இத்தலத்தில் அருள்புரியும் வெங்கடாஜலபதி திருப்பதியில் இருப்பதைப்போலவே தோற்றம் கொண்டுள்ளார். இதனால், இத்தலம் "தென்திருப்பதி' என்ற சிறப்பு பெயர் பெற்றுள்ளது. சுவாமி தனது வலது மார்பில் ஸ்ரீதேவி, இடது மார்பில் பூதேவி ஆகியோரைத் தாங்கியபடி, கையில் சங்கு, சக்கரம் கொண்டு, இடுப்பில் சந்திரவம்ச உடைவாளுடன் கூடிய ஒட்டியாணம், மேனியில் சப்தகிரி, லட்சுமி, துளசி, தாமரை, செண்பக மாலைகள் அணிந்து, திருப்பாதத்தில் தண்டை, கொலுசு அணிந்த அற்புத கோலத்தில் அருட்காட்சி தருகிறார்.
திருப்பதிக்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு பிரார்த்தனையை செலுத்துகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் பெருமாளை வழிபட்டால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் தீபாவளி பண்டிகையின் போது கல்யாண சீனிவாசருக்கு ஒரு மண்டலம் அலங்காரம் செய்து உற்சவம் நடப்பது சிறப்பு.
ஒரே நேரத்தில் வெங்கடாஜலபதி, அலமேலு தாயார், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய மூவரையும் தரிசனம் செய்வது போல கோயில் அமைந்துள்ளது. சுவாமிக்கு பின்பு வலப்புறம் லட்சுமி, இடப்புறம் ஆண்டாள் ஆகியோர் மதிற்சுவரில் இருந்து அருள்புரிகின்றனர். |