LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

தமிழக வேளாண்மை அன்றும் இன்றும் - பாமயன் !

பண்டைத் தமிழர்களின் வேளாண்மைக் காலத்தை மிகக் குறிப்பாக அறுதியிட்டுச் சொல்ல முடியாதெனினும், நாகரிகம் என்று இப்போது ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிற காலத்திற்கும் முந்தையது என்பதில் சிறிதும் ஐயமில்லை. உலகிலேயே வாழ்நிலப் பகுதிகளை திணை மண்டலங்களாகப் பகுத்து அதை இலக்கணப்படுத்தியவர்கள் தமிழர்களே என்பது பல ஆய்வாளர்களின் ஆணித்தரமான கருத்தாகும். இது இன்று அறிவியலாளர்கள் பகுக்கின்றன திணைமவியல் (Ecological Zones) பகுதிகளுக்கு சற்றும் குறைந்ததன்று.

 

குறிஞ்சி எனப்படும் மலையும் மலை சார்ந்த நிலமும்,

 

முல்லை எனப்படும் காடும் காடு சார்ந்த நிலமும்

 

மருதம் எனப்படும் வயலும் வயல் சார்ந்த நிலமும்

 

நெய்தல் எனப்படும் கடலும் கடல் சார்ந்த நிலமும்

 

நாநிலம் என்று அழைக்கப்பட்டது. இதற்கடுத்தாற் போல் வறட்சிக் காலத்தில் முல்லை, குறிஞ்சி என்ற பகுதிகளை பாலை என்று பிரித்தனர். ஆனால் இதற்கு ஏனைய நிலத்தைப்போல் நிலையான நிலம் கிடையாது. எந்த இடத்தையும் இயற்கை பாலையாக ஆக்குவதில்லை என்பதற்கு மிக அறிவியல் வகைப்பட்ட பார்வையாக இஃது உள்ளது.

 

குறிஞ்சி நில வேளாண்மை மிகவும் பழமையானது. ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து - அது அடர்ந்த காடாக இருந்தால் - அதைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு அந்த இடத்தில் விதைகளைத் தூவிவிடுவார்கள். (அல்லது காட்டுப் பன்றி மண்ணைக் கீறி கிழங்குகளைத் தின்றுவிட்டுப் போன இடங்களில் விதைப்பார்கள்) தவசங்கள் இயல்பாக விளைந்து விடும். குளிர்ந்த காடுகளாக இருப்பதால் எப்போதும் மழை இருக்கும். ஆகவே குறிஞ்சி நில மக்கள் ஏர் கொண்டு உழாமல் வேளாண்மை செய்தனர். இதை மலைபடுகடாம் என்ற கடைச்சங்க நூல், ''தொய்யாது வித்திய துளர்பாடு துடவை'' என்று குறிப்பிடுகிறது. அதாவது ''உழாது விதைத்த நல்ல விளைநிலம்'' என்று பொருள். வளப்பமான அந்தக் குறிஞ்சி நிலத்தில் உழவேண்டிய தேவை இல்லை. அங்கு பற்றாக் குறையாக இருப்பது சாம்பல் ஊட்டம் (பொட்டாசியம்) மட்டுமே. அதற்காக அம்மக்கள் எரிந்துவிட்டு விதைக்கிறார்கள். இன்று உலகம் முழுமையும் பேசப்படுகிற அறிஞர் ஃபுகோகா கூறுகின்ற உழாத வேளாண்மையை அன்றைய தமிழர்கள் மிக இயல்பாகச் செய்திருக்கின்றனர். மேலும் குறிஞ்சி நிலத்தில் முதன்மை விளைபொருள் ஐவன வெண்ணெல்லும் தினையும் ஆகும். நன்செய் நிலத்தில் உள்ளது போன்ற சம்பா நெல் அங்கு இல்லை.

 

முல்லை நிலத்தில்தான் கலப்பையின் வருகை தொடங்குகிறது. அந்தக் கலப்பைகூட எளிய கலப்பைதான்.

 

பெரும்பாணாற்றுப்படை என்ற நூல்,

 

''பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்

 

களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்

 

குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி'' (196-199)

 

என்று தவசங்களைத் சேர்த்து வைக்கின்ற குதிர்களையும் கலப்பையையும் குறிப்பிடுகின்றது.

 

இதே கலப்பை மருத நிலத்திற்கு வரும்போது அகன்று விரிந்து ஆழ உழும் திறன் மிக்கதாய் ஆக்கப்படுகின்றது. பெரும்பாணாற்றுப் படையில்,

 

''குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்

 

நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி

 

பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்

 

உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி''

 

என்று பெண் யானையின் வாயைப் போன்று மடிந்து அகன்று இருக்கின்ற பெரிய கலப்பையான நாஞ்சில் கலப்பை மருத நிலத்தில் வருகின்றது. இதை ஆழமாக ஊன்றி இழுப்பவை வலிமையான பகடுகள் எனப்படும் பெரிய மாடுகள். இவை எவ்வளவு பள்ளம் இருந்தாலும் மண்டி போட்டு இழுக்கும் ஆற்றல் பெற்றவையாம். இதை வள்ளுவப் பெருமான் ''மடுத்தவாயெல்லாம் பகடன்னான்'' என்று மிகுந்த முயற்சி உடையவனுக்கு இணையாகப் பகடைக் கூறுகிறார். வலுவான மாடுகள், அகன்ற கலப்பைகள் என்று வேளாண்மை மருத நிலத்தில் புதிய வடிவம் எடுக்கின்றது. விளைந்த தவசங்களைச் சேர்த்து வைக்க மிகப் பெரிய குதிர்களை அன்றைய மக்கள் வடிவமைத்திருந்தனர். ''ஏணி எய்தா நீள் நெடு மார்பின்'' (பெரும்-245) என்று மிக உயரமான குதிர்களைக் குறிப்பிடுகின்றது.

 

விளைந்த விளைச்சலும் மிக அதிகமாகவே இருந்திருக்கின்றது. பொருநர் ஆற்றுப்படை என்ற நூல்

 

''சாலி நெல்லின் சிறைகொள் வேலி

 

ஆயிரம் விளையுட்டு ஆக'' என்று குறிக்கின்றது.

 

வேலி நிலம் ஆயிரம் கலம் விளைந்தது என்பதற்கு இது ஒரு சான்று.

 

இதேபோல ஒரு கைப்பிடியில் ஏழு எள் காய்கள் இருக்குமாறு விளைச்சல் திறன் இருந்துள்ளது. அவ்வளவு திறட்சியான காய்கள் இருந்துள்ளன. அதில் இருக்கும் எண்ணெயின் அளவும் அதிகமாக அதாவது கையில் வைத்துப் பிழிந்தாலே ஒழுகும் வண்ணம் இருந்துள்ளது.

 

''கௌவை போகிய கருங்காய் பீடியேழ்

 

நெய்கொள வொழுகின''

 

என்று மலைபடுகடாம் (102) கூறுகிறது.

 

மிகப் பண்டைய இலக்கணமான தொல்காப்பியம். ''ஏரோர்களவழி'' என்ற ஒரு குறிப்பைத் தருகிறது. ஏறத்தாழ கி.மு.800 ஆண்டைச் சார்ந்த இந்நூல் தொழில் பகுப்பை வைத்து இலக்கணம் வகுத்துவிட்டது. இதில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற தொழில் பிரிவுகளையும் குறிப்பிட்டு உழவுத் தொழில் செய்பவர்களை ஒரு பிரிவாகப் பதிவு செய்கிறது. ஆயினும் இதில் வேளாண்நுட்பங்கள் பற்றி அதிகம் இல்லை. ஆனால் கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக் கால இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை உழவுத் தொழிலை மிக விரிவாக 196-240 வரிகளில் விளக்கியுள்ளது.

 

உழவின் பெருமை பற்றியும் அதன் இன்றியமையாமை பற்றியும் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் யாவையும் தவறாமல் குறிப்பிடுகின்றன. வேத (வைதீக) நூல்கள் மண்ணைக் கீறுவது பாவம் என்று உழவுத் தொழிலை குறித்தபோது தமிழிய நூல்கள் உழவைப் பெருமைக்குரியதாகக் கருதின.

 

''உழுதுண்டு வாழ்வாரே வாழவார் மற்றெல்லாந்

 

தொழுதுண்டு பின்செல்வர்'' என்றும்

 

''பலகுடைநீழலும் தன்குடைக் கீழ் காண்பர்'' என்றும் குறள் சொல்கிறது. உழவர்கள் போர் செய்யும் உரிமையும் கொண்டனர் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

 

''வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும் வாய்த்தனர் என்ப அவர்பெறும் பொருளே'' (தொல்: 626) (பொருளதிகாரம் மரபியல்)

 

வேளாண்மை என்ற சொல் விருப்பத்துடன் பிறரைப் பேணுதல் என்ற பொருள் கொண்டதாகும். (வேள்-விருப்பம்).

