LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்

பாரதிதாசன் கவிதைகள் - பகுதி 3

                             பாரதிதாசன் கவிதைகள் - பகுதி 3

 

 

2.0 திராவிட நாட்டுப்பண்


இசை -- மோகனம் தாளம் -- ஆதி

வாழ்க வாழ்கவே
வளமார் எமது திராவிட நாடு
வாழ்க வாழ்கவே!

சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவும் திறலும் செறிந்த நாடு.
வாழ்க வாழ்கவே...

பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த
பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்
கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்
கமழக் கலைகள் சிறந்த நாடு.
வாழ்க வாழ்கவே...

அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும் 
அறிவின் விளைவும் ஆர்ந்திடு நாடு
வெள்ளப் புனலும் ஊழித் தீயும்
வேகச் சீறும் மறவர்கள் நாடு.
வாழ்க வாழ்கவே...

அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய் 
முல்லைக் காடு மணக்கும் நாடு.
வாழ்க வாழ்கவே...

அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்
அடிநாள் ஈன்ற அன்னை தந்தை
தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்
சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு.
வாழ்க வாழ்கவே...

ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின் 
சாற்றில் தென்றல் காற்றில் நல்ல
ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்
அழகில் கற்பில் உயர்ந்த நாடு.
வாழ்க வாழ்கவே...

புனலிடை மூழ்கிப் பொழிலிடை யுலவிப்
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு.
வாழ்க வாழ்கவே...

திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க
தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க
இங்குத் திராவிடர் வாழ்க மிகவே
இன்பம் சூழ்ந்ததே எங்கள் நாடு.
வாழ்க வாழ்கவே...



2. 2 சிறுகாப்பியம்


2.1 போர் மறவன்


1
(காதலனின் பிரிவுக்கு ஆற்றாதவளாய்த் தலைவி தனியே வருந்துகிறாள்.)
தலைவி

என்றன் மலருடல் இறுக அணைக்கும்அக்
குன்றுநேர் தோளையும், கொடுத்தஇன் பத்தையும்
உளம்மறக் காதே ஒருநொடி யேனும்!
எனைஅவன் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன்!
வான நிலவும், வண்புனல், தென்றலும்
ஊனையும் உயிரையும் உருக்கின! இந்தக்
கிளிப்பேச் சோஎனில் கிழித்தது காதையே!
புளித்தது பாலும்! பூநெடி நாற்றம்!
(காதலன் வரும் காலடி ஓசையிற்
காதைச் செலுத்துகிறாள்.)
காலடி ஓசை காதில் விழுந்தது.
நீளவாள் அரை சுமந்த கண்
ணாளன் வருகின் றான்இல்லை அட்டியே!


(தலைவன் வருகை கண்ட தலைவி வணக்கம் புகலுகிறாள்.)
தலைவன்

வாழிஎன் அன்பு மயிலே, எனைப்பார்!
சூழும்நம் நாட்டுத் தோலாப் பெரும்படை
கிளம்பிற்று! முரசொலி கேள்நீ! விடைகொடு!
(தலைவி திடுக்கிடுகிறாள். அவள் 
முகம் துன்பத்தில் தோய்கிறது.)
தலைவி

மங்கை என்னுயிர் வாங்க வந்தாய்!
ஒன்றும் என்வாய் உரையாது காண்க!
தலைவன்

பாண்டி நாட்டைப் பகைவன் சூழ்ந்தான்!
ஆண்டகை என்கடன் என்ன அன்னமே?
நாடு தானே நம்மைப் பெற்றது?
நாமே தாமே நாட்டைக் காப்பவர்?
உடலும் பொருளும் உயிரும் ஈன்ற
கடல்நிகர் நாட்டைக் காத்தற் கன்றோ?
பிழைப்புக் கருதி அழைப்பின்றி வந்த
அழுக்குளத் தாரிய அரிவைநீ அன்றே!
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்பெரும் பழங்குடி
நல்லியல் நங்கை, நடுக்குறல் தகுமோ? 
வென்றுவா என்று நன்று வாழ்த்திச்
சென்றுவர விடைகொடு சிரிப்பொடும் களிப்பொடும்!
தலைவி

பிரியா துன்பால் பெற்ற இன்பத்தை
நினைந்துளம், கண்ணில் நீரைச் சேர்த்தது!
வாழையடி வாழைஎன வந்தஎன் மாண்பு
வாழிய சென்று வருக என்றது.
(தலைவன் தலைவியை ஆரத்தழுவிப் பிரியா 
உளத்தோடு பிரிந்து செல்கிறான்.)


(பகைவன் வாளொடு போர்க்களத்தில் எதிர்ப் படுகின்றான்; வாளை உருவுகின்றான்.
தலைவனும் வாளை உருவுகின்றான்.)
தலைவன்

பகையே கேள்நீ, பாண்டிமா நாட்டின்
மாப்புகழ் மறவரின் வழிவந் தவன்நான்!
என்வாள் உன்உயி ரிருக்கும் உடலைச் 
சின்ன பின்னம் செய்ய வல்லது!
வாளை எடுநின் வல்லமை காட்டுக.
(இருவரும் வாட்போர் புரிகிறார்கள்.)

4
(தலைவன் எதிரியின் வாள் புகுந்த தன் மார்பைக் கையால் அழுத்தியபடி சாய்கிறான்.)
தலைவன்

ஆஎன் மார்பில் அவன்வாள் பாய்ந்ததே!
(தரையில் வீழ்ந்து, நாற்றிசையையும் பார்க்கிறான்.)
என்னை நோக்கி என்றன் அருமைக்
கன்னல் மொழியாள், கண்ணீர் உகுத்துச்
சாப்பாடும் இன்றித் தான்நின் றிருப்பாள்.
என்நிலை அவள்பால் யார்போய் உரைப்பார்?
(வானில் பறவை ஒன்று மிதந்து போவதைக் 
காணுகின்றான்.)
பறவையே ஒன்றுகேள்! பறவையே ஒன்றுகேள்!
நீபோம் பாங்கில் நேரிழை என்மனை,
மாபெரும் வீட்டு மணிஒளி மாடியில்
உலவாது மேனி, உரையாது செவ்வாய்,
இமையாது வேற்கண், என்மேல் கருத்தாய்
இருப்பாள் அவள்பால் இனிது கூறுக:
பெருமையை உனது அருமை மணாளன்
அடைந்தான். அவன்தன் அன்னை நாட்டுக்
குயிரைப் படைத்தான். உடலைப் படைத்தான்.
என்று கூறி ஏகுக மறந்திடேல்!
(தலைவன் தோள் உயர்த்தி உரத்த குரலில்)
பாண்டி மாநாடே, பாவையே!
வேண்டினேன் உம்பால் மீளா விடையே!



