பிற ஆலயங்களில் இல்லாத விதமாக இத்தலத்தில் கஜேந்திரவரதர் தனது கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பித்ரு, மார்க்கண்டேய மகரிஷிகளுடன் நின்றகோலத்தில் இருந்து அருட்காட்சி தருகிறார். யானையாக சபிக்கப்பட்ட இந்திரதிம்னனும், முதலையாக சபிக்கப்பட்ட கந்தர்வனும் மோட்சம் பெற்ற இத்தலத்திற்கு வந்து சுவாமியை எண்ணி மனமுருகி துதிப்போரது பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும்.
தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் பெருமாளின் பக்தர்களான பிருகு மற்றும் மார்க்கண்டேய ரிஷிகள் தவம் செய்து கஜேந்திரவரதரின் திருவுருவ தரிசனம் பெற்றுச் சென்றுள்ளனர். இத்தலத்தில் யானைகள் வந்ததற்கு சான்றாக இன்றும் பக்கத்தில் உள்ள முண்டந்துறை வனப்பகுதியில் அதிகளவில் யானைக்கூட்டம் இருப்பதும், அகத்திய முனிவர் இருந்ததற்கு சான்றாக அருகிலுள்ள பாபநாசத்தில் அகத்தியர் அருவி இருப்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
மன்னர்காலத்தில் கட்டப்பட்ட இத்தலம் பிரம்மாண்டமாக மன்னர்கால கட்டடக்கலையை பறைசாற்றும் விதமாக பொலிவுற அமைந்துள்ளது. இங்கு கோயில் செய்தி குறித்த கல்வெட்டுக்களும் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன. |