 

கம்பர் உழவுத் தொழிலை மிகவும் உயர்த்திக் கூறுகிறார். அதைத் ''திருக்கை வழக்கம்'' என்று சிறப்பிக்கிறார். மற்றோர் இடத்தில் மன்னர்களையே தூக்கி எறிந்து உழவர்களை உயர்த்திப் பேசுகிறார்.

 

''மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்குங்கை

 

ஆழிதரித்தே அருளும்கை-சூழ்வினையை

 

நீக்குங்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி

 

காக்கும்கை'' என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

 

இதையே பெரும்பெண் புலவர் ஒளவையார் வேறு மொழியில் கூறுகிறார்,

 

''ஆற்றங்கரையின் மரமும் அரசுஅறிய

 

வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றோ-ஏற்றம்

 

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

 

பழுதுண்டு வேறோர் பணிக்கு'' என்று நல்வழியில் கூறுகிறார். இத்தகைய சிறப்பான தொழில் இன்று சிதைந்து சிறுத்துப் போய்விட்டதை நினைத்தால் நெஞ்சம் கனக்கும்.

 

உலகிற்கு அரிசியை அறிமுகம் செய்த பெருமை தமிழர்களைச் சாரும். அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்புவரை அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது. அலெக்சாண்டருடன் வந்த அரிஸ்டாட்டில் அன்றைய சிந்தாற்றின் (Indus river) தென்புறமுள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் பெரியதொரு குழுவினருடன் வந்து திரட்டிச் சென்றுள்ளார். அதில் ஒன்றுதான் அரிசி. தமிழிசையும் அவ்வாறு ஐரோப்பா சென்றுள்ளதை அறிஞர்கள் நிறுவியுள்ளனர்.

 

மேலும் பல மேல்திசை, கீழ்திசை நாடுகளுக்கெல்லாம் அரிசி அரேபிய வணிகர்களால் கொண்டு செல்லப்பட்டது. கி.மு. 300-களில் அரிசி, ஆப்பிரிக்கக் கடலோர நாடுகளுக்கு (எகிப்து, எத்தியோப்பியா, பாரசீகம்-இன்றைய ஈரான்) கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் தோன்றிய பேரரசான ரோமப் பேரரசின் (இன்றைய இத்தாலி) கீழ் இருந்த சிசிலி வழியாக அரிசி ஸ்பெயின் தேசம் சென்றது.

 

அரபி மொழியில் - அல்ருஸ் (al-ruz)

 

ஸ்பானிய மொழியில் - அராஸ் (arroz)

 

இலத்தின் மொழியில் - ஒரைசா (oryza)

 

இத்தாலியில் - ரைசே (riso)

 

பிரெஞ்சு மொழியில் - ரிஸ் (riz)

 

ஜெர்மனியில் - ரெய்ஸ் (reis)

 

ஆங்கிலத்தில் - ரைஸ் (rice)

 

இப்படியாக படிப்படியாக ஒலி மாற்றம் பெற்றது அரிசி. ஆனால் இன்று ஆங்கில அகராதிகளில் இதை இலத்தின் சொல் என்று போட்டு விட்டு, கீழைத் தேசத்துத் தோற்றம் என்றும் தோற்றம் தெரியாதவாறு குறித்துள்ளனர். என்னே இன்றைய தமிழர்களின் விழிப்புணர்வு!

 

எவ்வாறு அரிசியை உலகிற்கெல்லாம் கொடுத்தார்களோ அதேபோல உலகின் பிற பகுதிகளில் இருந்து வேறு சில பயிர்களைத் தமிழகத்திற்கு பண்டைத் தமிழர்கள் கொண்டு வந்துள்ளனர். கரும்பு என்பது பலராலும் இன்று விரும்பப்படும் பயிர். ஆனால் அது நமது பழம்பண்டைப் பயிரன்று. வெளியில் இருந்து வந்தது. நமக்கென்று இனிப்பைப் கொடுத்து வந்தது பனையாகும். அதியமான் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னனின் முன்னோர்கள் கிழக்காசிய நாடுகளில் இருந்து கரும்பைக் கொண்டு வந்ததாக இலக்கியக் குறிப்பு உள்ளது. கரும்பின் தோற்றகத்தை இன்று பயிரியல் அறிஞர்கள் கிழக்காசியா என்றே கூறுகின்றனர்.

 

''அரும்பெறல் அமிழ்த மன்ன

 

கரும்பிவட்டந்தோன் பெரும் பிறங்கடையே'' என்று அதியமானின் மகன் பொகுட்டெழுனியைப் பார்த்து ஒளவைப் புலவர் கூறுகிறார். (புறம்:392)

 

மாமழை போற்றுதும்

 

வேளாண்மைக்கு அடிப்படை நீர். ''நீரின்று அமையாது உலகு'' என்பார் வள்ளுவர். பண்டைத் தமிழ் மக்கள் நீரின் மீது வைத்திருந்த மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் நமக்கும் வியப்புத் தருவன. ஆனால் அந்த மரவில் வந்த இன்றைய மக்கள் நீரை எவ்வளவு மோசமாகப் பயன்படுத்துகின்றனர் என்பது அதைவிட வியப்புக் கலந்த வேதனை உண்மையாகும்.

 

''மாமழை போற்றுதும் மாமழைபோற்றுதும்'' என்பார் இளங்கோவடிகள். மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டுவந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டு விட்டது. பட்டினப்பாலையில் ''வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இந்தப் பூவுலகில் உள்ள நீரின் அளவு மாறுபடாதது என்ற அறிவியல் உணமையையும் அவ்வரிகள் குறிப்பிடுகின்றன.

 

இதேபோல, ''மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை

 

பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்'' (நற்றிணை-99)

 

என்ற பாடல் வரிகள் நீர் பொழியும் அறிவியலைக் கூறுகிறது.

 

அகநானூறு, ''மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி ............

 

பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை'' என்று கூறுகிறது.

 

ஆனால் அந்தக் கால மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பாக கிரேக்க நாட்டு ஞானிகளான ''தேல்ஸ்'' மற்றும் இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் ''அரிஸ்டாட்டில்'' போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்­ருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் இப்படிக் கடல் நீரை உறிஞ்சும்போது அதன் உப்பு மண்ணில் கரைகிறது. வானத்தில் உள்ள காற்று குளிர்ந்ததும் அது மழையாகிறது என்றும் கூறியுள்ளனர் (Hydraulies and hydraulic Research-A Historical Review) இதுதான் கி.பி. 1500 வரை அவர்களுக்கு இருந்த கருத்து. திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ''மாறாநீர்'' (குறள்:701) பற்றி தெளிவுபடக் கூறியுள்ளார். இதற்கு முன்பே சங்க இலக்கியங்கள் கூறியதை நாம் பார்த்தோம்.

 

மழையை உலகத்தின் அச்சாணியாகப் பார்த்துள்ளனர்,

 

''உலகிற்கு ஆணியாகப் பலர் தொழப்

 

பலவயின் நிலைஇய குன்றின் கோடு தோறும்

 

.........

 

இரவுப் பெயல் பொழிந்து உதவியோயே'' (நற்:139)

 

என்ற வரிகள் மழையை மக்கள் பார்த்த பார்வையைக் கூறுகிறது. ஆனால் நமது தமிழ்க் குழந்தைகள் இன்று ஆங்கிலப் பள்ளிகளில் ரெயின் ரெயின் கோ அவே (rain rain go away) அதாவது ''மழையே, மழையே! போ, போ!'' என்று பாடுகின்ற அவலத்தைக் காணுகின்றோம்.

 

வேறுபாடு இல்லாமல் எல்லாரையும் சமமாகப் பாவிக்க வேண்டியது மன்னனின் பண்புகளில் தலையாயது என்பது பண்டைத் தமிழர்களின் கோட்பாடு, சாதிக்கொரு நீதி என்பது தவறு என்பது அதன் அடிப்படை, இதைக் கூறவந்த புலவர் அதற்கு எடுத்துக் காட்டாக மழையைக் கூறுகின்றார்.

 

''அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்

 

உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்

 

வரையா மரபின் மாரி'' (புறம்:142)

 

வற்றிப் போய்விட்ட குளத்தை நிரப்பியும் அதேபோல வேறுபாடு இல்லாமல் அகன்ற வயல்களின் மீது பொழிந்தும் விளைச்சலே தராத உவர்நிலப் பகுதிகளிலும் நீரைச் சொரிந்தும் பாகுபாடு இன்றிக் கொடுக்கும் மழை என்பது இதன் பொருள்.