2. 2 ஒன்பது சுவை


1. உவகை

(இரவு! அவள் மாடியில் நின்றபடி தான் வரச் 
சொல்லியிருந்த காதலனை எதிர்பார்க்கின்றாள். 
அவன் வருகின்றான்.)

காதலன்
என்மேல் உன்றனுக் கெத்தனை அன்படி!
என்உயிர் நீதான்! என்னுடல் நீதான்!
உன்னை யன்றிஇவ் வுலகின் ஆட்சியும்
பொன்னும் வேண்டேன், புகழும் வேண்டேன்.
காத்திருப் பேன்எனக் கழறினை வந்தேன்.
பூத்திருக் கும்உன் புதுமுகம் காட்டினை.
மாளிகை உச்சியின் சாளரம் நீங்கி
நூலே ணியினைக் கால்விரல் பற்றித்
தொத்தும் கிளிபோல் தொடர்ந்திறங் குவதாய்
முத்தெழுத் தஞ்சல் எழுதினை! உயிரே
இறங்கடி ஏந்தும் என்கை நோக்கி!
(அவள் நூலேணி வழியாக இறங்குகிறாள்.)
காதலன்
வா பறந்து! வாவா மயிலே!
(அவளைத் தோளில் தாங்கி இறங்குகிறான்.)
காதலன்
வளைந்தது கையில் மாம்பழக் குலைக்கிளை!
ஒரேஒரு முத்தம் உதவு. சரி!பற!
(இருவரும் விரைந்து சென்று அங்கிருந்த ஓர் 
குதிரைமேல் ஏறி அப்புறப் படுகிறார்கள்.)

2. வியப்பு

(இருவரும் ஒரு சோலையை அடைகிறார்கள்.
குதிரையை ஒரு மரத்தில் கட்டி)
காதலன்
வந்து சேர்ந்தோம் மலர்ச்சோ லைக்கண்!
என்னிரு தோளும் உன்உடல் தாங்கவும்,
உன்னிரு மலர்க்கைகள் என்மெய் தழுவவும்
ஆனது! நகரினை அகன்றோம் எளிதில்!
(இருவரும் உலாவுகின்றனர்.)
காதலன்
சோம்பிக் கிடந்த தோகை மாமயில் 
தழைவான் கண்டு மழைவான் என்று
களித்தாடு கின்றது காணடி! வியப்பிது!
(சிறிது தொலைவில் செல்லுகிறார்கள்.)

3. இழிப்பு

காதலன்
குள்ளமும் தடிப்பும் கொண்ட மாமரத்
திருகிளை நடுவில் ஒருமுகம் தெரிந்தது!
சுருங்கிய விழியான்; சுருண்ட மயிரினன்;
இழிந்த தோற்றத்தன் என்னபார்க் கின்றான்?
நமைநோக்கி ஏனவன் நகரு கின்றான்?
உற்றுப்பார்! அவன் ஒருபெருங் கள்வன்.
காலடி ஓசை காட்டாது மெல்லஅக்
கொடியோன் நம்மேற் குறியாய் வருவதை
உணர்க! அன்புக் குரியாய் உணர்க!
(தம்மை நோக்கி வரும் அத்தீயனை 
இருவரும் பார்க்கிறார்கள்.)

4. வெகுளி (கோபம்)

காதலன்
வெகுளியை என்உளத்து விளைக்கின் றானவன்!
புலிபாய்ந் திடும்எனில் போய்ஒழிந் திடும்நரி!
(காதலன் கண்ணிற் கனல் எழுகின்றது. தன்
உள்ளங்கை மடங்குகின்றது. அந்தக் கள்வன் 
தன்னை நெருங்குவதையும் காதலன் காணு
கின்றான். காதலி காணுகின்றாள்.)

5. நகை

காதலன்
நட்டு வீழ்ந்தான் நடை தடுமாறி!
கள்ளுண் டான்.அவ் வெள்ளத்தி லேதன் 
உள்ளம் கரைத்தான். உணர்வி ழந்தான்.
உடைந்தது முன்பல் ஒழுகிற்று குருதி!
(இருவரும் சிரிக்கிறார்கள்.)
காதலன்
ஆந்தைபோல் விழித்தான். அடங்காச் சிரிப்பை
நமக்குப் பெண்ணே நல்விருந் தாக்கினான்.
(இருவரும் மறுபுறம் செல்லுகிறார்கள்.)

6. மறம் (வீரம்)

காதலன்
என்ன முழக்கம்? யார்இங்கு வந்தனர்?
கால்பட்டுச் சருகு கலகல என்றது.
(உறையினின்று வாளை உருவும் ஓசை கேட்கிறது.)
காதலன்
எவனோ உறையினின் றுருவினான் வாளை;
ஒலிஒன்று கிலுக்கென்று கேட்டது பெண்ணே!
ஒருபுறம் சற்றே ஒதுங்கி நிற்பாய்.
நினது தந்தை நீண்முடி மன்னன்
அனுப்பிய மறவன் அவனே போலும்!
(காதலி ஒருபுறம் மறைந்து, நடப்பதை 
உற்று நோக்கியிருக்கிறாள்.)
காதலன்
(தன்னெதிர் வந்து நின்ற மறவனை நோக்கி)
அரசன் ஆணையால் அடைந்தவன் நீயோ?
முரசு முழங்கும் முன்றிலுக் கப்பால்
அரண்மனை புனைந்த அழகு மாடியில்
வைத்தபூ மாலையை வாடாது கொணர்ந்தது
இத்தோள்! உனைஇங் கெதிர்ப்பதும் இத்தோள்!
நேரிழை இன்றி நிலைக்காது வாழ்வெனக்
கோரி அவளைக் கொணர்ந்ததும் இத்தோள்!
போர்மற வர்சூழ் பாரே எதிர்ப்பினும்
நேரில் எதிர்க்க நினைத்ததும் இத்தோள்!
உறையி னின்று வாளை உருவினேன்.
தமிழ்நாட்டு மறவன்நீ தமிழ்நாட்டு மறவன்நான்
என்னையும் என்பால் அன்புவைத் தாளையும்
நன்று வாழ்த்தி நட வந்தவழி!
இலைஎனில் சும்மா இராதே; தொடங்குபோர்!
(வாட்போர் நடக்கிறது.)
காதலன் 
மாண்டனை! என்வாள் மார்பில் ஏற்றாய்;
வாழி தோழா! நின்பெயர் வாழி!
(வந்தவன் இறந்து படுகிறான்.)

