இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்திருக்கிறார். இது போன்ற அமைப்பை காண்பது அரிது. இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.ராமபிரான் ஏகபத்தினி விரதன் ஆவார். அதாவது, ஒருத்தியையே மனைவியாகக் கொண்டு,ஒருவனுக்கு ஒருத்தி என்ற தர்மத்தை உணர்த்துபவர் இவர்.
ஆனால், இக்கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள சீதையைத் தவிர, செண்பகவல்லித்தாயாருக்கும் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயருக்கு "தானே பரமாத்மா' என்று உணர்த்தியதால் இவர், பெருமாளின் அம்சமாகிறார். இதை உணர்த்தும் விதமாக இங்கு தாயாருக்கு சன்னதி எழுப்பியுள்ளனர். தவிர, விஷ்ணு துர்க்கைக்கும் சன்னதி உள்ளது. ஆண்டாள் சன்னதி கிடையாது.
ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத்தலமாக இக்கோயில் உள்ளது. கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். |