|
||||||||
அகநானூறு-10 |
||||||||
226. மருதம்
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்;
நாண் இலை மன்ற யாணர் ஊர!
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை,
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக் 5
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்,
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான்,
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை,
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி, 10
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள்,
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி, 15
போர் அடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர்
227. பாலை
'நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே;
திதலை அல்குல் வரியும் வாடின;
என் ஆகுவள்கொல் இவள்?' என, பல் மாண்
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி,
இனையல் வாழி, தோழி! நனை கவுள் 5
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப்
புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப,
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து, 10
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ,
நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள்,
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்,
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை, 15
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப்
பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்,
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்,
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, 20
எல் உமிழ் ஆவணத்து அன்ன,
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே!
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது; பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்
228. குறிஞ்சி
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென
வரை இழி அருவி ஆரம் தீண்டித்
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில்,
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக்
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி, 5
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று,
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப் 10
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய்
இரும் பிடி இரியும் சோலைப்
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லி யது. - அண்டர் மகன் குறுவழுதியார்
229. பாலை
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் 5
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி,
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென,
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்! 10
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப,
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி
நல் மா மேனி தொலைதல் நோக்கி,
இனையல் என்றி; தோழி! சினைய 15
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப்
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து,
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை,
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம்
இன் இளவேனிலும் வாரார், 20
'இன்னே வருதும்' எனத் தௌத்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
230. நெய்தல்
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப்
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல்,
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்! 5
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு,
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம்,
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின்,
தீதும் உண்டோ, மாதராய்?' என, 10
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர்
கை வல் பாகன் பையென இயக்க,
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில்
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி,
சிறிய இறைஞ்சினள், தலையே 15
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
231. பாலை
'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்,
இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி,
நல் இசை வலித்த நாணுடை மனத்தர்
கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர், 5
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கைக்
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை
வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக
வருவர் வாழி, தோழி! பொருவர் 10
செல் சமம் கடந்த செல்லா நல் இசை,
விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன்
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
ஆடு வண்டு அரற்றும் முச்சித்
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே. 15
தலைமகள் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
232. குறிஞ்சி
காண் இனி வாழி, தோழி! பானாள்,
மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின்,
மாஅல் யானை புலி செத்து வெரீஇ,
இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும்
பெருங் கல் நாடன் கேண்மை, இனியே, 5
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்,
மன்ற வேங்கை மண நாட் பூத்த
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர்
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் 10
ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும்,
விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி,
'முருகு' என வேலற் தரூஉம்.
பருவமாகப் பயந்தன்றால், நமக்கே. 15
தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்,சொல்லியது. - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
233. பாலை
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின்
அலர் முலை நனைய, அழாஅல் தோழி!
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம்
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென,
ஊன் இல் யானை உயங்கும் வேனில், 5
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின்,
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல்
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல்
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு, 10
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ,
பொருள்வயின் நீடலோஇலர் நின்
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே. 15
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார்
234. முல்லை
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப்
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய 5
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப,
கால் என மருள, ஏறி, நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர்
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந!
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை 10
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,
எல்லை போகிய புல்லென் மாலை,
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர், 15
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
நல் நிறம் பரந்த பசலையள்
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார்
235. பாலை
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும்,
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ?
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து,
விண்டு முன்னிய கொண்டல் மா மழை 5
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ,
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய, 10
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க,
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி,
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை 15
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய,
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
தொல் நலம் சிதையச் சாஅய்,
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்
236. மருதம்
மணி மருள் மலர முள்ளி அமன்ற,
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன்
அரி நிறக் கொழுங் குறை வெளவினர் மாந்தி,
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை,
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப் 5
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக்
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன், நன்றும்
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல் 10
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப,
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியாமையின் அழிந்த நெஞ்சின்,
'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின்,
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை, 15
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என,
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த
ஆதிமந்தி போல, 20
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே.