7. அச்சம்

(காதலன் தன் காதலியைத் தேடிச் செல்கிறான்.)
காதலன் 
அன்பு மெல்லியல், அழகியோள் எங்கே?
பெருவாய் வாட்பல் அரிமாத் தின்றதோ!
கொஞ்சும் கிள்ளை அஞ்ச அஞ்ச
வஞ்சக் கள்வன் மாய்த்திட் டானோ!
(தேடிச் செல்லுகின்றான். பல புறங்களிலும்
அவன் பார்வை சுழல்கின்றது.)

8. அவலம்

(காதலி ஒருபுறம் இறந்து கிடக்கிறாள். காதலன் காணுகிறான்.)
காதலன் 
ஐயகோ அவள்தான்! அவள்தான்! மாண்டாள்.
பொரிவிழிக் கள்வன் புயலெனத் தோன்றி
அழகு விளக்கை அவித்தான்! நல்ல
கவிதையின் சுவையைக் கலைத்தான் ஐயகோ!
என்றன் அன்பே, என்றன் உயிரே!
என்னால் வந்தாய், என்னுடன் வந்தாய்.
பொன்னாம் உன்னுயிர் போனது! குருதியின்
சேற்றில் மிதந்ததுன் சாற்றுச் சுவையுடல்!
கண்கள் பொறுக்குமோ காண உன்நிலை?
எண்ணம் வெடித்ததே! எல்லாம் நீஎன
இருந்தேன்; இவ்வகை இவ்விடம் இறந்தாய்!
தனித்தேன், உய்விலை. தையலே, தையலே!
என்பால் இயற்கை ஈந்த இன்பத்தைச்
சுவைக்குமுன் மண்ணில் சுவர வைத்துக்
கண்ணீர் பெருக்கிநான் கதற வைத்ததே!
ஐயகோ பிரிந்தாய்! ஐயகோ பிரிந்தாய்!

9. அறநிலை

கல்வி இல்லார்க்குக் கல்வி ஈகிலார்
செல்வம் இல்லார்க்குச் செல்வம் ஈகிலார்
பசிப்பிணி, மடமைப் பரிமேல் ஏறி
சாக்காடு நோக்கித் தனிநடை கொண்டது!
அன்போ அருளோ அடக்கமோ பொறுமையோ
இன்சொலோ என்ன இருத்தல் கூடும்?
வாழான் ஒருவன் வாழ்வானைக் காணின்
வீழ இடும்பை விளைக்கின் றானே!
வையம் உய்யு மாறு
செய்வன செய்து கிடப்பேன் இனிதே!



2.3. காதல் வாழ்வு


ஒன்று

மணம் முடிந்தது.
தனியிடம், விடுதலைபெற்ற இரண்டுள்ளம், அளவு 
கடந்த அன்பு - இவை மகிழ்ச்சிக் கொடியேற்றிக் 
காதல் முரசு முழக்கின - இன்ப விழா! முடிவில்லை.

இரண்டு

ஒருநாள் அவர்கள் இந்த உலகில் இறங்கி வந்து
பேசலுற்றார்கள்.
"மக்கள் தொடர்பில்லாதது. தென்றலில் சிலிர்க்கும்
தழை மரங்கள் உள்ளது. ஊற்றிற் சிறந்த நீர் நிலையின்
துறையில் அமைந்த நுழைவாயிலுல்லது. அழகிய 
சிறுகுடில்! நாம் அங்கே தங்கலாம் - இது என் அவா 
அத்தான்."
"ஆம்! குறைவற்ற தனிமை!"
பறந்தார்கள்.
மூன்று

"நாயின் நாக்கைப் போன்ற சிவந்த மெல்லடியைத்
தூக்கிவை குடிசையில்."
"நான் மட்டுமா?"
அதிர்ந்தது அவள் உள்ளம்!
இமைப்போதில் ஒன்றில் ஒன்று புதைந்த இரண்டுடல்
குடிசையில் நுழைந்தன.
"விட்டுப் பிரிவேன் என்று அச்சப் பட்டாயா?"
"மன்னிக்க வேண்டும்!"
குடிசை சாத்தப் பட்டது.
நாவற்பழம் நீர்நிலையில் விழுந்து கொண்டிருக்கும்
இச்சிச் சென்ற ஒலி குடிசைக்குள் சென்றது. அதே
ஒலி குடிசையினின்றும் வௌிவந்தது. இது எதிரொலி
யன்று!

நான்கு

"தேக்கும் அதில் உடல் பின்னிய சீந்தற் கொடியும்
பார், நம்மைப்போல!"
"இல்லை, அரண்மனை கசந்தால் அழகிய குடிலில்
குடியேறத் தேக்கு நடவாது; சீந்தல் நகராது."
வானில் ஓர் ஒலி!
"வைகையின் மங்கிய ஒளியில் மங்காத இன்னிசையை 
உதிர்த்தன வானப் புட்கள், ஆணும் பெண்ணுமாக!"
"நாமும் வானில் -- அடடா சிறகில்லையே!"
நீர்நிலை கட்டித் தழுவிக் கொண்டது இருவரையும்.

ஐந்து

"கெண்டைகள் துள்ளி விளையாடி நீரின் அடிமட்டத்தில் 
அள்ளி நுகர்வன இன்பத்தை!"
"நாமும் அங்கு இன்பம் நுகர்வோம் -- அடடா, நாம் 
மீன்களல்லவே!"
கண்ணிமைப்போது நான் நீருக்குள் ஒளிந்து கொள்கிறேன்!
பிற்பகுதியும் கேள்."
"நிறுத்துங்கள்! முற்பகுதியே என் பாதி உயிரைப் போக்கி
விட்டது!"
மாற்றிச் சுவைக்கும் நான்கு விழிகள் தம்மிற் பிரியாமல்
நீராடின.