 

மாரி (மழை) என்பது தமிழகத் தாய்த் தெய்வத்தின் பெயர்.

 

வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வள்ளுவர் படைத்துள்ளார். ''உணவாகி, அப்படியான உணவிற்கும் உணவாகும்'' மழை பற்றி (துப்பார்க்கு துப்பாகி....) அவர் இயற்றியுள்ள அதிகாரம் அனைவரும் நன்கு அறிந்ததே.

 

மழைபற்றிய அறிகுறிகளை பண்டை மக்கள் மிகக் கவனமாகக் பதிந்தள்ளனர். விண்மீன்களும் கோள்களும் அமையும் அமைப்பை வைத்தே மழை பொழியும் வாய்ப்பைக் கணித்துள்ளனர்.

 

''வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர

 

வறிதுவடக்கு இறைஞ்சிய நீர்சால் வெள்ளி

 

பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்பக்

 

கவிழுங் கருவியொடு கையுற வணங்கி

 

மன்னுயிர் புரைஇய வலனேர்பு இரங்கும்

 

கொண்டல் தண்டளிக் கமஞ்சூல் மாமழை''

 

கதிரவன் வானில் வரும்போது வடக்கிருந்து ஒளிமிக்க வெள்ளியானது ஆநியம் எனப்படும். மூலத்தில் இருக்க நல்ல மழை கிடைக்கும் என்ற செய்தி உள்ளது.

 

இதேபோல முக்கூடல் பள்ளு,

 

மழை வருவதற்கான குறிகளாக, நண்டுகள் சேற்றைக் குழைந்து வளைகளை அடைப்பதும், மரக்கிளைகள் சுழன்று காற்று அடிப்பதும், மேற்கிலும் தெற்கிலும் மின்னல் சூழ்ந்து வெட்டுவதும், வானம்பாடிகள் மழைக்காக வானத்தில் பறப்பதும் கூறப்படுகின்றன. ஆற்று வெள்ளம் றாளை வர.... என்ற பாடல் இதை நன்கு விளக்கும்.

 

மழைநீரைச் சேர்த்து வைத்து வேளாண்மை செய்ய வேண்டும். என்ற நிலை குறிஞ்சி நிலத்தில் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு அருவி நீரும் சுனை நீரும் எப்போதும் குறைவின்றிக் கிடைத்து வந்தன. அது மட்டுமல்லாது அவர்களது வேளாண்மை முறையானது மழைப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் உயர்ந்த மலைகளில் போதுமான மழைப் பொழிவு அப்போது இருந்ததால் அவர்கள் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் திணை விதைப்பதும், ஐவன வெண்ணெல் விதைப்பதும் அறுப்பதுமாக இருந்தனர். இந்த மழைப் பாசன மக்கள் காடுகளை உயிர்போலக் காத்தனர். இவர்களது தேவை மிகக் குறைவு. எனவே இயற்கை இவர்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டே இருந்தது. தலைவி தலைவனது வருகைக்காக காத்திருந்து மழை வந்ததும் அதற்கு நன்றி சொல்வாள். என் இனிய மழையே உனக்கு நன்றி. எனது தலைவனை விரைவில் வரச் செய்த உனக்கு நன்றி என்று சொல்வாள். அதே சமயம் மற்றொருத்தி ''அட மழையே ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய்? என் தலைவன் இன்னும் வரவில்லை. நீயோ அதற்குள் வந்து என்னை இன்னலில் ஆழ்த்துகிறாயே! என்று திட்டுவாள். ஆக மக்களின் உணர்வோடும் வாழ்வோடும் ஒட்டிப் போன இந்த மழை முல்லைநிலத்திலும் அதே போலப் பார்க்கப்பட்டது. மாடுகளும் ஆட்டு மந்தைகளும் மழையில் நனைந்து கொண்டு நடுங்குவதும் கோவலர்கள் குழலை மறந்து நடுக்கத்தில் பல்லால் இசைப்பதும் சுவையான பதிவுகள்.

 

மருத நிலம்தான் பாசனத்தில் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது. ஓடும் ஆற்றின் போக்கைத் தடுத்து அதை வேண்டிய இடத்தில் வேண்டிய முறையில் பயன்படுத்த முனைந்த இந்தச் சாதனை மாந்தர்குல வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவே அமைந்து விட்டது. சுமேரிய, எகிப்து, சிந்து நாகரிகங்கள் தோன்றுவதற்கும் இதைப் போன்ற வேறு பல நாகரிகங்கள் கால் கொள்வதற்கும் இது வழிகாட்டிற்று. மெசபடோமியாவில் பண்டைய மக்கள் செய்த அணைக்கட்டுமானங்கள் அவர்களுக்கு விளைச்சலை அதிகம் கொடுத்ததோடு மட்டுமல்லாது, அடிக்கடி ஏற்பட்ட வெள்ளச் சேதத்தையும் குறைத்துள்ளது. ஊர், என்ற இடத்தில் அவர்கள் அமைத்த நீர்த் தடுப்புகள் பற்றிய செய்திகளை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

எகிப்து மக்கள் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பே நைல் ஆற்றில் நீர் வரும் அளவைக் குறிக்க ஒரு அளவுமானியை நிறுவியுள்ளனர். அதன் பெயர் நைலோமீட்டர் என்பதாகும். இவர்கள் களிமண் போன்ற எளிதில் கரையாத மண்ணைக் கொண்டு அணைகளை அமைத்துள்ளனர். சிந்துச் சமவெளி மக்கள் அணைகளை அமைத்து நீரைத் தேக்கி பாசனத்தை விரிவாக்கியுள்ளனர். இவர்கள் கட்டிய அணைகளை ஆரியர்கள் எனப்படும் கால்நடை மேய்த்துக் கொண்டு வந்த மக்கள் உடைத்துள்ளனர். இதைத் தங்களது நூலான ரிக் வேதத்தில் குறித்துள்ளனர்.

 

''நதிகளை விடுவித்த காரணத்தால் இந்திரன் மீண்டும் மீண்டும் போற்றப்படுகிறான். வான் மேகமாகக் குவிந்துள்ள நீரை அவன் விடுவிக்கிறான். இந்திரனால் விடுவிக்கப்பட்ட நதியில் செயற்கையான தடுப்புகளைப் போட்டு நீரோ‘ட்டத்தைத் தடுத்துள்ளனர். அசுரனாகிய விரித்திரன் ஒரு பாம்புபோல மலைச்சரிவில் படுத்துக் கிடக்கிறான். அவனை இந்திரன் கொன்றதும் வண்டிச் சக்கரங்களைப் போல கற்கள் உருண்டன. இந்த அரக்கனின் மூச்சற்ற உடலின் மீது நீர் பிரவாகமாக ஓடிற்று'' என்று குறிப்பு உள்ளது.

 

இவ்வாறு பண்டைச் சமூகங்கள் ஆறுகளின் மீது அணைக்கட்டுவதும் அவர்களை எதிர்க்க முனையும் மற்றொரு குழுவினர் அதைச் சிதைப்பதும் காணப்படுகிறது. ஐரோப்பியர்கள் பாசனம் பற்றி பண்டைக் காலத்தில் அறிந்திருக்கவில்லை. நைல் ஆற்று அணைகள் மிகப் பழமையானது என்ற போதிலும் உலகின் பழமையான இன்றும் பயன்பாட்டில் உள்ள அணைக்கட்டு கரிகாலன் கட்டிய கல்லணை ஆகும். கல்லணை கி.பி., 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது சிலப்பதிகார காலம் எனலாம். இதற்கும் முன்பே தமிழகத்தில் பாசனக் கட்டுமானங்கள் பல இருந்துள்ளன. தமிழகத்தில் இன்றுவற்றிப் போய்விட்ட ஆறுகள் பல அன்று தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தன. வைகையைக் கடக்க கோவலனும் கண்ணகியும் படகில் வந்ததை சிலப்பதிகாரம் கூறுகிறது.

 

இந்த ஆறுகளைத் தவிர்த்து மிக அதிக அளவில் செயற்கைக் குளங்களை அமைத்திருந்தனர். ஏனெனில் தமிழ்நாட்டில் ஆற்றுப்பாசனப் பகுதிகள் மிகவும் குறைவு. ஆகவே பரந்துபட்டு வேளாண்மை செய்ய வேண்டுமாயின் நீரைச் சேமிக்க வேண்டும். அதற்காக பல்வேறு அமைப்புகளை உருவாக்கினர். படுகர், தாங்கல், கேணி, பல்வலம், படு, பட்டம், மடு, உவளகம், பண்ணை, வாவி, வட்டம், தடம், கயம், பயம், தடாகம், குளம், குட்டம், கிடங்கு, சூழி, அலந்தை, குண்டம், பங்கம், இலஞ்சி, கோட்டம், பொய்கை, ஏல்வை, ஓடை, ஏரி, கண்மாய் என்று 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இருந்துள்ளன. இது தவிர சுனை, பொழில் போன்ற இயற்கை நீர் நிலைகள் தனி. நீரோட்டத்தை உருவாக்கியுள்ளனர். அது வாரம், பாரம், போடு, வரை, அணை, கூலம், தீரம் என்று பெயர் பெற்றுள்ளன. இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் தனித் தன்மை கொண்டவை. இவற்றிற்குள் வேறுபாடுகள் உண்டு.

