திருப்பதியைப் போல அமைப்பில் ஒத்திருப்பதால் இத்தலம் "தென்திருப்பதி' என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறது. வெண்கற்களாலான குன்றின் மேல் ஸ்ரீநிவாஸன் அருள்பாலிக்கிறார். இங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் வியாசமாமுனிவரின் முதன்மைச்சீடரான பைலர், ஸ்ரீநிவாஸப்பெருமாளை நினைத்து தவம் செய்தார்.
அங்கு பெருமாளின் திருவுருவமோ, சிலையோ ஏதுமில்லாததால் தன் மனதில் திருமாலை எண்ணிக்கொண்டே, கோடி மலர்களைத் தூவி வணங்கினார். ஏழாம் நாளில் பெருமாளை எண்ணி அவர் அர்ச்சனை செய்த மலர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து மிகப்பெரும் ஜோதியாக வானில் உயரே எழுந்தன.
ஜோதியின் நடுவே, காலடியில் தாமிரபரணி நதி தாய் வீற்றிருக்க, ஸ்ரீநிவாஸப்பெருமாள் எழுந்தருளி பைலருக்கு அருட்காட்சிதந்தார். அவரது அருள்வடிவமான திருக்கோலத்தைக் கண்டு தரிசனம் செய்து ஆனந்தக் கூத்தாடிய பைலர் வடக்கே திருப்பதி வெங்கடாஜலபதியாக குடிகொண்டு அருள்வது போல இவ்விடத்திலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு திருவருள் புரிய வேண்டுமென வேண்டிக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஸ்ரீநிவாஸர் ஏற்றுக்கொண்டார். |