ஆறு

"கரையேறுங்கள் என்னோடு."
"மாலையின் குளிரும் நனைந்த சேலையின் குளிரும்
உன் இன்பத்தைப் பெருக்கவில்லையா?"
"தவறு! நம் இருவர்க்கும் நடுவில் முயல் நுழையும் வௌி, 
இதற்கு நனைந்த ஆடை காரணம்."
"அதோ நம்மை நோக்கி நம் வீட்டு ஆள்."
குடிசையில் மறைந்தார்கள் ஓடி!

ஏழு

"அழைத்துவரச் சொன்னார்கள் அப்பா."
"ஏன்?"
"கப்பல் வந்திருக்கிறது."
"மெல்லப் பேசு!"
"என்ன ஓசை குடிசையின் உட்கட்டில்? விட்டு 
விட்டு இசைக்கும் ஒருவகைச் சிட்டுக் குரல்!"
"என்ன சொன்னார் அப்பா?"
"அனுப்ப வேண்டுமாம் உம்மை."
"சிங்கைக்கா?"
"ஆம். -- என்ன அங்கே திட்டென்று விழுந்த 
உடலின் ஓசை!"
"நாலு நாட்கள் நீடிக்கலாமா?"
"இன்றைக்கே! இதென்ன குடிசையில் வெள்ளம்?"
"நீ போ! இதோ வருகின்றேன்."
எட்டு

"தேம்பி அழுது திட்டென்று வீழ்ந்து கண்ணீரை 
ஆறாய்ப் பெருக்கினை அன்புடையாளே!"
"இறக்கமாட்டேன் அத்தான், உனைவிட்டுப் 
பிரியவில்லை என்று நீங்கள் உறுதி கூறுமட்டும்."
"கடமை என் வாயை அடைக்கிறது." 
"என் மடமை கிடந்து துடிக்கிறது."
"மடமை அல்ல; உயிரின் இயற்கை."
" `தந்தை சொற்படி நடக்கட்டும் என் அத்தான்'
என்று என் நெஞ்சுக்குக் கூற என்னால் முடிகிறது;
உயிருக்குச் சொல்லி நிறுத்த முடியவில்லை."
ஒன்பது

"தோழி, நான் அப்பாவிடம் போகிறேன்."
"நீர் நிலையை அடுத்த குடிசையிலா அப்பா இருக்கிறார்?"
"என் கால்கள் என்னை ஏமாற்றுகின்றன. என் பிரிவால் 
அவள் சாகிறாள்! சென்று காப்பாற்று."
"எவ்வளவு நேரம்?"
"நேரமா?"
"எத்தனை நாள்?"
"நாளா? அடுத்த ஆண்டில் வந்துவிடுவேன்."
"கால் நாழிகை சாக்காட்டின் கதவைச் சாத்திப் பிடித்துக் 
கொண்டிருக்க முடியும். ஐயா! அடுத்த ஆண்டில் அவள் 
உடலின் துகள் கலந்த மண்ணும் மட்கி வௌியுடன்
வௌியாய்க் கலந்ததென்ற கதை பழமையாய்விடும்."
"என் துன்ப உள்ளத்தைத் தந்தையிடம் கூறுகிறேன்."

பத்து

(நூலேணியில் அழுகுரல், கண்ணீர் -- அவன் கப்பலேறுகிறான்.")
கப்பலுக்குள் - "இங்கே உட்கார வேண்டும் நீவிர்."
"கணவனும் மனைவியும் தங்கும் இடமல்லவா இது?"
"இறந்திருப்பாளானால், அது அவள் செய்த முதல் 
குற்றம். இறந்தசெய்தி என் காதில் எட்டாதிருக்க
முயன்றிருப்பாளானால் அது இரண்டாவது குற்றம்."
"இரண்டாவது குற்றத்திற்கு அவள் ஆளாகவில்லை.
தன் நிலையை விளக்கும்படி என்னை அனுப்பினாள்."
"பயனற்றது இவ்வுலகம்! ஒரு பற்று என்னை வாட்டு
கின்றது. அவள் இறந்தாள்; ஆதலால் நான் இறந்தேன்.
இதை அவள் அறியாளே! நீவிர் சான்றாகக் கடலில் 
கலக்கிறேன்."
சிரிப்பு! - இரண்டு இளைஞர்கள் தோழியும் தலைவியு
மாகிறார்கள்.
"அத்தான்! நாம் இருவரும் சிங்கைக்குப் போகிறோம்."
"தோழி! என் மாமாவிடமும் அத்தையிடமும் உடலும்
உயிருமாக இருவரும் செல்லுகின்றார்கள் என்று கூறு!"
வாழ்க, காதல் வாழ்வு!



இயற்கை


2. 4. இயற்கைச் செல்வம்


விரிந்த வானே, வௌியே - எங்கும்
விளைந்த பொருளின் முதலே!
திரிந்த காற்றும், புனலும் - மண்ணும்
செந்தீ யாவும் தந்தோய்.
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே!
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை! புதுமை! புதுமை!

அசைவைச் செய்தாய் ஆங்கே - ஒலியாம்
அலையைச்செய்தாய் நீயே!
நசையால் காணும் வண்ணம் - நிலமே
நான்காய் விரியச் செய்தாய்!
பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம்
பைந்தமிழ் பேசச் செய்தாய்!
இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை,
ஏந்திழை இனிமைக் குரலால்!

எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்
எதினும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம் - எமையே
துய்க்கச் செய்தாய் அடடா!
கல்லா மயில், வான்கோழி - புறவுகள்
காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் `ஆடற் - கலை'தான்
அமையச் செய்தாய் வாழி!



2.5. அதிகாலை


அமைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக
அழகான இருட்சோலை தனில்
அமைதியில் ஒளி...

இமை திறந்தே தலைவி கேட்டாள் - சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்
அமைதியில் ஒளி...

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைத்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ
ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்
அமைதியில் ஒளி...

