|
||||||||
மழைகளின் வகைகள் |
||||||||
மழைகளின் வகைகள் தமிழில் 14 வகையான மழை உண்டு. 1. மழை 2. மாரி 3. தூறல் 4. சாரல் 5. ஆவி 6. சோனை 7. பெயல் 8.. புயல் 9. அடை(மழை) 10. கன(மழை) 11. ஆலங்கட்டி 12. ஆழிமழை 13. துளி மழை 14. வருள் மழை இயற்கை நுனித்த மழை: வெறுமனே மழைக்குப் பல பெயர்கள் அல்ல. இவை ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு. மழை என்னும் சொல்: ‘மழ’ என்பது உரிச்சொல் ஆகும். ‘மழ களிறு’ என்பதற்கு ‘இளமையான களிறு’ என்று பொருள். ‘மழவர்’ என்பதற்கு ‘இளைஞர்கள்’ என்று பொருள். அந்த உரிச்சொல் புறத்து பிறப்பதே ‘மழை’ என்னும் சொல் ஆகும். இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் ‘மழை’ எனக் காரணப்பெயர் பெற்றது. அடை மழை: அடை என்பதை ஆங்கிலத்தில் ‘Thick’ எனக் கூறுவர். இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை அடை மழை ஆகும். அடைமழை என்பது வினைத்தொகை. அடைத்த மழை, அடைக்கின்ற மழை, அடைக்கும் மழை என்று கூறுகிறோம். விடாமல் பெய்வதால் ஊரையே ‘அடை’த்து விடும் மழை. அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடை மழை எனப் பெயர் பெற்றது. கன மழை வேறு. அடை மழை வேறு. அடை மழையில் நீர் பெரும் ஓடைகளையும், குளம், ஏரிகளையும் நிரப்பும் வகையில் இருக்கும். மாரி: இள மென்மையாக அலைந்து காற்றாடி போலப் பெய்வது ‘மழை’ ஆகும். தாய்ப்பால் போலச் சீராகப் பெய்வது ‘மாரி’ ஆகும். அதனால் தான் மாரியம்மன் எனத் தெய்வத்தைத் தமிழ் மக்கள் அழைக்கவும் செய்தார்கள். தமிழ் மொழி பிறமொழி போல் அல்லாது வாழ்வியல் மிக்கது. காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளச் சேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராகப் பெய்வது ‘மாரி’ ஆகும். அதனால் தான் இலக்கியங்களில் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா’ எனக் கேட்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பிற மழைகளுக்கான விளக்கம்: ஆவி: ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி ‘ஆவி’ எனப்படுகிறது. இந்த வகை மழையில் உடலோ, உடையோ உடனே நனையாது. தூறல்: காற்று இல்லாமல் தூவலாகப் பெய்யும் மழை ‘தூறல்’ ஆகும். புல், பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும். ஆனால் விரைவில் காய்ந்து விடும். சாரல்: பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்து வரப்படும் மழை ‘சாரல்’ எனப்படும். மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளைக் கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை ‘சாரல்’ என்பர். சாரல் என்பது மழையில் பட்டுத் தெறித்து விழும் மழை எனச் சிலர் கூறுவது முற்றிலும் தவறு. (சாரலடிக்குது ஜன்னல் காத்து என்பதைக் கவனிக்கவும்) சாரல்--சாரம் என்பன சாய்வைக் குறிக்கும் சொற்கள். மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தைக் குறிக்கும். அதை மலையில் பட்டுத் தெறிக்கும் நீர் எனத் தவறாகப் பொருள் கொண்டு விட்டனர். சாரல் மழை என்பது சாய்வாய் காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப பெய்யும் மழை என்பதே பொருள். சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும். மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும். கன மழை: இந்த வகை மழையில் துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும். ஆலங்கட்டி மழை: திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து, மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ‘ஆலங்கட்டி மழை’ ஆகும். இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும். புவி வெப்ப மயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர். பனி மழை: பனித் துகள்களே மழை போலப் பொழிவது ‘பனி மழை’ ஆகும். இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும். ஆழி மழை: ஆழி என்றால் கடல். இது கடலில் பொழியும் மழையைக் குறிக்கும். இதனால் மண்ணுக்குப் பயனில்லை. ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம்மழை ஆகும். |
||||||||
by Lakshmi G on 27 Nov 2020 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|