 

இப்படிப்பட்ட கட்டுமானங்களை எல்லா மன்னர்களும் செய்துள்ளனர். அவர்களது நோக்கம் இடம் விட்டு இடம்பெயராமல் வேண்டுமளவு விளைச்சல் எடுக்க வேண்டும் என்பதே. அதன் மூலம் தங்களது பெருமையையும் புகழையும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதினர். தங்களைக் பாடும் புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்தனர். பாசனத்தைப் பெருக்குவதன் மூலம் விளைபொருள் மீத்தம் அதிகமாயிற்று. இதனால் அண்டை நாட்டு மன்னர்களைவிட தான் உயர்ந்தவன் என்று காட்டிட ஏதுவாயிற்று. எனவே மன்னர் ஒருவரை விஞ்சி ஒருவர் பாசனத்தை விரிவாக்குவதில் முனைப்பாக இருந்தனர். கலைகளும் தொழில்களும் பல்கிப் பெருக இந்த பாசனமே அடிப்படையாயிற்று. இன்னும் மாந்தர்குல வரலாற்றில் பாசனத்தில் பிடிமானம் தளரவேயில்லை. பல்வேறு உலக நாடுகள் இன்று நாடுவிட்டு நாடு பாயும் ஆறுகளைத் தடுத்து பாசனக் கட்டுமானங்களை நிறுவி வருகின்றன. காலங்காலமாக இருந்த பாசன உரிமைகள் மறுக்கப்படுகின்றன. காவிரியில் கர்நாடகம் தமிழ்நாட்டின் உரிமையை தொடர்ந்து மீறி வருவதை நாம் அறிவோம். உச்ச நீதிமன்ற ஆணையையும் மீறுகின்றனர். நீதிமன்ற ஆணையையும் மீறுகின்றனர். நீதிமன்ற அவமதிப்புச் செய்த பின்னும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இவ்வாறு பாசனம் என்பது போர்களுக்கான பொருளாக அன்றும் இன்றும் இருந்து வருகிறது.

 

கரிகாலன்

 

பட்டினப்பாலையும், பொருநராற்றுப் படையும் புகழ்ந்துபேசும் பெருமைக்குரிய மன்னன் கரிகாலன். இவன் வழக்கமான மன்னர்களைப் போல போர்களில் ஈடுபட்டாலும் வடநாட்டு அசோகனுக்கு இணையாக மரம் நடுவது, குளம் வெட்டுவது என்பதோடு கால்நடைகளுக்கான மருத்துவமனைகளையும் ஏற்படுத்தியுள்ளான்.

 

''தண்கேணித் தகைமுற்றத்து

 

பகட்டெருதின் பலசாலை''

 

என்ற பட்டினப்பாலை வரிகள் இதைக் கூறுகின்றன.

 

இவனது மிகப்பெரும் பணிகளின் ஒன்று காவிரியில் கல்லணை கட்டியது.

 

இவன் வேளாண்மையைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றியவன். வடநாட்டு அசோகனுக்கு இணையாக வைத்துப் போற்றப்பட்ட வேண்டியவன்.

 

''அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும்

 

கரிகாலன் காவிரிசூழ் நாடு'' (பொருநர்)

 

என்று இவனைப் பாடுகின்றன இலக்கியங்கள்.

 

கி.பி. முதல்நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கரிகால் பெருவளத்தானின் மற்றொரு பெயர் திருமாவளவன். இவன் தொடர்ந்து வெள்ளச் சேதம் ஏற்படுத்திவந்த காவிரிக்கு அணைபோட்டான். அந்த அணை இயற்கையின் போக்கை உணர்ந்து கட்டப்பட்ட அணை. இந்த அணை கட்டப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை வியந்து போற்றுகிறார் ஆங்கிலேய நாட்டுப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன் என்பவர். இவர் தனது தொப்பியைக் கழற்றி ''ஓடும் நீரில் அணை கட்டும் தொழில் நுட்பத்தை எனக்கு விளக்கிக் காட்டியுள்ள இந்தக் காவிரி அணை கட்டிய முன்னோர்களை நான் வணங்குகிறேன்'' என்றாராம். ஏனெனில் ஓடும் நீரின் மீது அணை கட்டுவது என்பது மிகவும் கடினமான பணி. காரையோ சுண்ணாம்போ கரைந்துகொண்டே போய்விடும். அல்லது நீரை வேறுபக்கம் திருப்பிவிட்டு அணையைக் கட்டிய பின்பு பாதை மாற்றவேண்டும். ஆனால் இது காவிரியில் இயலாது. வெள்ளக் காலங்களில் இப்போதே நொடிக்கு 2 லட்சம் கனமீட்டர் நீர் பாயும் ஆற்றைத் திருப்புவது கடினம். அன்றைய காலத்தில் கன்னட நாட்டினர் அணை ஏதும் கட்டாதபோது, இப்போதை விட மிகப் பெரிய அளவில் காட்டு வளம் உள்ளபோது எவ்வளவு தண்­ர் வரும் என்று நாம் கணக்கிடலாம்!

 

இதனால் பண்டைத் தமிழர்கள் மிக அருமையான நுட்பத்தைக் கடைப்பிடித்தனர். நாம் நீரோடும் ஆற்றங்கரையிலோ அல்லது அலைவந்து விழும் கடற்கரையிலோ நின்றோமென்றால் நீர் வந்து பாயும்போது நமது கால்கள் மண்ணில் மெல்ல மெல்ல பதிவதைக் காணலாம். அதாவது நீரோட்ட மணலை அரித்துக் கொண்டுபோக கனமான நமது கால்கள் மண்ணுள் பதியும். இந்த நுட்பத்தைத்தான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஓடும் நீரோட்டத்தின் மீது பெரிய பாறைகளை வைப்பர். அது மெல்ல மெல்ல மணலுள் பதிந்து அடியில் பாறைப் பகுதியை அடையும். அதன்பின்னர் அதே இடத்தில் மற்றொரு பாறைத்துண்டை வைப்பர். அதுவும் கீழே சென்று தங்கும். இவ்வாறு வைக்கும்போது இரண்டு பாறைகளுக்கிடையில் ஒருவகையான கரையாத தன்மை கொண்ட களிமண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். தஞ்சைப் பகுதியில் பெரும்பாறைகள் கிடைப்பது மிகவும் கடினம். புதுக்கோட்டையில் இருந்தோ அல்லது அதைவிடத் தொலைவில் இருந்தோதான் கல் கொண்டுவர வேண்டும். இத்தகைய இடர்ப்பாடுகளைத் தாண்டி கல்லணை கட்டப்பட்டதை நினைத்தால் நமக்கு வியப்பாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த அணையை பேயர்டு சுமித் என்பார் தென்னிந்திய பாசனம் (Irrigation in South India) என்ற நூலில் இது ஒரு மிகச் சிறந்த சாதனை என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் ஆற்றுப்படுகையில் அணைகட்டும் தொழில்நுட்பம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியால்தான் கண்டறியப்பட்டது. ஆர்தர் காட்டன் இந்த அணையை ''பெருமித அணை'' (Grand Anaicut) என்று பெயரிட்டழைத்தார். இப்பெயர்தான் இன்று உலகெங்கும் அழைக்கப்படுகிறது.

 

ஏன் இந்த அணை அன்று கட்டப்பட்டது என்றால் திருவரங்கம் எனப்படும் தீவுப்பகுதியில் காவிரி பிரிந்து கொள்ளிடம் என்றும் காவிரி என்றும் ஓடி மீண்டும் கல்லணைப் பக்கம் இணைகிறது. பொதுவாக காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம் என்று கூறுவார்கள். திருவரங்கம் அருகே கொள்ளிடத்தின் அமைப்பு நிலமட்டத்தைவிட உயர்வாக உள்ளது. அதே சமயம் கல்லணைப் பக்கம் வந்தவுடன் அதன் நிலமட்ட உயரம் குறைகிறது. இதனால் அந்தக் காலத்தில் அடிக்கடி காவிரி உடைந்து பெரும் வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தடுக்கும் பொருட்டு உடைக்கின்ற இடத்தில் ஆற்றின் போக்கை மிக இயல்பாக அணை ஒன்று கட்டி திருப்பிவிட்டுள்ளனர். இதனால் வெள்ளச் சேதம் குறைந்ததோடு வேளாண்மையும் பெருகிற்று.