பெற்றவர் கூடத்தில் மனைமேற் பொருந்தித் - தம்
பிள்ளைக ளோடு சிற்றுண வருந்தி
உற்ற வேலையில் கைகள் வருந்தி
உழைக்க லாயினர் அன்பு திருந்தி
அமைதியில் ஒளி...



2. 6. வானம்பாடி


வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ?

வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரல்எடுத்துப்
பெய்த அமுதா? எனநானே பேசுகையில்,

நீநம்பாய் என்று நிமிர்ந்தஎன் கண்ணேரில்
வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது
ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க
நீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்.

உன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
என்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்
பாடிக்கொண்டே யிருப்பாய்! பச்சைப் பசுந்தமிழர்
தேடிக்கொண் டேயிருப்பார் தென்பாங்கை உன்பால்!

அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன்
இசைமழையால் இன்புறுவோம் யாம்.



2.7. மாவலிபுரச் செலவு


(ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மாலை 4 மணிக்குச் சென்னை பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி, மறுநாள் காலை 9 மணிக்கு மாவலிபுரம் சேர்ந்தோம் நானும் என் தோழர் பலரும். வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாய்க் கழிந்தது. எனினும் அப்பெருந்தோணியைக் கரையோரமாக ஒரு கயிறுபற்றி ஒருவன் இழுத்துச் சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும் இரங்கத்தக்க காட்சி.அதையும் அங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதியதாகும் இப்பாட்டு. 1934) 

சென்னையிலே ஒரு வாய்க்கால் - புதுச்
சேரி நகர்வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் - எழில் 
அன்னம் மிதப்பது போலே.
என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி - பின்பு
தீவிரப் பட்டது வேகம்.

தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள்
சென்றிடும் போது விசாலச்
சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெய்யில்
தூவிடும் பொன்னொளி கண்டோம்.
நெற்றி வளைத்து முகத்தை - நட்டு
நீரினை நோக்கியே நாங்கள்
அற்புதங் கண்டு மகிழ்ந்தோம் - புனல்
அத்தனையும் ஒளி வானம்.

சஞ்சீவி பர்வதச் சாரல் - என்று
சாற்றும் சுவடி திறந்து
சஞ்சார வானிலும் எங்கள் - செவி
தன்னிலும் நற்றமிழ் ஏற்றி
அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க
ஆசையினால் ஒரு தோழர்.
செஞ்சுடர் அச்சம யத்தில் - எம்மைச்
செய்தது தான்மிக்க மோசம்.

மிக்க முரண்கொண்ட மாடு - தன்
மூக்குக் கயிற்றையும் மீறிப்
பக்கம் இருந்திடும் சேற்றில் - ஓடிப்
பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்
சக்கரம் போலிருள் வானில் - முற்றும்
சாய்ந்தது சூரிய வட்டம்!
புக்க பெருவௌி யெல்லாம் - இருள் 
போர்த்தது! போனது தோணி.

வெட்ட வௌியினில் நாங்கள் - எதிர்
வேறொரு காட்சியும் கண்டோம்
குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்
கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்
மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப
வார்த்தைகள் பேசிடும் போது
கட்டுக் கடங்கா நகைப்பைப் - பனை 
கலகல வென்று கொட்டிற்றே.

எட்டியமட்டும் கிழக்குத் - திசை
ஏற்றிய எங்கள் விழிக்குப் 
பட்டது கொஞ்சம் வௌிச்சம் - அன்று
பௌர்ணமி என்பதும் கண்டோம்.
வட்டக் குளிர்மதி எங்கே - என்று
வரவு நோக்கி யிருந்தோம்.
ஒட்டக மேல்அர சன்போல் - மதி
ஓர்மரத் தண்டையில் தோன்றும்.

முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று
முற்றும் சிவந்தது சொல்வாய்.
இத்தனை கோபம் நிலாவே - உனக்கு
ஏற்றியதார் என்று கேட்டோம்.
உத்தர மாகஎம் நெஞ்சில் - மதி
ஒன்று புகன்றது கண்டீர்.
சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால்
திரும்பிப் பார்த்திட்ட போது.

தோணிக் கயிற்றினை ஓர்ஆள் - இரு
தோள்கொண் டிழுப்பது கண்டோம்.
காணச் சகித்திட வில்லை - அவன்
கரையொடு நடந்திடு கின்றான்.
கோணி முதுகினைக் கையால் - ஒரு
கோல்நுனி யால்மலை போன்ற
தோணியை வேறொரு வன்தான் - தள்ளித்
தொல்லை யுற்றான்பின் புறத்தில்.

இந்த உலகினில் யாரும் - நல்
இன்ப மெனும்கரை யேறல்
சந்தத மும்தொழி லாளர் - புயம்
தரும் துணையன்றி வேறே
எந்த விதத்திலும் இல்லை - இதை
இருபது தரம் சொன்னோம்.
சிந்தை களித்த நிலாவும் - முத்துச்
சிந்தொளி சிந்தி உயர்ந்தான்.

நீல உடையினைப் போர்த்தே - அங்கு
நின்றிருந்தாள் உயர் விண்ணாள்.
வாலிப வெண்மதி கண்டான் - முத்து
மாலையைக் கையி லிழுத்து 
நாலு புறத்திலும் சிந்தி - ஒளி
நட்சத் திரக்குப்பை யாக்கிப்
பாலுடல் மறையக் காலை - நாங்கள்
பலி புரக்கரை சேர்ந்தோம்.



2.8. இருசுடரும் என் வாழ்வும்


காலை

ஒளியைக் கண்டேன் கடல்மேல் - நல்
உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!
நௌியக் கண்டேன் பொன்னின் - கதிர்
நிறையக் கண்டேன் உவகை!
துளியைக் கண்டேன் முத்தாய்க் - களி
துள்ளக் கண்டேன் விழியில்!
தௌியக் கண்டேன் வையம் - என்
செயலிற் கண்டேன் அறமே!

மாலை

மறையக் கண்டேன் கதிர்தான் - போய்
மாயக் கண்டேன் சோர்வே!
நிறையக் கண்டேன் விண்மீன் - என்
நினைவிற் கண்டேன் புதுமை!
குறையக் கண்டேன் வெப்பம் - எனைக் 
கூடக் கண்டேன் அமைதி!
உறையக் கண்டேன் குளிர்தான் - மேல்
ஓங்கக் கண்டேன் வாழ்வே!



