நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஆதிக்கு(சகா) மூன்று பணக்கார நண்பர்கள். இவர்கள் அனைவரும் வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
கல்லூரி கடைசி தேர்வை எழுதினால், வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தில் கமிட் ஆகிவிடுவோம் என்று பயந்து கடைசி தேர்வை எழுதாமல் விட்டு விடுகிறார்கள். மறுதேர்வு எழுத 6 மாத காலம் ஆகும் இதனால் நான்கு பேரும் ஒரு 6 மாதங்கள் சந்தோஷமாக ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு பின்னர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.
சரியாக 2014 டிசம்பர் 31-ம் தேதி இரவு, நண்பர்கள் குடித்துவிட்டு, போதை தலைக்கேறிய போது, அங்கு தனது ஆண் நண்பருடன் வரும் ரிச்சா பலோட்டை தங்களது செல்போனில் படம் பிடிக்கிறார்க'. அவர்களிடம் ரிச்சா பலோட் தனது நண்பருடன் சென்று வாக்குவாதம் செய்ய, இறுதியில் ஆதியும் அந்த ஹோட்டலுக்கு வருகிறார்.
நண்பர்களிடம் பிரச்சினை செய்யும் ரிச்சா பலோட்டின் ஆண் நண்பரை, நண்பர்களுடன் இணைந்து அடித்து உதைக்கிறார் ஆதி. இந்த பிரச்சினை போலீசுக்கு செல்ல, ஹோட்டலுக்கு வரும் போலீஸ், ஆதியின் நண்பர்கள் பெரிய இடத்துப் பையன்கள் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பேசி அனுப்பி விடுகின்றனர்.
அந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்து நண்பர்கள் நான்கு பேரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகின்றது. அந்தப் பிரச்சனையில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை.
வீட்டில் அப்பாவுக்குப் பயந்த பிள்ளையாக, நண்பர்களுக்காகத் தனது வாழ்க்கையையே தியாகம் செய்யும் அப்பாவி நண்பனாக, அக்காவிடம் குறும்பு செய்யும் தம்பியாக, காதலியைக் கண்டு மிரளும் நல்ல பையனாக, எதிரிகளைத் துவம்சம் செய்யும் வீரனாக ஆதிக்குக் படத்தில் கனமான கதாபாத்திரம். மரணத்துக்காக பயந்து ஓடும் காட்சியில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சில இடங்களில் இவர் பேசும் வசனங்கள் எடுபடவில்லை. அதை மட்டும் குறைத்திருந்தால் ஓகேதான்.
நகரத்து குறும்புக்கார பெண்ணாக நடித்து கைதட்டல் பெறுகிறார் நாயகி நிக்கி கல்ராணி. வழக்கம் போல் மகனைத் தண்டச்சோறு என்று திட்டிக்கொண்டிருக்கும் கதாப்பாத்திரத்தில் நரேன் நடித்திருக்கிறார்.
பசுபதி, ஆடுகளம் நரேன், நாசர் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கதையில் சிறிது நேரம் வந்தாலும் ரிச்சா பெல்லோட்டும், லஷ்மிப் பிரியா சந்திரமௌலியும் மிரட்டியிருக்கிறார்கள். மும்பை தாதாவாக வரும் முதலியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிதுன் சக்ரவர்த்தி அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
பிரஷன் பிரவீன் ஷ்யாம் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை நன்றாக வந்துள்ளது.
மொத்தத்தில் யாகாவாராயினும் நாகாக்க பார்க்கலாம் பாஸ்....
|