சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.
தேவநேயப் பாவாணர் உரை:
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு-தம் குடியை யுயர்த்துதற்கேற்ற வினையைத் தவக்கமின்றி முயல்வார்க்கு; சூழாமல்தானே முடிவு எய்தும் -அம்முயற்சி அதற்கேற்ற சூழ்வினை வேண்டாது தானாகவே வெற்றியாக முடியும். தெய்வத்துணை யிருத்தலால், விரைந்த முயற்சி மட்டுமிருப்பின் எளிதாய் முடியும் என்பதாம். ’குடி’ ஆகுபொருளது.
கலைஞர் உரை:
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அந்த நம்பிக்கையுடன்) தம்முடைய குடித்தனத்தின் உயர்வுக்கான முயற்சிகளைத் தளராமல் செய்துகொண்டேயிருப் பவர்களுக்கு அந்த நோக்கம் தடையின்றித் தானாகவே பூர்த்தியாகும்.
Translation
Who labours for his race with unremitting pain,
Without a thought spontaneously, his end will gain.
Explanation
Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.