2.9. தென்றல்


பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்
புதுமணத்தில் தோய்ந்து,பூந் தாது வாரி,
நதிதழுவி அருவியின்தோள் உந்தித் தெற்கு
நன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்
சதிராடி, மூங்கிலிலே பண் எழுப்பித்
தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,
முதிர்தெங்கின் இளம்பாளை முகம் சுவைத்து,
முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி,

அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன்
சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்
செல்வம்ஒன்று வரும்;அதன்பேர் தென்றற் காற்று!
வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி
விட்டதென என்மனைவி அறைக்குப் போனாள்.
அந்தியிலே கொல்லையில்நான் தனித்தி ருந்தேன்
அங்கிருந்த விசுப்பலகை தனிற் படுத்தேன்.

பக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப்
பழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து
மிக்கஅவ சரமாகச் சென்ற பெண்ணாள்
விரைவாக என்னிடத்தில் வருதல் வேண்டும்.
அக்காலம் அறைக்குவந்த பூனை யின்மேல்
அடங்காத கோபமுற்றேன் பிறநே ரத்தில்
பக்காப்பூ னைநூறு பொருளை யெல்லாம்
பாழாக்கி னாலும்அதில் கவலை கொள்ளேன்.

வாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத் தேனை
மனிதனது தனிமையினால் அடைதல் இல்லை;
சூழ்ந்த துணை பிரிவதெனில் இரண்டு நெஞ்சும்
தொல்லையுறு வகைஇருத்தல் வேண்டும் அங்கே
வீழ்ந்துகிடந் திட்டஎனைத் `தனிமை', `அந்தி'
இவைஇரண்டும் நச்சுலகில் தூக்கித் தள்ளப்
பாழான அவளுடலின் குளிர்ச்சி, மென்மை,
மணம் இவற்றைப் பருகுவதே நினைவாயிற்று.

தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள்
சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும்;
சரியாத குழல்சரிய லானாள் போலும்;
தடவினாள் போலும்;எனைத் தன்க ரத்தால்!
புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்! 
புரியட்டும் எனஇருந்தேன் எதிரில் ஓர்பெண்
பிரிவுக்கு வருந்தினே னென்றாள் ஓகோ!
பேசுமிவள் மனைவி;மற் றொருத்தி தென்றல்!



2. 10. தொழுதெழுவாள்


உண்டனன் உலவி னன்பின்
உள்ளறை இட்ட கட்டில்
அண்டையில் நின்ற வண்ணம்
என்வர வறிவா னாகி,
மண்டிடும் காதற் கண்ணான்
வாயிலில் நின்றி ருந்தான்!
உண்டேன்என் மாமி என்னை
உறங்கப்போ என்று சொன்னாள்.

அறைவாயி லுட்பு குந்தேன்
அத்தான்தன் கையால் அள்ளி
நிறைவாயின் அமுது கேட்டுக்
கனிஇதழ் நெடிது றிஞ்சி
மறைவாக்கிக் கதவை, என்னை
மணிவிளக் கொளியிற் கண்டு
நறுமலர்ப் பஞ்ச ணைமேல்
நலியா துட்கார வைத்தான்.

கமழ் தேய்வு* பூசி வேண்டிக்
கனியோடு பாலும் ஊட்டி
அமைவுற என்கால் தொட்டே
அவனுடை யால்து டைத்தே
தமிழ்,அன்பு சேர்த்துப் பேசித்
தலையணை சாய்த்துச் சாய்ந்தே
இமையாது நோக்கி நோக்கி
எழில்நுதல் வியர்வை போக்கி,
* தேய்வு -- சந்தனம்

தென்றலும் போதா தென்று
சிவிறி*கைக் கொண்டு வீசி
அன்றிராப் பொழுதை இன்பம்
அறாப் பொழுதாக்கி என்னை
நன்றுறத் துயிலிற் சேர்த்தான்
நவிலுவேன் கேட்பாய் தோழி.
* சிவிறி -- விசிறி 

கண்மூக்குக் காது வாய்மெய் 
இன்பத்திற் கவிழ்ப்பான். மற்றும்
பெண்பெற்ற தாயும் போல்வான்;
பெரும்பணி எனக்கி ழைப்பான்.
வண்மையால் கால் துடைப்பான்
மறுப்பினும் கேட்பா னில்லை.
உண்மையில் நான்அ வன்பால்
உயர்மதிப் புடையேன் தோழி!

மதிப்பிலாள் என்று நெஞ்சம்
அன்புளான் வருந்து வானேல்
மதிகுன்றும் உயிர்போன் றார்க்கு
மறம்*குன்றும் செங்கோல் ஓச்சும்
அதிராத்தோள் அதிர லாகும்
அன்புறும் குடிகள் வாழ்வின்
நிதிகுன்றும் மன்னன் கையில்
மழைகுன்ற நேரும் அன்றோ?
* மறம் - வீரம்

நிலந்தொழேன் நீர்தொ ழேன்விண்
வளிதொழேன் எரிதொ ழேன்நான்
அலங்கல்சேர் மார்பன் என்றன்
அன்பனைத் தொழுவ தன்றி!
இலங்கிழைத் தோழி கேள்!பின்
இரவுபோ யிற்றே. கோழி
புலர்ந்தது பொழுதென் றோதப்
பூத்ததென் கண்ண ரும்பு.

உயிர்போன்றான் துயில் களைந்தான்
ஒளிமுகம் குறுந கைப்புப்
பயின்றது. பரந்த மார்பில்
பன்மலர்த் தாரும் கண்டேன்.
வெயில்மணித் தோடும் காதும்
புதியதோர் வியப்பைச் செய்ய
இயங்கிடும் உயிரன் னோனை
இருகையால் தொழுதெ ழுந்தேன்.

அழைத்தனர் எதிர்கொண் டெம்மை
அணிஇசை பாடி வாழ்த்தி.
இழைத்திடு மன்று நோக்கி
ஏகினோம். குடிகள் அங்கே
"ஒழித்தது வறுமை அன்னாய்
உதவுக" என்று நைந்தார்.
"பிழைத்தது மழை*என் அத்தான்
பெய்"என்றேன் குடிகட் கெல்லாம்.