 

பல்லவர் தந்த பாசனம்

 

சங்ககாலத்திற்குப் பின்வந்த களப்பாளர்கள் எனப்படும் களப்பிரர்கள் பற்றிய செய்திகள் குறிப்பாக வேளாண்மை பற்றிய செய்திகள் அவ்வளவாக இன்னும் ஆய்வாளர்களால் முன் வைக்கப்படவில்லை. இப்பகுதி இன்னும் ஆய்வுக்கான களமாகவே உள்ளது. இவர்களை அடுத்து அரியணைக்கு வந்தவர்கள் பல்லவர்கள். ஆனாலும் காஞ்சியில் ஒரு பெரிய அரசன் இப் பல்லவர்களுக்கு முன்னமே இருந்துள்ளான். சிம்மவிஷ்ணு என்று கூறப்படும் ஒருவன் திடீரெனப் பல்லவப் பேரரசை கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமைப்பதற்கு முன்பாக இந்த புகழ் பெற்ற அரசன் இருந்துள்ளான். இவன் கரிகால் பெருவளத்தான் எனப்படும் திருமாவளவனைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்பவரால் பாடப் பெற்றுள்ளான். இவன் பெயர் இளந்திரையன். இதிலிருந்தே இவனது பெருமை காணக்கிடைக்கிறது.

 

இளந்திரையன் கரிகாலனின் பேரன் என்ற செய்தியும் உள்ளது. இப்படியான இந்தத் தமிழ் மன்னன் மிக அருமையாக பாசனப் பணிகளை மேற்கொண்டவன். இவன் அமைத்த ஏரி தென்னேரி என்றழைக்கப்படும் திரையன் ஏரி ஆகும். இந்த ஏரி காஞ்சிபுரத்திற்கு தெற்கு 10 மைல் தொலைவில் உள்ளது. நந்திவர்மனின் காசாக்குடிச் செப்பேடு இந்த திரையன் ஏரியைப் பற்றி குறிப்பிடுகின்றது.

 

பல்லவர்கள் பல்வேறு வகையான பாசனக் கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளனர். இவர்கள் பல வாரியங்களை அமைத்துள்ளனர். இவர்களைப் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் குறைவாக இருந்தாலும், செப்பேடுகள், கல்வெட்டுகளின் இவர்களைப் பற்றிய செய்திகள் உள்ளன.

 

இவர்கள் தமிழரல்லாத இனத்தவர்கள் ஆயினும் பின்னர் தமிழோடு இரண்டறக் கலந்து விட்டனர். இவர்கள் நிறையக் காடுகளை வெட்டி வயல்களாக மாற்றியுள்ளனர். தமிழகத்தின் வடபகுதியில் இவர்கள் செய்த பாசனப் பணிகளால் இன்றும் அங்கு வேளாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.

 

கூரம் செப்பேடு ''வித்யா விநீத பல்லவ பரமேச்சுர கரம் எடுத்து ஏரி தோண்டி'' என்று குறிக்கிறது. மகேந்திரவாடிக் கல்வெட்டு மகேந்திர தீர்த்தம் என்ற குளத்தைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு வைரமேகத் தடாகம் என்ற குளத்தை உருவாக்கியதற்கான செய்தியைக் கூறுகிறது. இது தவிர நாட்டுக்கால், ஆற்றுக்கால் என்ற இரண்டு வாய்க்கால் கட்டுமான முறை பற்றிய குறிப்புகள் உள்ளன. இது ஆற்றிலிருந்து நேரடியாக நீரை வயலுக்கு கொண்டு வரக்கூடிய அமைப்புகள் மற்றும் ஏரிக்கு நீர் கொண்டு வரும் அமைப்புகள் என்று தெரிகிறது. இது தவிர நீரூற்று வாய்க்கால்கள், ஊற்றுக்கால் என்று கூறப்படுகின்றன. இதை ஒளவையார் குறிப்பிடும் ''ஊற்றுக்காலால் உலகூட்டும்'' என்ற தொடர் நினைவூட்டுகிறது. பாலாற்றில் இருந்து நீரானது பல ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

இவை தவிர கூற்றன் வாய், வா(ய்)த்தலை, தலைவாய், முகவாய் என்று பெயருள்ள பாசனக் கட்டுமானங்கள் ஆற்றிலிருந்து நீரை வயலுக்கு கொண்டு செல்லப் பயன்பட்டுள்ளன. திருச்சி அருகே உள்ள வா(ய்)த்தலை, போன்ற ஊர்கள் இதற்கு நல்ல சான்று. இவற்றைப் பராமரிக்க நிலமானியங்கள் வழங்கப்பட்டிருந்தன.

 

சிற்றூர்களில் குடியாட்சி முறை நன்கு நிலவியிருந்தது. முறையான தேர்தல்கள் நடந்துள்ளன. தன்னாட்சியுடன் கூடிய நிர்வாக அமைப்பு இருந்தது. இந்த சிற்றூராட்சியின் கீழ் அலுவல் முறைப்படி பல சிறு குழுக்கள் இருந்தன. இவற்றுக்கு வாரியங்கள் என்று பெயர். இன்றைய அரசு அமைந்துள்ள வாரியங்களுக்கு முன்னோடியாக அன்றைய பல்லவ நாட்டு மக்கள் முன்னோடியாக இருந்ததை அறிய முடிகிறது. அவை

 

1. சம்வத்சர வாரியம் - பொது வாரியம்

 

2. தோட்டவாரியம் - தோட்டக்கால் பயிர்களைப்பற்றியது.

 

3. ஏரி வாரியம் - ஏரிகள் பராமரிப்பு, ஏரிப் பாசனம்

 

4. கழனி வாரியம் - மருத நில வயல்களைப் பற்றியது.

 

5. பஞ்ச வாரியம் - வரிவசூல் பற்றியது

 

6. கணக்கு வாரியம் - ஏர், மதகு, அணைக்கட்டு, கலிங்கு போன்றவற்றை நிர்வகிப்பது.

 

7. தடிவழி வாரியம் - வயல், பாத்திகளுக்கு செல்லும் பாதைகளைப் பற்றியது.

 

இவ்வளவு நுட்பமான அறிவியல் முறையில் மேலாண்மை அமைப்பை உருவாக்கியமை இன்றும் வியப்பாகவே உள்ளது. இந்த வாரியங்கள் கிராமசபையின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வந்துள்ளன.

 

கொடிக்கால், தோட்டந்தோப்புகள் ஆகியவற்றின் வேலிகளைக் கவனிப்பதற்கு வேலிநாயம் என்ற அலுவலர் இருந்துள்ளார்.

 

ஏரிகள் உடைப்பெடுத்தபோது உடனடியாக அதைச் செப்பனிட்ட செய்திகள் கல்வெட்டுக்களில் பதியப்பட்டுள்ளன. சோமங்கலக் கல்வெட்டு ''சோமங்கலமான பஞ்சநதி வாணச் சதுர்வேதி மங்கலத்து ஏரி இத்தேவர்க்கு பன்னிரண்டாவது பெருவர்ஷம் பெய்து ஒரு நாளே ஏழிடத்தில் பெருமடையாய் உடைத்த இது திருச்சுரக் கண்ணப்பந் திருவேங்கம்பமுடையான் காமன் கண்டவானன் இம்மடை ஏழும் அடைப்பித்து .....'' என்று குறிபிட்டுச் செல்கிறது.

 

பிற்காலச் சோழர்கள்

 

தமிழகப் பாசன வரலாற்றில் பிற்காலச் சோழர்களின் காலம் பொற்காலம் எனக் கூற முடியும். சங்ககாலச் சோழர்களின் வரலாறு கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவிலேயே முடிந்து விடுகிறது. ஆயினும் சிற்றரசர்களாக ஒரு சிலர் இருந்துள்ளனர். பல்லவர்களுக்குப் பின்பு இரண்டாவது சோழப் பேரரசு கி.பி. 846 இல் தொடங்குகிறது. விசயாலய சோழன் இதைத் தொடங்குகிறான். இவன் கி.பி. 871ஆம் ஆண்டுவரை தனது ஆட்சியை நடத்தினான். இவனே தஞ்சையை தலைநகராக வைக்கின்றவன். பண்டைச் சோழர்களுக்கு காவிரி பூம்பட்டினமும் உறையூருமே தலைநகர்கள். இவனது மகன் முதலாம் ஆதித்த சோழன் பல்லவர்கள், கொங்கு நாட்டவர்களை வென்று தனது ஆட்சியை விரிவாக்கினான். இவனது மகன் முதலாம் பராந்தக சோழன் மேலும் பல வெற்றிகளை ஈட்டுகிறான். பாண்டியர்கள் முதல் கங்கர்கள்வரையான மன்னர்களை வெல்கின்றான். ஈழநாட்டின் மீதும் படை நடத்துகிறான். இதற்கிடையில் இளவரசனான இராசாதித்தியன் ராட்டிரகூடர்களால் தக்கோலத்தில் கொல்லப்படுகிறான். இதன் பின்னர் 25 ஆண்டுகாலம் சோழப் பெருமை மங்கிக் கிடந்தது. இதன் பின்னர் ஐந்து மன்னர்கள் ஆட்சிக்கு வந்தனர். அவர்கள் கண்டராதித்தியன், அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன் (சுந்தர சோழன்), ஆதித்திய கரிகாலன், மதுரகாந்தகன் ஆகியோராவர். இரண்டாம் பராந்தக சோழனின் இரண்டாவது மகனே அருண் மொழித் தேவன் எனப்படும் இராசராச சோழன், இவனது மகன் இராசேந்திர சோழன்.

