தகவல் அறிக்கை ஆகும்.ய
ஓர் உதாரணத்துக்கு, பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலமாக ஒருவருக்கு வட்டி வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், வருமான வரி தாக்கல் செய்யும்போது சில விவரங்கள் விடுபட்டுப் போகலாம். அந்தக் குறையை நீக்கும் வகையில் அனைத்து விவரங்களும் இந்த அறிக்கையில் இடம் பெற்று இருப்பதால், எளிமையாக அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் தனிநபரோ நிறுவனங்களோ வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும்.
வருமான வரித்துறையின் அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளமான https://www.incometax.gov.in/iec/foportal/ மூலம் தனது கடவுச்சொல் விவரங் களை உள்ளிட்டு உள் நுழைந்தால் Service tab/AIS Option மூலம் இந்த அறிக்கையைத் தரவிறக்கம் செய்யலாம். இந்த அறிக்கையானது ஆண்டு தகவல் அறிக்கை சுருக்கம் மற்றும் ஆண்டு தகவல் அறிக்கை என்று இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. இந்த இரண்டு அறிக்கைகளையும் PDF ஃபார்மெட்டில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த அறிக்கை கடவுச் சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளதால் வரி தாரர் தவிர, மற்றவர்களால் அவ்வளவு சுலபமாக அறிந்து கொள்ள முடியாது. ஒருவர் தனது பான் அட்டை நம்பரை அவருடைய பிறந்த தேதியோடு இணைத்து கடவுச்சொல்லாகக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒருவரின் பான் நம்பர் ABBPN4678A ஆகவும், பிறந்த தேதி 12 நவம்பர் 1974 ஆகவும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த அறிக்கையைத் தரவிறக்கம் செய்ய abbpn4678a12111974 என்ற கடவுச்சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இந்த கடவுச்சொல் இதுபோல சிறிய எழுத்துகளில் (Small Letters) இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
நமது பல்வேறு பணப் பரிவர்த்தனைகள் கணினிமயமாக்கப்பட்ட நடைமுறை மூலம் எளிமையாக வருமான வரித் துறையால் கண்காணிக்கப்படுகின்றன.
26ஏஎஸ், ஏ.ஐ.எஸ் அறிக்கைகளில் உள்ள விவரங்களை உள்வாங்கிக்கொண்டு அனைத்து வருமானங்களையும், செலவுகளையும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதும் சந்தேகம் ஏற்பட்டால் தணிக்கையாளர் மூலம் கணக்குத் தாக்கல் செய்வது நல்லது.
|
||||||||
by hemavathi on 03 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|