மழைத்தது* மழைக்கை** செந்நெல்
வண்டிகள் நடந்த யாண்டும்.

* பிழைத்தது மழை - மழை பெய்யவில்லை.
* மழைத்தது - மழைபோல் செந்நெல் தந்தது.
** மழைக்கை - கொடுக்குமியல்புள்ள மன்னன் கை.



2.11. சொல்லும் செயலும்


சொல்வதென்றால் வெட்கமடி தோழி - சொல்லச்
சொல்லுகின்றாய் என்துணைவன் 
சொன்னதையும் செய்ததையும்
சொல்வதென்றால்...

முல்லைவிலை என்ன என்றான்
இல்லைஎன்று நான் சிரித்தேன்
பல்லைஇதோ என்று காட்டிப்
பத்துமுத்தம் வைத்து நின்றான்
சொல்வதென்றால்...

பின்னலைப்பின் னேகரும்பாம் பென்றான் - உடன்
பேதைதுடித் தேன்அணைத்து நின்றான்
கன்னல் என்றான் கனியிதழைக்
காதல்மருந் தென்று தின்றான்.
சொல்வதென்றால்...

நிறையிருட்டில் ஒருபுதிரைப் போட்டான்;
நிலவெறிப்ப தென்னவென்று கேட்டான்.
குறைமதியும் இல்லை என்றேன்.
குளிர்முகத்தில் முகம் அணைத்தான்.
சொல்வதென்றால்...



2.12. இருவர் ஒற்றுமை


எனக்கும் உன்மேல் விருப்பம் - இங்
குனக்கும் என்மேல் விருப்பம் - அத்தான்
எனக்கும் உன்மேல்...

எனக்கு நீதுணை அன்றோ - இங்
குனக்கு நான்துணை அன்றோ? - அத்தான்
எனக்கும் உன்மேல்...

இனிக்கும் என்செயல் உனக்கும் - இங்
கெனக்கும் உன்செயல் இனிக்கும்!
தனித்தல் உனக்கும் எனக்கும் - நொடி
நினைப்பின் வருத்தம் மனத்தில் - அத்தான்
எனக்கும் உன்மேல்...

விழி தனிலுன தழகே - என்
அழ கிலுனது விழியே
தொழுத பிறகுன் தழுவல் - நான்
தழுவிப் பிறகுன் தொழுதல் - அத்தான்
எனக்கும் உன்மேல்...

நீஉடல்! உயிர் நானே - நாம்
நிறை மணமலர் தேனே
ஓய்விலை நம தன்பும் - இங்கு
ஒழிவிலை பே ரின்பம் - அத்தான்
எனக்கும் உன்மேல்...



2.13. பந்துபட்ட தோள்


கட்டுடலிற் சட்டை மாட்டி - விட்டுக்
கத்தரித்த முடி சீவிப்
பட்டுச் சிறாய்இடை அணிந்தே - கையில்
பந்தடி கோலினை ஏந்திச்
சிட்டுப் பறந்தது போலே - எனை
விட்டுப் பிரிந்தனர் தோழி!
ஒட்டுற வற்றிட வில்லை - எனில்
உயிர் துடித்திட லானேன். 

வடக்குத் தெருவௌி தன்னில் - அவர்
மற்றுள தோழர்க ளோடும்
எடுத்ததன் பந்தடி கோலால் - பந்தை
எதிர்த்தடித் தேவிளை யாடிக்
கடத்திடும் ஒவ்வொரு நொடியும் - சாக்
காட்டின் துறைப்படி அன்றோ?
கொடுப்பதைப் பார்மிகத் துன்பம் - இக்
குளிர்நறுந் தென்றலும் என்றாள்.

"வளர்ப்பு மயில்களின் ஆடல் - தோட்ட
மரங்கள், மலர்க்கிளைக் கூட்டம்,
கிளிக்குப் பழந்தரும் கொடிகள் - தென்னங்
கீற்று நடுக்குலைக் காய்கள்
அளித்த எழில்கண் டிருந்தாய் - உன்
அருகினில் இன்பவெள் ளத்தில்
குளிர்ந்த இரண்டு புறாக்கள் - காதல்
கொணர்ந்தன உன்றன் நினைவில்."

தோழிஇவ் வாறுரைக் குங்கால் - அந்தத்
தோகையின் காதலன் வந்தான்.
"நாழிகை ஆவதன் முன்னே - நீவிர்
நண்ணிய தென்இங்கே" என்றாள்.
"தாழ்குழலே! அந்தப் பந்து - கைக்குத்
தப்பிஎன் தோளினைத் தாக்கி 
வீழ்ந்தது; வந்ததுன் இன்ப 
மேனி நினை"வென்று சொன்னான்.



2.14. தன்மான உலகு


என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
பொன்நிறை வண்டியொடு போந்து பல்லோர்
பெற்றோர் காலைப் பெரிது வணங்கி
நற்றாலி கட்ட நங்கையைக் கொடீர்என்று
வேண்டிட அவரும் மெல்லிக்குச் சொல்லிடத்
தூண்டிற் புழுப்போல் துடித்து மடக்கொடி
"தன்மா னத்து மாப்பெரும் தகைக்குநான்
என்மா னத்தை ஈவேன்" என்று
மறுத்து, நான்வரும் வரைபொருத் திருந்தே
சிறுத்த இடுப்புத் திடுக்கிட நடந்தே
என்வீடு கண்டு தன்பாடு கூறி
உண்ணாப் போதில் உதவுவெண் சோறுபோல்
வெண்ணகை காட்டிச் செவ்விதழ் விரித்தே
என்னை அத்தான் என்ற ழைத்தாள்.

என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
"ஏன்"எனில் அதட்டலென் றெண்ணு வாளோ?
"ஏனடி" என்றால் இல்லைஅன் பென்னுமோ?
"ஏனடி என்றன் இன்னுயிரே" எனில்
பொய்யெனக் கருதிப் போய்விடு வாளோ?
என்று கருதி இறுதியில் நானே
"காத்திருக் கின்றேன், கட்டழ கே"என
உண்மை கூறினேன் உவப்ப டைந்தாள்.
ஒருநொடிப் போதில் திருமணம் நடந்ததே.