 

ஏறத்தாழ 430 ஆண்டுகாலம் மிக நீண்ட ஆட்சியைச் சோழர்கள் செலுத்தியுள்ளனர். இவர்கள் வடக்கே கங்கை முதல் தெற்கே இலங்கை மற்றுமல்லாது தென்கிழக்கு ஆசியாவரையிலும் தமது பேரரசை நிறுவியுள்ளனர். பண்டைய சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளைக் குறிப்பிடத் தயங்கும் வரலாற்றாய்வாளர்கள் கூட பிற்காலச் சோழப் பேரரசின் விரிவைச் சொல்லிவிடுகின்றனர். பல்வேறு வெற்றிகளை ஈட்டிய அருண்மொழித் தேவன், பாண்டியர்களையும், சேரர்களையும் வெற்றி கொண்டதால் மும்முடிச் சோழன் என்ற கீர்த்தியைப் பெற்றான். இவன் மிக நீண்ட போர்களைச் செய்து முடித்து பின்னர் எதிரிகள் இன்மையால் மிக அமைதியான சூழலை நாட்டில் ஏற்படுத்தினான். மிக அருமையான பாசனத் திட்டங்களை வடிவமைத்துச் செயல்பட்டுள்ளான். பண்பாட்டுத் துறையில் இவன் செய்த சாதனையாக, மறைக்கப்பட்ட சைவ சமய மறையான தேவாரத்தை மீண்டும் வெளிக் கொணர்ந்தது கூறப்பட்டாலும், வேளாண்மையில் இவனது பணி மிக விரிவானது.

 

பிற்காலச் சோழ மன்னர்கள் காலத்தில் 20 பெரும் நீர்க்கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்பது கட்டுமானங்கள் மன்னர்களின் பெயர்களைக் கொண்டவை. அரசியின் பெயரால் அமைந்தவை மூன்று. அமைச்சர்கள், அதிகாரிகள், குழுக்கள் பெயரில் அமைத்தவை எட்டு.

 

அரசர் பெயரில் அமைந்தவை

 

கண்டராதித்தன் - கண்டராதித்த ஏரி

 

சுந்தரசோழன் அல்லது இரண்டாம் பராந்தகன் - சுந்தரசோழன் வாய்க்கால்

 

இராசராசன் - இராசராசன் வாய்க்கால்

 

முதலாம் இராசேந்திரன் - முடிகொண்ட சோழப் பேராறு

 

வீரராசேந்திரன் - வீரராசேந்திரப் பேராறு - இராசகேசரி வாய்க்கால்

 

முதலாம் குலேத்துங்கன் - புத்தாறான குலோத்துங்கச் சோழப் பேராறு - சுங்கம் தவிர்த்த சோழன் வாய்க்கால்

 

இராசாதிராசன் - இராசாதிராசன் வாய்க்கால்

 

அரசியர் பெயரில் அமைந்தவை

 

செம்பியன் மாதேவி வாய்க்கால்

 

பராந்தகன் மாதேவி வாய்க்கால்

 

மாதேவடிகள் வாய்க்கால்

 

அதிகாரிகள், பிறர் பெயரில் அமைந்தவை

 

தாமோதர வாய்க்கால்

 

தென்பூமி வாய்க்கால்

 

தரமி வாய்க்கால்

 

அம்மையப்பன் வாய்க்கால்

 

திருவாஞ்சியத்தேவன் வாய்க்கால்

 

சோமநாதன் வாய்க்கால்

 

முன்னூற்றுவன் வாய்க்கால்

 

மூவாயிரவன் வாய்க்கால்

 

இவ்வாறு அமைக்கப்பட்ட ஆற்றுப் பாசனத் திட்டங்கள் தவிர பல்வேறு ஏரிகளையும் பிற்காலச் சோழர்கள் உருவாக்கினார்கள். தஞ்சையைவிட்டு தனது தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றிக் கொண்டான் இராசேந்திரன். இவன் தனது தந்தையைக் காட்டிலும் மிகத் துணிச்சலான வெற்றிகளை ஈட்டியவன். கடாரம் எனப்படும் (மியான்மர்) பர்மாவரையிலும் தனது கொடியைப் பறக்கவிட்டவன். இவன் கங்கைவரை தனது பேரரசை விரித்தவன். இதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பெயரும் பெற்றான். சங்ககாலத்தில் இருந்த கரிகாலன், சேரன் செங்குட்டுவன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆகியவர்களுக்குப் பிறகு வடநாட்டு மன்னர்களைத் தோற்கடித்தவன் இவனே என்றால் அது மிகையாகாது. தனது வெற்றியின் பெயரால் ஒரு தலைநகரை உருவாக்குகிறான். அதன பெயர்தான் கங்கை கொண்ட சோழபுரம், இந்நகர் தஞ்சையைக் காட்டிலும் எள்ளவும் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வசதிகளையும் செய்விக்கிறான். அதில் ஒன்றாக குடிநீர் மற்றும் பாசனத்திற்காக சோழப் பேரேரி எனப்படும் சோழகங்கம் என்ற ஏரியைக் கட்டுவிக்கிறான்.

 

இவன் மைசூர்ப் பகுதியில் ஏரி ஒன்று அமைத்ததற்கான செய்தியை மாலூர்பட்டனா கல்வெட்டுக் கூறுகின்றது.

 

உய்யக் கொண்டான் வாய்க்கால் ஒரு சமமட்டக் கோட்டு வாய்க்கால் (Contour Canal) ஆகும். இந்த வாய்க்கால் அமைந்துள்ள பகுதி மேடும் பள்ளமும் அமைந்தது. ஆற்றுநீர் அறுத்து முறையற்று இருக்கும் இடம். இங்கு சமமட்டக் கோட்டு வாய்க்கால் அமைக்கும் நுட்பம் அப்போதே இருந்தமை மிகவும் வியப்பிற்குரிய ஒன்று. ஏனெனில் நீரியல் கோட்பாடுகள் வளர்ந்தது 18ஆம் நூற்றாண்டுக் காலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் சோழர்கள் காலத்தில் இருந்த குடியாட்சி முறையும் அதை நடத்துவதற்கான குடவோலை முறையும் மிகவும் சிறந்த ஆட்சிமுறை அமைப்பாகும். இதற்குச் சான்றுகளாக பின்வரும் கல்வெட்டுகள் உள்னன.

 

உத்திமேரூர் கல்வெட்டு, தென்னேரி, மானூர், பிரம்மதேசம், காமரசவல்லி, திரிபுவனி, சம்பை, பொன்னமராவதி, விரிஞ்சிபுரம், திருமுக்கூடல், அரகண்டநல்லூர் முதலிய இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள் விளக்குகின்றன. கிராமசபை என்ற ஊரவை மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது, ஆனால் இப்போது உள்ளபடி அனைவரும் ஊர் அவையில் வாக்களிக்க முடியாது. அதற்கு தகுதி உள்ள சில விதிமுறைகள் இருந்துள்ளன. இது நிதி, நீதி போன்ற பல காரியங்களை கவனித்துக் கொண்டது. அதில் மிக முதன்மையானதாக ஏரிப் பராமரிப்பு இருந்திருக்கிறது.

 

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருவெறும்பூர் ஊர் மேம்பாட்டிற்காக விதிக்கப்ட்ட தீர்வைப்பற்றி பத்தாம் நூற்றாண்டு ஆவணம் பின்வரும் தகவலைக் கூறுகிறது.

 

........... திருவெறும்பூர் சிவன் கோவிலை தீர்மானித்த செம்பியன் வடிவேலன் என்பவர் அக்கிராமத்து ஏரியை ஆழப்படுத்த 45 களஞ்சு தங்கம் அளிக்க முன்வந்தார்..... என்று விரிவாகக் கூறிச் செல்கிறது. இக்‘கலம் இராசராசன் காலமாகும்.

