|
||||||||
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : என் பெயர் மாடசாமி - அத்தியாயம் 6 |
||||||||
என் பெயர் மாடசாமி. மாடசாமியை முதல்முறையாக சந்தித்த தினம் இன்றும் என் நினைவில் உள்ளது. ஒரு நாள் அதிகாலை நான்கு மணி அளவில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தில் சந்தித்தேன். அதுவொரு வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம். சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரியான நிலையில் தாக்குப்பிடித்து வருடத்திற்கு வருடம் வளர்ந்து கொண்டேயிருந்த நிறுவனமது. இது போன்ற நிறுவனங்களை திருப்பூர் மொழியில் JOB WORK UNIT என்பார்கள். இது போல திருப்பூரில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளது. இவர்களின் முக்கியப்பணி என்பது நேரிடையாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பதே ஆகும். இது போன்ற நிறுவனங்கள் ஐம்பது சதுர அடி முதல் 5000 சதுர அடி வரைக்கும் உள்ள இடங்களில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும். மனித வாழ்க்கை மட்டுமல்ல. தொழில் துறையும் கூட ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்பொழுதுக்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாறிக் கொண்டே வருவதை கூர்மையாக கவனித்தால் தெரியும். ஒவ்வொரு தொழிலுக்கும் லாபமே முக்கியமானதாக இருக்கும். அந்த லாபத்தை அடைய எத்தனை வழிகள் உள்ளதோ அத்தனை வழிகளையும் தொழில் நடத்துபவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். திருப்பூரில் இன்றைய சூழ்நிலையில் குறிப்பிட்ட சில வேலைகளைத் தவிர மற்ற அனைத்து வேலைகளும் வெளியே உள்ளே நபர்களிடம் சென்று முடிவடைந்து மீண்டும் நிறுவனத்திற்குள் வருகின்றது.
தற்பொழுது அலுவலகமே தேவைப்படாத அளவிற்கு மாற்றம் பெற்று அவரவர் வசிக்கும் வீடுகளில் இருந்து கொண்டே பகுதி நேர பணியாக பலரும் பல வேலைகளை செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நாள் முழுக்க ஒரு நிறுவனத்திற்குள் தங்களை அடைத்துக் கொள்ள விரும்பாதவர்களுக்கு இது மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. குடும்பத்தை கவனித்துக் கொள்ளவும் முடிகின்றது. மாதமானால் குறிப்பிட்ட வருமானத்தை ஈட்டவும் முடிகின்றது. திருப்பூரில் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு ஆய்த்த ஆடை முழு உருவம் பெறத் தேவையான துணி நிறுவனத்தின் உள்ளே வந்து விட்டால் ஆடை முழுமையடைந்து கடைசியில் பெட்டியில் போடும் வரைக்கும் உண்டான அனைத்து வேலைகளும் பெரும்பாலான நிறுவனங்களில் உள்ளே மட்டுமே நடக்கும். முக்கிய வேலைகள் தவிர்த்து வேறெந்த வேலைக்காகவும் அந்த ஆடைகள் நிறுவனத்தை விட்டு வெளியே செல்லாது. ஆனால் இன்று இந்த சூழ்நிலை மாறிவிட்டது. கிடைக்கும் லாபங்கள் குறைய நிறுவனத்திற்குண்டான சுமைகளை பலரும் கழட்டி வைத்து விடவே விரும்புகின்றனர். நிரந்தர பணியாளர் என்றால் வாரம் தோறும் சம்பளம். இது தவிர அவருக்கென்று