மதுரையின் காவல் தெய்வமாக அம்பிகை வீற்றிருக்கும் இக்கோயிலில் அம்பாள் மிகுந்த வரப்பிரசாதியாக அருளுகிறாள். இவளே ஆதிதெய்வமாகவும் வழிபடப்படுகிறாள். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விசேஷங்கள் நடத்தினாலும், முதலில் இவளிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பே நடத்துகிறார்கள். மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் விழா நடக்கும் முன்பு முதல் பூஜை இவளுக்கே செய்யப்படுகிறது.
கோயிலுடன் சேர்ந்துள்ள இத்தெப்பம் மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரிய தெப்பம் எனும் பெருமையினை உடையது.அம்பாள் சிரித்த கோலத்தில், கைகளில் பாசம், அங்குசம் ஏந்தி காட்சி தருகிறாள். இடது காலை தொங்கவிட்டு, வலது காலை மடக்கி வைத்திருக்கிறாள். இவளது இடது காலுக்கு கீழே மகிஷாசுரன் இருக்கிறான். பொதுவாக மாரியம்மனின் காலுக்கு கீழே அசுரன் உருவம் மட்டுமே இருக்கும். ஆனால், இவள் துர்க்கையின் அம்சமாக இருப்பதால் காலுக்கு கீழே மகிஷாசுரன் இருக்கிறான். |