ஆராரோ ஆரிரரோ ஆறு ரண்டும் காவேரி, காவேரி கரையிலயும் காசி பதம் பெற்றவனே! கண்ணே நீ கண்ணுறங்கு! கண்மணியே நீ உறங்கு! பச்சை இலுப்பை வெட்டி, பவளக்கால் தொட்டிலிட்டு, பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீ உறங்கு! நானாட்ட நீ தூங்கு! நாகமரம் தேரோட! தேரு திரும்பி வர! தேவ ரெல்லாம் கை யெடுக்க! வண்டி திரும்பி வர! வந்த பொண்கள் பந்தாட! வாழப் பழ மேனி! வைகாசி மாங்கனியே! கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த கொஞ்சி வரும் ரஞ்சிதமே! வாசலிலே வன்னிமரம்! வம்மிசமாம் செட்டி கொலம்! செட்டி கொலம் பெத்தெடுத்த! சீராளா நீ தூங்கு! சித்திரப் பூ தொட்டிலிலே! சீராளா நீ தூங்கு! கொறத்தி கொறமாட! கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல! வேதஞ் சொல்லி வெளியே வர! வெயிலேறி போகுதையா! மாசி பொறக்கு மடா! மாமன் குடி யீடேற! தையி பொறக்குமடா - உங்க தகப்பன் குடி யீடேற! ஆராரோ ஆரிரரோ கண்ணே நீ கண்ணுறங்கு!
ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே அம்புட்டுதாம் அப்பனுக்கு வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி விதம்விதமா அம்புட்டிச்சாம், அரண்மனைக்கு ஆயிரமாம் ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி அப்பன் விற்று வீடுவர அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி ஆச்சரியப் பட்டார்களாம், பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான் பிரியமாக ஆறெடுத்தேன் அயலூரு சந்தையிலே-கண்ணே நான் ஆறு மீனை விற்றுப் போட்டேன். அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன். அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான் அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன் அழகைப் பார்த்து அரண்டார்களே. அத்திமரம் குத்தகையாம் ஐந்துலட்சம் சம்பளமாம் சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச் சர்க்கார் உத்தியோகமாம்
பால் குடிக்கக் கிண்ணி, பழந்திங்கச் சேணாடு நெய் குடிக்கக் கிண்ணி, முகம் பார்க்கக் கண்ணாடி கொண்டைக்குக் குப்பி கொண்டு வந்தான் தாய்மாமன்.
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன் சேனைக் கெல்லாம் அதிகாரியாம் சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப் பல வர்ணச் சட்டைகளும் பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு கட்டிக் கிடக் கொடுத்தானோ! பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு மின்னோலைப் புஸ்தகமும் கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே கவிகளையும் கொடுத்தானோ !
உசந்த தலைப்பாவோ ‘உல்லாச வல்லவாட்டு’ நிறைந்த தலை வாசலிலே வந்து நிற்பான் உன் மாமன் தொட்டிலிட்ட நல்லம்மாள் பட்டினியாப் போராண்டா பட்டினியாய் போற மாமன்-உனக்கு பரியம் கொண்டு வருவானோ?
ஆராரோ அரிரரோ அரிரரோ அராரோ
அரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சரார் கற்பகத்தைத் தொட்டாரார் தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு வைப்போம் அடிச்சாரைச் சொல்லியழு ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ மல்லி பூ சென்டாலே அண்ணன் அடித்தானோ ஆவாரங் கொம்பாலே பாட்டி அடித்தாளோ பால் வடியும் கம்பாலே
ஆராரோ அரிரரோ அரிரரோ அராரோ
அரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு
|