 

இதேபோல குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு உடைந்துபோன ஏரியைப் பராமரிப்பது பற்றி விரிவாகச் சொல்கிறது. இது ஏரி அடைக்க பொற்காசுகள் அளித்த செய்தி கூறுகிறது. இக்கல்வெட்டு கி.பி.1192 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. ''......... செயங்கொண்ட சோழமண்டலத்து புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழவளநாட்டுக் குன்றத்தூர் நாட்டுச் சேர்மங்கலமான பஞ்சத்தியான சதுர்வேதி மங்கலத்து ஏரி....... உடைந்ததும் அடைப்பித்து இவ்வேரி பதினாலாவது நிலை நின்றபின்பு இம்மடைகளும் கரையும் பகுமை செய்கைக்கு.......... கல்லிக் கரைசெய்யக் கடவோமாகவும் இப்படிச் சம்மதித்து பழங்காசு நாற்பதும் பொலியூட்டாக கைக்கொண்டோம் இவ்வூர் மகாசபையோர்.....''

 

இவ்வாறாக மன்னர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் நீரிப்பாசனப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டுள்ளனர்.

 

நாட்டின் பொருளியல், இந்த வேளாண்மையை வைத்தே இயங்கியது. பல்வேறு முறைகளில் வரிவிதிப்பை உருவாக்கியிருந்தனர்.

 

நீர்வரி விளைநிலங்களுக்கு நீரைப் பாய்ச்சிக் கொள்வதற்கான வரியாகும். இதுவே ஏரி, குளம் பாய்ச்சலாக இருந்தால் அதன் பெயர் நிலை நீர்ப்பாட்டம் எனப்படும். ஆற்றுப்பாய்ச்சலுக்கு ஒழுகுநீர்ப்பாட்டம் என்று பெயர். அத்துடன் விளைநிலம் என்றும் விளையாநிலம் என்றும் பிரித்து வரி தண்டப்பெற்றது. விளையாநிலம் ஊர்ப்பொதுநலம் என்றும் பட்டப்பாழ் (தரிசு) என்றும் பிரிக்கப்பட்டது. இவற்றுக்கு வரி கிடையாது. எனவே இது இறையிலி என்று அழைக்கப்பட்டது.

 

விளைநிலம் என்பது நீர்நிலம், கொல்லை, காடு என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டது. நிலவரி தீர்வை என்றும் வாரம் என்றும் பிரிக்கப்பட்டது. தீர்வை என்பது குறிப்பிட்ட அளவை ஆண்டு தோறும் தர வேண்டும். வாரம் என்பது விளைச்சலில் ஒரு பங்கு என்று வாங்கப்பட்டது. தீர்வை நிலம் தீர்வைப் பற்று என்றும் வார நிலம் வாரப்பற்று என்றும அழைக்கப்ட்டது. வாரத்தையே பணமாகச் செலுத்தினால் அதன் பெயர் கடமைப்பற்று எனப்பட்டது. நன்றாக விளைந்த நிலத்தில் மட்டுமே வரி தண்டப்பெற்றது. விளையா நிலங்களில் வரி வாங்கப்படவில்லை. களஞ்சியத்தில் விளைபொருட்களும் கருவூலத்தில் பணமும் சேமித்து வைக்கப்பட்டன. இவை இரண்டிற்கும் பண்டாரம் என்று பெயர். ஊரளவு இருக்கும் பண்டாரத்தில் உள்ளூர் செலவு போக எஞ்சியவை. தலைநகரில் உள்ள மூலப் பண்டாரத்திற்கு அனுப்பப்படும்.

 

வேளாண்மையும் அதற்கு மூலமான பாசனமும் பிற்காலச் சோழர்களின் இன்றியமையாகப் பணியாக இருந்துள்ளது.

 

பண்டைய வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட பாண்டியர்களின் பாசனப் பணி என்பது வையை ஆற்றோடும், பொருநை என்ற தாமிர பரணியோடும் நெருக்கமானது. வையை மேற்கு மலைத் தொடரில் தோன்றும் ஆறு. கண்ணகியும் கோவலனும் கடும் கோடை காலத்தில் மதுரைக்குள் நுழைகின்றபோது படகுகள் ஓட்டும் அளவிற்கு நீரோட்டத்தைக் கொண்டிருந்தது.

 

இந்த ஆற்றில் பாண்டியர்கள் கட்டிய அணைகள் பற்றிய செய்திகள் முதலில் ''கல்வெட்டு வடிவில் கிடைப்பது சேந்தன் செழியன் காலத்தியது. இது கி.பி.620-650. சேந்தன் செழியன் வைகையில் மதகு அமைத்த செய்தி இதில் அமைந்துள்ளது. இதேபோல அரிகேசரி என்ற கால்வாயையும் வெட்டியுள்ளான். தென்பாண்டிச் சீமையில் பாயும் பொருநையில் சிறு சிறு மண்ணணைகள் மட்டுமே பண்டைய நாட்களில் செய்யப்பட்டுள்ளன. பிற்காலப் பாண்டியர்களே நிறைய அணைகளைக் கட்டியுள்ளனர்.

 

திருக்கோவிலூர் அணை உள்ள இடத்தில் ஒரு மதகு அமைத்து வாய்க்கால் பிரித்ததை விக்கிரம பாண்டியன் கல்வெட்டுக் கூறுகிறது. பவானி ஆற்றில் உள்ள காலிங்கராயன் கல்வெட்டு பிற்காலப் பாண்டியனான சடையவர்மன் குலசேகரன் காலத்தியது. இவனது பட்டப் பெயர் காலிங்கராயன். மாறவர்மன் சுந்தரபாண்டியனது அமைச்சர் ஒருவருக்கு காலிங்கராயன் என்ற பட்டம் இருந்தது. கொங்கு மண்டலத்தில் இவர் பணியாற்றியபோது இவர் கட்டிய பாசனக் கட்டுமானம் இது.

 

இது தவிர கோடைமேல் அழகியான் அணை, நதியுண்ணி அணை, கன்னடியன் அணை என்று பல அணைக் கட்டுகள் கட்டப்பட்டன. நாஞ்சில் நாட்டில் பழையாற்றின் குறுக்கே பாண்டியன் அணை கட்டப்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் பாசன வரலாற்றில் இருப்பைக் குடி கிழவன் என்ற சிற்றரசனுக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. இவன் சிறிமாற சிறிவல்லபன் என்ற பாண்டிய அரசனுக்கு உட்பட்டவன். இவனது காலம் கி.பி. 815 முதல் 862 வரை. இவன் வாழ்நாளில் பெரும்பகுதியை பாசனப் பணிகளுக்காகவே செலவிட்டான். சாத்தூர், கோவில்பட்டி, முதுகுளத்தூர், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளைக் கொண்டது இருஞ்சோணாடு, இப்பகுதியை ஆட்சி செய்தவன் இவன்.

 

''ஏரிநூலிட்டு ஏறுவித்தல்'' என்ற செப்பமான அணைக்கட்டுமூ தொழில்நுட்பம் இவனது காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவன்தான் நீர் அறுவடை என்று இன்று கூறப்படும் நுட்பத்தின் தந்தை எனலாம். பாண்டிய மண்டலம் முழுமையும் ஏரிகளை உருவாக்கி பெய்யும் மழையைப் பிடித்து வறண்ட பகுதிகளை வளமாக்கினான். கிழவனேரி, திருமால் ஏரி, மாறனேரி, திருநாராயணன் ஏரி, பெருங்குளம் என்று பெருமளவு ஏரிகளை அமைத்துள்ளான்.

 

ஆற்றின் மட்டத்திலிருந்து உயரமான இடத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் தொழில் நுட்பத்தை இவர்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.

 

எங்கெல்லாம் ஒரேஒரு கால்வாய் பிரிகிறதோ அங்கெல்லாம் ''ட'' வடிவத்திலும், இருபுறத்திலும் கால்வாய் பிரியும் இடத்தில் குதிரைலாட வடிவில் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இதை அறியாத ஆங்கிலேயர் பாறையின் போக்கிலேயே இது கட்டப்பட்டதாக கருதினர். இதனால் அவர்கள் கட்டிய அணைகள் உடைப்பெடுத்தன.

 

மருதூர் அணையிலும் திருவைகுண்டம் அணையிலும் இத்தகைய உடைப்புகள் நடந்தன. பின்னர் இதை அறிந்து வேண்டிய திருத்தங்களை ஆங்கிலேயர் செய்தனர்.