அரசாங்கம் நிர்ணயித்த தொழிலாளர் வைப்பு நிதி,சேம நல நிதி போன்ற பல விசயங்களை செய்து கொடுக்க வேண்டும். அப்படியே செய்து கொடுத்தாலும் அந்த குறிப்பிட்ட தொழிலாளர் கடைசி வரைக்கும் தான் சார்ந்துள்ள நிறுவனத்திற்கு விசுவாசமாக தொடர்ந்து இருப்பார் என்று அறுதியிட்டு கூற முடியாது. அவருக்கு தான் இருக்கும் நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட ஷிப்ட்டுக்கு பத்து ரூபாய் கிடைத்தால் அல்லது வேறு வசதிகள் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக அடுத்த நிறுவனத்திற்கு சென்று விடுவார். காரணம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கலாச்சாரம் உருவான பிறகு ஆண் தொழிலாளர்களின் மனோபாவமும், உழைப்பில் காட்டக்கூடிய அக்கறையும் முழுமையாக மாறிவிட்டது. அதேபோல நுகர்வு கலாச்சாரத்தின் அங்கத்தினராக பெண்கள் மாற அவர்களின் எண்ணமும் முழுமையாக மாறிவிட்டது. "விருப்பம் என்றால் வைத்துக் கொள். இல்லையெனில் எனக்கு வெளியே வாய்ப்பு உள்ளது" என்று ஒவ்வொரு தொழிலாளர்களும் தான் பணிபுரியும் நிர்வாகத்தை மிரட்டும் நிலையில் தான் இன்றைய திருப்பூர் ஆய்த்த ஆடைத்துறை உள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட வேலைகள் மட்டும் நிறுவனத்தின் உள்ளே நடக்க மற்ற அத்தனை வேலைகளுக்கும் வெளியே சென்று மீண்டும் உள்ளே வருகின்றது. அல்லது குறிப்பிட்ட வேலைக்காக மட்டுமே வெளியே இருந்து ஆட்களை வரவழைக்கும் (OUT SOURCING) நபர்கள் மூலம் பல வேலைகள் நடக்கின்றது. தைத்து மட்டும் கொடுப்பது, ஆடைகளில் உள்ள பிசிர்களை மட்டும் நீக்கி கொடுப்பது, உருவமான ஆடைகளை தரம் பார்த்து அவற்றை பிரித்துக் கொடுப்பது, ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் கறைகளை நீக்கிக் கொடுப்பது, இது தவிர போகாத கறைகளை எடுத்துக் கொடுப்பது, ஆடைகளில் வரும் மிகச் சிறிய ஓட்டைகளை வெளியே தெரியாத அளவிற்கு சரி செய்து கொடுப்பது, இறுதியில் சரியான தரம் பிரிக்கப்பட்ட ஆடைகளை தேய்த்து பாலிபேக்கில் போட்டு பெட்டி போட்டு கொடுப்பது என்று இத்துறை சார்ந்த ஏராளமான துணைப்பணிகளுக்கென்று திருப்பூர் முழுக்க லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த கூலி அடிப்படையில் பல நூறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். ஒரு ஆய்த்த ஆடை முழுமையடைய எத்தனை வேலைகளை உள்ளதோ? அனைத்து வேலைகளுக்கும் பல நிறுவனங்கள் உள்ளது. இதிலும் போட்டியுண்டு. பலதரப்பட்ட சவால்களை தாண்டி நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும். பெரிய நிறுவனங்கள் இது போன்ற சிறிய நிறுவனங்களை வாயில் போட்டு மென்று துப்பக் காத்திருப்பார்கள். வேலை முடிந்ததும் பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள். கடைசியாக சரியாக தைத்துக் கொடுத்தாலும் "சரியான நேரத்தில் நீ கொடுக்கவில்லை. இதனால் எனக்கு இத்தனை லட்சம் நட்டம். நீ தான் பொறுப்பு" என்று மனசாட்சியை அடகு வைத்து விட்டு பாதிக்குப் பாதி பணத்தைக் கொடுப்பார்கள்.