ஆற்றாமை வயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பரணர்
237.பாலை
'புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப,
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ,
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து 5
இன்னா கழியும் கங்குல்' என்று நின்
நல் மா மேனி அணி நலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல்
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு, 10
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு,
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும்,
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து 15
ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார்
238. குறிஞ்சி
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்,
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென,
மட மான் வல்சி தரீஇய, நடு நாள்,
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து, 5
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற,
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு,
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி,
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
பெருங் கல் நாட! பிரிதிஆயின், 10
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும்
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ்,
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து, 15
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள்
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே?
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - கபிலர்
239. பாலை
அளிதோதானே; எவன் ஆவதுகொல்?
மன்றும் தோன்றாது; மரனும் மாயும்
'புலி என உலம்பும் செங் கண் ஆடவர்,
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்,
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய 5
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும்
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி,
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின்,
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய, 10
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே,
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என,
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்த
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே! 15
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
240. நெய்தல்
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத்
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப,
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல்
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் 5
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய,
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில்
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி,
யாயும் ஆயமோடு அயரும்; நீயும்,
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி, 10
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து,
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்,
பூ வேய் புன்னை அம் தண் பொழில்,
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே. 15
தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. - எழுஉப்பன்றி நாகன் குமரனார்
241. பாலை
'துனி இன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம, அவர்' என முனியாது
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்,
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை 5
மூங்கில் இள முளை திரங்க, காம்பின்
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை,
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி,
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை 10
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய்
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச்
செம் முக மந்தி ஆடும் 15
நல் மர மருங்கின் மலை இறந்தோரே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்
242. குறிஞ்சி
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச்
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை,
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம், 5
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ,
அறியா வேலற் தரீஇ, அன்னை 10
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி,
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம்,
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள்,
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய, 15
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ்
முயங்கல் இயைவதுமன்னோ தோழி!
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில்
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச்
சாந்த மென் சினை தீண்டி, மேலது 20
பிரசம் தூங்கும் சேண் சிமை
வரையக வெற்பன் மணந்த மார்பே!
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார்
243. பாலை
அவரை ஆய் மலர் உதிர, துவரின
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப,
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக்
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய,
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு 5
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக்
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை!
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப்
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை 10
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று;
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே! 15
தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்கு, தலைமகள் 'ஆற்றேன்' என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
244. முல்லை
'''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை
பகல் உறை முது மரம் புலம்பப் போகி,
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை 5
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி?'' என, தன்
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப,
அருந் துயர் உடையள் இவள்' என விரும்பிப் 10
பாணன் வந்தனன், தூதே; நீயும்
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி,
நெடுந் தேர் ஊர்மதி, வலவ!
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை.......மள்ளனார்
245. பாலை
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி,
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில், 5
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல் வில் இளையர் தலைவர், எல் உற,
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை,
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்,
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள் 10
கான யானை வெண் கோடு சுட்டி,
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக் 15
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி,
அம் மா அரிவை ஒழிய, 20
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லி, செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
246. மருதம்
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக,
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர!
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு 5
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு
ஆடினை என்ப, நெருநை; அலரே
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்,
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் 10
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய,
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
மொய் வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - பரணர்
247. பாலை
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து,
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை,
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின், 5
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும்
அரிய கானம் என்னார், பகை பட
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக்
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி, 10
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார்
248. குறிஞ்சி
நகை நீ கேளாய் தோழி! அல்கல்;
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ,
இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு
நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து,
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற 5
தறுகட் பன்றி நோக்கி, கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது,
'அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்' என,
எய்யாது பெயரும் குன்ற நாடன் 10
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி அவிழ்ந்து,
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை,
ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து துயல்வர,
இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை;
வல்லே என் முகம் நோக்கி, 15
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந்தோளே.
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப, தோழி சொல்லியது. - கபிலர்
249. பாலை
அம்ம வாழி, தோழி! பல் நாள்
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும்
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி, 5
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ,
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார் 10
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ,
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த 15
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து,
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி,
உழை மான் இன நிரை ஓடும்
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார்
250. நெய்தல்
எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப,
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர,
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட, 5
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி,
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன்,
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும்
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய், 10
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது, கங்குலானே!
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
226. மருதம் |
||||||||
by Swathi on 29 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|