 

இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நாயக்க மன்னர்களும் பாண்டியர்களைத் தொடர்ந்து பாசனப் பணிகளைச் செய்துள்ளனர். தாமிரபரணி ஆற்றிலுள்ள அரியநாயகியும் அணைக்கட்டு தளபதி அரியநாதரால் கட்டப்பட்டது. பாளையன் அணைக்கட்டு, மருதூர் அணைக்கட்டு, சுத்தமல்லி அணைக்கட்டு போன்றவை நாயக்கர் காலத்தில் கட்டுமானங்கள், கும்பகோணம் மகாமகக் குளத்தை தஞ்சையில் வாழ்ந்தநாயக்க மன்னர்களின் அமைச்சரான கோவிந்த தீட்சிதர் அமைத்தார். இவர் ஐயன் குளம், ஐயன் வாய்க்கால், ஐயன்கடை என்ற பாசனப் பணிகளைச் செய்துள்ளார்.

 

பாண்டியர்கள் தொடங்கி வைத்த சங்கிலித் தொடர் ஏரிகள் இன்றும் பலரை வியப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.

 

இவ்வாறான நீண்ட வரலாற்றைக் கொண்ட வேளாண்மை கடந்த 40 முதல் 50 ஆண்டுகளில் மிகப் பெரும் வீழ்ச்சியை எட்டியிருப்பதைக் காணலாம். உணவில் தன்னிறைவு கண்டுவிட்டோம் என்று மார்தட்டியவர்கள் இன்று கோதுமையை அதிக விலைக்கு இறக்குமதி செய்கின்றனர். மண் மலடாகி விட்டது. நீர் நஞ்சாகிவிட்டது. மக்களோ அன்றாடம் புதுப் புது நோய்களுக்கு இலக்காகின்றனர். பசுமைப் புரட்சி என்று உழவர்களின் வாழ்வில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு இப்போது புதிய பசுமைப் புரட்சி என்று பேசுகின்றனர். முற்றிலும் கும்பணிகளை (கும்-குழுவாக பணி- செயலாற்றுவது) முன்னேற்றுவதற்கான வேளாண்மைத்திட்டங்களை பரிந்துரை செய்து நாட்டின் தற்சார்பிற்கு உலை வைத்து வருகின்றனர்.

 

ஏறுத்தாழ 56 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கருத்தரங்கம் ஒன்று இந்திய வேளாண்மை தற்சார்பை உள்னதாக மாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது. குறிப்பாக நிலங்களைப் பகிர்ந்தளிப்பது, நில உச்சவரம்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைவது என்று அதன் போக்கு சீனாவை ஒத்ததாக இருந்தது. 1961-இல் ராக்பெல்லர் நிறுவனம், போர்டு நிறுவனம் உலக வங்கி இவற்றின் துணையோடு அதற்கு எதிரான திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வேதியுரங்கள் கொடுக்கப்பட்டன. அவர்கள் ''இந்நாட்டு உழவர்கள் மிகவும் பழமையான முறையில் வேளாண்மை செய்கின்றனர்'' ''விளைச்சலைப் பெருக்க முடியாது'' என்று கூறி மக்களை திசை திருப்பினர்.

 

அமெரிக்க நிதி உதவியோடு வேதி உரங்கள் கொடுக்கப்பட்டன. ஒரு மூட்டை உரம் வாங்கினால் ஒரு வண்டிப் பட்டை கிடைக்கும் என்று பரப்புரை செய்யப்பட்டது. இதன் பின்னர் வேதியுரங்களை ஏற்றுக் கொள்ள முடியாத நாட்டு பயிர்கள் அதிகமாக வளர்ந்து சாய்ந்தன. இதனிடையில் நார்மன் போர்லாக் என்பவர் குட்டை வகைப் தவசப் பயிர்களை அறிமுகம் செய்தார். 1960ஆம் ஆண்டு வேளாண்மைக் கொள்கை முற்றிலும் இந்த மாயவிதைகளை விரிவாக்கம் செய்யத் தூண்டியது. இதன் பின்னர் கொல்லைப்புற வழியாக முற்றிலுமாக பசுமைப் புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது. அயல்நாட்டு ''வீரிய'' விதைகளை எதிர்த்த ரிச்சாரியா என்ற வேளாண் அறிஞர் வெளியேற்றப் பட்டு எம்.எஸ்.சாமிநாதன் வேளாண்துறைத் தலைமைப் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். இதன் பின்னர் மிக வேகமாக வேலைகள் நடைபெற்றன. நமது நாட்டின் உள்ளூர் விதைகள் முற்றிலும் அழிந்து போயின. சிறு சிறு உழவர்களால் ஆங்காங்கே அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொதுவான உழவர் கூட்டத்திடம் இருந்து அவை போய்விட்டன. இந்தியாவில் உணவுப் பஞ்சம் வந்துவிட்டது. அதனால்தான் பசுமைப் பரட்சியை அறிமுகம் செய்வதாகக் கூறினர். ஆனால் இதை அமர்த்தியாசென் போன்ற அறிஞர்களின் ஆய்வு தவிடுபொடியாக்கி விட்டுள்ளது. அதாவது எப்பொழுதெல்லாம் இந்தியாவில் பஞ்சம் வந்தததோ அப்போதெல்லாம் பிற நாடுகளுக்கு உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன என்று அவர் தனது ஆய்வில் நிறுவியுள்ளார். எனவே முறையான பகிர்வு இல்லாததால்தான் பஞ்சம் வந்ததேயொழிய இயற்கையாக வரவில்லை என்பது விளங்கும்.

 

இவ்வாறாக வலிந்து திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி 50 ஆண்டுகளுக்குள் தனது உயிரை விட்டுவிட்டது. இப்போது இரண்டாம் பசுமைப் புரட்சியைப் பற்றிப் பேசுகின்றனர். அதே சுவாமிநாதன் இப்போது மரபீனி மாற்றப் பயிர்களின் தேவையை விரிவாகப் பேசுகிறார். இவர் இயற்கை வேளாண்மையைப் பரப்புவதும் தமது கடமை என்று பகர்கிறார். இயற்கை வேளாண்மைச் சான்றளிப்பவர்கள் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை முற்றிலும் எதிர்க்கின்றனர். இவர் எப்படி இயற்கை வேளாண்மையை பரிந்துறைக்கிறார் என்று தெரியவில்லை. மரபீனி மாற்றத் தொழில் நுட்பம் முற்றிலும் உழவர்களை வேளாண்மையில் இருந்து அகற்றிவிட்டு ஒரு சில கும்பணிகளிடம் ஒப்படைக்கும் நோக்கமேயன்றி வேறு எதுவும் இல்லை.

 

தமிழக உழவர்கள் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டுள்ளனர்.

 

இடுபொருள் செலவு அதிகமாகிக் கொண்டே வருகிறது.

 

விளைபொருள் விலையோ உரியவாறு உயரவில்லை.

 

ஆறுகளில் நீர் வளம் குறைந்து வருகிறது.

 

அண்டை மாநிலங்களின் அடம்பிடிப்பு.

 

உழவர்கள் தங்களது நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு கூலிகளாக மாறுகின்றனர்.

 

கும்பணிகள் நிலங்களை வாங்கிக் குவிக்கின்றன.

 

தமிழகத்தில் வேளாண்மையின் பங்கு 1.6 விழுக்காட்டிற்கும் குறைவாகப் போய்விட்டது.

 

தோட்டப் பயிர் சாகுபடி பன்மடங்கு அதிகமாகி உணவுப் பயிர் சாகுபடி பன்மடங்கு குறைந்துள்ளது.

 

தமிழகத்தின் உணவு உறுதிப்பாடு கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

 

இந்தச் சூழலில் நாம் என்ன என்ன செய்வது? தமிழக வேளாண்மையை எவ்வாறு காப்பது? என்ற வினாக்கள் எழுகின்றன.

 

நமது குறிக்கோள் தற்சார்பை வலுவுறுத்துவதாக இருக்க வேண்டும். அதாவது நாட்டின் தற்சார்பை மட்டுமல்லாது உழவரின் தற்சார்பை வலியுறுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

 

''தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

 

வாளாண்மை போலக் கெடும்'' என்பார் வள்ளுவர். தாளாண்மை என்பதை நாம் புதிய பொருளில் (தாள் - கால், ஆண்மை - மேலாண்மை) தனது காலில் நிற்கும் திறமை என்று கொள்ளலாம். இது உயிர்ம நேயத்தை அடிப்படையாகக் கொண்டது.

 

''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' இந்த உலகில் வாழுகின்ற பூச்சிகள், மரங்கள், விலங்குகள் யாவற்றையும் கொன்றொழித்துவிட்டு மாந்தர் மட்டுமே வாழ முடியாது. எனவே பிற உயிர்களின் வாழுமையை உறுதி செய்யும் வகையிலும் நமது வேளாண்மை இருக்க வேண்டும்.

 

by Swathi   on 11 Apr 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
20-May-2020 07:37:16 மதன் said : Report Abuse
மிகவும் அருமையான பதிவு. நன்றி 💚
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.