இது போன்று ஆடைகளை தைத்து மட்டுமே கொடுக்கும் நிறுவனத்தில் தான் மாடசாமி பணியாற்றிக் கொண்டிருந்தான். பொதுவாக தொழில் நகரங்களில் இரவு பகல் என்றொரு வித்தியாசமே இருக்காது. ஆறாண்டுகளுக்கு முன்பு வரை திருப்பூர் என்பது 24 மணி நேரமும் இயங்கும் உலகமாகவே இருந்து வந்தது. சாயப்பட்டறை பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து 700க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடுவிழா கண்டதும் பகலில் மட்டும் செயல்படும் உலகமாக மாறியுள்ளது. இது தவிர சமீப காலமாகத்தான் திருப்பூரில் இரவு மற்றும் ஞாயிற்றுக் கிழமை வேலையென்றால் என்றால் தொழிலாளர்கள் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். காரணம் தங்களுக்கு கிடைத்த விடுமுறை தினத்தை மது அருந்தும் தினமாக மாற்றிக் கொண்ட உழைக்கும் வர்க்கத்தினரால் அடுத்த நாள் செயல்பட முடியாதவர்களாக மாறி விட்டனர். இன்றைய சூழ்நிலையில் ஐம்பது சதவிகித நிறுவனங்களில் அறிவிக்கப்படாத விடுமுறை தினமாக திங்கள் கிழமை இருந்து வருகின்றது. ஆண் தொழிலாளர்கள் வருவதே இல்லை. கையில் செலவழிக்க காசு இல்லாத போது மட்டுமே வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் மேலை நாட்டு நாகரிக கலாச்சாரத்தில் வாழவே விரும்புகின்றனர். ஆனால் பத்தாண்டுகளுக்கு முன் இரண்டு நாட்கள் இடைவெளி இல்லாமல் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். உழைப்புக்கு அஞ்சாத கூட்டமது. இன்று பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வேறு ஊர்களுக்கு போய்விட்டனர். மிச்சமும் சொச்சமும் தான் இந்தத்துறையில் உள்ளனர். திருப்பூருக்கென்று ஒரு தனியான மொழியுண்டு. வாசிக்கும் பொழுதே உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கும். அந்த மொழி ஆங்கிலமா? தமிழா? என்ற குழப்பத்தை உருவாக்கும். ஒரு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு நிறுவனம் காலை எட்டு மணிக்கு தொடங்கி இரவு எட்டு மணிக்கு முடிந்தால் தொழிலாளர்களுக்கு ஒன்னறை ஷிப்ட் என்ற அர்த்தம். அதுவே இரவுப் பணி என்றால் 12 மணி வரை நடக்கும். மொத்தமாக இரண்டு ஷிப்ட் என்பார்கள். அதற்கு மேலே அதிகாலை வரை தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தால் அதனை "விடிநைட்" என்று அழைப்பார்கள். மறுபடியும் எப்போது போல காலையில் எட்டு மணிக்கு பணி தொடங்கும். இடைப்பட்ட நேரத்திற்குள் தொழிலாளர்கள் தம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தூங்க வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் இருக்காது. குறிப்பிட்ட பெட்டிகள் லாரியில் ஏற்றும் வரைக்கும் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். குறிப்பிட்ட வேலைகள் முடித்தே ஆக வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக தூக்கம் மறந்து ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். தொழிலாளர்கள் மட்டுமல்ல. ஒரு நிறுவனத்தின் அலுவலகம் சார்ந்த ஊழியர்களைத் தவிர்த்து உற்பத்தித்துறை சார்ந்து செயல்படும் எவரும் இப்படித்தான் இங்கே பணியாற்ற முடியும். இவ்வாறு செயல்பட்டால் மட்டுமே தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆதிக்கம், கொடுமை என்று நீங்கள் எத்தனை வார்த்தைகளை வேண்டுமென்றாலும் எழுதி வைத்துக் கொண்டு வருத்தப்படலாம். ஆனால் இது போன்ற வார்த்தைகளை கோடிக்கணக்கில் முதலீடுகளை போட்டு விட்டு இரவு தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கும் முதலாளிகளைப் பார்க்கும் போது நமக்கே பாவமாக இருக்கும். ஒரு வேளை அப்போது உங்கள் எண்ணம் மாறக்கூடும். இவர்கள் ஒரு பக்கமும் நாளை இந்த வேலை நமக்கு இருக்குமா? என்று தடுமாறும் தொழிலாளர்களுக்கும் இடையே தான் இன்றைய திருப்பூர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு பெரிய நிறுவனத்தில் உற்பத்தி