|
||||||||
"செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றும்" - பிரதமர் மோடி |
||||||||
பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் சென்ற பிரதமர், மழைக்கு நடுவே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தரையிறங்கினார். அவருக்குப் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்புடன் அரசு முறைப்படி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பாரீஸில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு மேள தாளங்கள் முழங்க இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இரண்டு நாடுகள் பயணத்தின் முதற்கட்டமாக பிரான்ஸ் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபருடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணைப் பிரதமர் டிங் சூயெக்ஸியாங் உட்படப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், மைக்ரோசாப்ட், கூகுள், ஓபன் ஏஐ உட்படப் பல்வேறு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பான முறையில் மனிதர்கள் நலனுக்காகப் பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஏஐ வளர்ச்சியால் மனித வேலைவாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்ற அச்சம் தான் இந்தத் தொழில்நுட்பத்துக்கான மிகப் பெரிய இடையூறாக இருக்கிறது. ஆனால், வரலாற்றுச் சான்றுகளின்படி எந்தவொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித வேலைகளைப் பறித்ததில்லை.
மாறாக, ஒரு வேலையின் தன்மையை மட்டுமே தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றியிருக்கிறது. அதனால், நாம் ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மக்களின் திறன்களை மேம்படுத்துவதிலும், அவற்றை மாற்றியமைப்பதிலும் கவனம் செலுத்தினால் ஏஐ சார்ந்த எதிர்காலத்தை எளிதில் எதிர்கொள்ளலாம். இதற்கு, நாம் வெளிப்படத்தன்மை நிறைந்த திறந்த மூல மென்பொருள்களை உருவாக்க வேண்டும்.
தொழில்நுட்பப் பயன்பாட்டில் ஜனநாயகத்தைப் புகுத்த வேண்டும். மக்கள் நலனை மையமாகக் கொண்ட செயலிகளை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, சைபர் பாதுகாப்பு, டீப் ஃபேக் கட்டுப்பாடு, திரிக்கப்பட்ட தகவல்கள் தொடர்பான பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏஐ எதிர்காலம் நன்மைக்கானதாக, அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறது. ஏஐ தற்போது மிக வேகமாக, எதிர்பாராத வீரியத்துடன் வளர்ந்து வருகிறது. அதே வேகத்தில் அது நம்மால் பழகிப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
உலக நாடுகளின் ஏஐ மீதான சார்பு எல்லைகள் கடந்து ஒன்றோடு ஒன்று இணைந்ததாக உள்ளது.
அதனால் ஏஐ தொழில்நுட்பத்தை நிர்வகிக்கச் சர்வதேசக் கூட்டு முயற்சி தேவை. நாம் பகிர்ந்து கொண்டுள்ள மதிப்பீடுகள், நாம் சந்திக்கும் அபாயங்கள், நாம் கட்டமைக்கும் நம்பிக்கைகள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக ஏஐ தொழில்நுட்ப மேலாண்மை விதிகள் இருக்க வேண்டும்” என்றார்.
.தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளித்த இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரான்ஸ் அரசின் உயரதிகாரிகள், மாகாண பிரதிநிதிகள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
|
||||||||
by hemavathi on 11 Feb 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|