துறையில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நிறுவனத்திலும் வாரத்திற்கென்று இலக்கு வைத்திருப்பார்கள். ஒரு வாரத்தின் வெள்ளிக்கிழமை என்பது இறுதி இலக்காக இருக்கும். கப்பல் மூலம் செல்வதாக இருந்தால் தூத்துக்குடிக்கும் விமானம் மூலம் செல்வதாக இருந்தால் சென்னைக்கும் சென்றாக வேண்டும். விமானம் மூலம் சென்றடைய குறிப்பிட்ட நாள் என்ற கணக்கு தேவையில்லை. குறிப்பிட்ட விமான வசதிகளைப் பொறுத்து எப்போது வேண்டுமானலும் நாம் பெட்டிகளை அனுப்பலாம். நான் இருந்த நிறுவனத்தின் அந்த வாரத்தின் இலக்கின்படி குறிப்பிட்ட ஆடைகளை வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பியாக வேண்டுமென்ற கட்டாயத்தில் இருந்தேன். ஆள் பற்றாக்குறையின் காரணமாக மற்றொரு சிறிய நிறுவனத்தில் தைத்துக் கொடுப்பதற்காக கொடுத்து இருந்தோம். அந்த சிறிய நிறுவனத்தில் தான் மாடசாமியை சந்தித்தேன். பகல் பொழுதில் முடித்துத் தருவதாக சொல்லியிருந்தார்கள். ஆனால் வந்தபாடில்லை. மீண்டும் கேட்டபோது நள்ளிரவில் முடிந்து விடும் என்றார்கள். இரவு ஒரு மணிக்குள் வந்து சேர வேண்டிய ஆடைகள் வராத காரணத்தினால் நானே நேரிடையாக அந்த நிறுவனத்திற்கு சென்று சேர்ந்தபோது அந்த நிறுவனம் இருளில் மூழ்கியிருந்தது. எவரும் வேலை செய்வதற்கான அறிகுறியே இல்லை. என் மனதிற்குள் பயம் எட்டிப்பார்த்து. நிச்சயம் நாளையப் பொழுது நமக்கு மண்டகப்படி தான் என்று நினைத்துக் கொண்டு வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு அந்த நிறுவனத்தின் உள்ளே நுழைந்தேன். கதவு லேசாக திறந்தே இருந்தது. உள்ளே ஒரு ஓரத்தில் ஒரு விளக்கு எறிந்து கொண்டிருக்க அதன் கீழ் ஒருவர் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். மனதிற்குள் ஆசுவாசமாக இருந்தது. லேசாக இருமிக் கொண்டே அவரை நோக்கி நகர்ந்தேன். அவர் என் குரலைக் கேட்டதும் அவசரமாக எழுந்து நின்றார். அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகம் கீழே விழ அப்போது தான் அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தேன். பல புத்தகங்கள் அந்த மேஜையில் இருந்தது. எல்லாமே தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள். உள்நாட்டு, வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள். மனதிற்குள் ஆச்சரியம் பரவியது. இந்த நேரத்தில் இது போன்ற புத்தகங்களை படிக்கும் அவரை ஆச்சரியமாக பார்த்தேன். ஒல்லியான உருவம். அரும்பு மீசை. கிராமத்து முகம். ஆடம்பரமில்லாத உடை. இடுங்கிப் போன கண்கள். தொடர்ச்சியான இரவுப்பணியின் காரணமாக நிரந்தரமாக உருவான கண்ணக்கதுப்பு கருவளையம். நான் அவர் பிம்பத்தை உள்வாங்கிக் கொண்டு அந்தப் பகுதியில் எனக்கான பெட்டிகள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா? என்பதை பார்த்துக் கொண்டே மென்மையாக அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு நான் வந்த வேலை குறித்து கேட்டேன். என்னை விட பல மடங்கு வயது குறைவாக இருந்தாலும் நான் மரியாதையாக பேசிய வார்த்தைகள் அவருக்கு உற்சாகத்தை தந்து இருக்க வேண்டும். அந்த சமயத்திலும் அவர் களைப்பின்றி உற்சாகமாக பேசிய வார்த்தைகள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. "எல்லாமே ரெடியா இருக்கு சார். உங்க கம்பெனியிலே இருந்து யாராவது வருவாங்கன்னு சொன்னாங்க. எனக்கு உங்க கம்பெனி எந்த இடத்தில் இருக்குன்னு தெரியாது. அதான் இங்கே உட்கார்ந்துட்டேன்" என்றார். அப்போது தான் அவன் ஒரு பலிகடாவாக இந்த நிறுவனத்தில் இருப்பதை புரிந்து கொண்டேன். தொடரும்..... |
||||||||
by Swathi on 04 Sep 2014 4 Comments | ||||||||
Tags: Oru Tholitchalaiyin Kurippugal ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ஜோதிஜி திருப்பூர் | ||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|