என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
காத்தி ருப்பது கழறினேன்; உவந்தாள்.
ஒருநொடிக் கப்புறம் மீண்டும்
திருமணம்! நாடொறும் திருமணம் நடந்ததே!



2. 15. மெய்யன்பு


மலடிஎன்றேன், போஎன்றேன், இங்கி ருந்தால்
மாய்த்திடுவேன் என்றுரைத்தேன். மங்கை நல்லாள்
கலகலென நீருகுத்த கண்ணீ ரோடும்,
கணகணெனத் தணல்பொங்கும் நெஞ்சத் தோடும்,
விலகினாள்! விலகினவே சிலம்பின் பாட்டும்!
விண்ணிரங்கும் அழுகுரலோ இருட்டை நீந்தக்
கொலைக் கஞ்சாத் திருடரஞ்சும் காடு சென்றாள். 
கொள்ளாத துன்பத்தால் அங்கோர் பக்கம்,

உட்கார்ந்தாள், இடைஒடிந்தாள், சாய்ந்து விட்டாள்.
உயிருண்டா? இல்லையா? யாரே கண்டார்!
இட்டலிக்கும் சுவைமிளகாய்ப் பொடிக்கும் நல்ல
எண்ணெய்க்கும் நானென்ன செய்வேன் இங்கே?
கட்டவிழ்த்த கொழுந்திலையைக் கழுவிச் சேர்த்துக்
காம்பகற்றி வடித்திடுசுண் ணாம்பு கூட்டி
வெட்டிவைத்த பாக்குத்தூள் இந்தா என்று
வெண்முல்லைச் சிரிப்போடு கண்ணாற் கொல்லும்

தெள்ளமுதம் கடைத்தெருவில் விற்ப துண்டோ? 
தேடிச்சென் றேன்வானம் பாடி தன்னைச்
"சொள்ளொழுகிப் போகுதடி என்வாய்; தேனைச் 
சொட்டுகின்ற இதழாளே! பிழைபொ றுப்பாய்;
பிள்ளைபெற வேண்டாமே; உனைநான் பெற்றால்
பேறெல்லாம் பெற்றவனே ஆவேன்" என்றே
அள்ளிவிடத் தாவினேன் அவளை! என்னை
அவள் சொன்னாள் "அகல்வாய்நீ அகல்வாய்" என்றே.

"மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் எதோ
மனக்கசப்பு வரல்இயற்கை. தினையை நீதான்
பனையாக்கி, நம்உயர்ந்த வாழ்வின் பத்தைப்
பாழாக்க எண்ணுவதா? எழுந்தி" ரென்றேன்.
எனைநோக்கிச் சொல்லலுற்றாள்: "நமக்கு மக்கள்
இல்லையெனில் உலகமக்கள் நமக்கு மக்கள்
எனநோக்கும் பேரறிவோ உன்பால் இல்லை;
எனக்கும்இனி உயிரில்லை" என்றாள் செத்தாள்.

திடுக்கென்று கண்விழித்தேன். என்தோள் மீது 
செங்காந்தாள் மலர்போலும் அவள்கை கண்டேன். 
அடுத்தடுத்துப் பத்துமுறை தொட்டுப் பார்த்தேன்;
அடிமூக்கில் மூச்சருவி பெருகக் கண்டேன்.
படுக்கையிலே பொற்புதையல் கண்ட தைப்போல்
பாவையினை உயிரோடு கண்ணாற் கண்டேன்.
சடக்கென்று நானென்னைத் தொட்டுப் பார்த்தேன்
சாகாத நிலைகண்டேன் என்னி டத்தே.



2.16. பெற்றோர் இன்பம்


கூடத்து நடுவில் ஆடும் ஊஞ்சலில்
சோடித்து வைத்த துணைப்பொற் சிலைகள்போல்
துணைவனும் அன்புகொள் துணைவியும் இருந்தனர்!
உணவு முடிந்ததால், உடையவள் கணவனுக்குக்
களிமயில் கழுத்தின் ஒளிநிகர் துளிரும்,
சுண்ணமும் பாக்குத் தூளும், கமழும்
வண்ணம் மடித்து மலர்க்கை ஏந்தினாள். 
துணைவன் அதனை மணிவிளக் கெதிரில்
மாணிக் கத்தை வைத்ததுபோல் உதடு
சிவக்கச் சிவக்கத் தின்றுகொண் டிருந்தான்.
ஆயினும் அவன்உளம் அல்லலிற் கிடந்தது.

"கேட்டான் நண்பன்; சீட்டு நாட்டின்றி
நீட்டினேன் தொகை! நீட்டினான் கம்பி;
எண்ணூற் றைம்பது வெண்பொற் காசுகள்
மண்ணா யினஎன் கண்ணே" என்றான். 
தலைவன் இதனைச் சாற்றி முடிக்குமுன்
ஏகாலி அவர் எதிரில் வந்து
கூகூ என்று குழறினான்; அழுதான்.
உழைத்துச் சிவந்ததன் உள்ளங் கைகள்
முழுக்க அவனது முகத்தை மறைத்தன.
மலைநிகர் மார்பில் அலைநிகர் கண்ணீர்
அருவிபோல் இழிந்தது. "தெரிவி அழாதே
தெரிவி" என்று செப்பினான் தலைவன்.
"நூற்றிரண் டுருப்படி நூல்சிதை யாமல்
ஆற்றில் வெளுத்துக் காற்றில் உலர்த்திப்
பெட்டி போட்டுக் கட்டி வைத்தேன்.
பட்டா ளத்தார் சட்டையும் குட்டையும்
உடன் இருந்தன; விடிந்தது பார்த்தேன்.
உடல் நடுங்கிற்றே! ஒன்றும் இல்லை" 
என்று கூறினான் ஏழை ஏகாலி.

அல்லல் மலிந்த அவ்வி டத்தில்,
வீட்டின் உட்புறத்து விளைந்த தான
இனிய யாழிசை கனிச்சாறு போலத் 
தலைவன் தலைவியைத் தழுவ லாயிற்று.

"நம்அரும் பெண்ணும் நல்லியும் உள்ளே
கும்மா ளமிடும் கொள்ளையோ" என்று
தலைவன் கேட்டான். தலைவி "ஆம்"என்று
விசையாய் எழுந்து வீட்டினுட் சென்றே
இசையில் மூழ்கிய இருபெண் களையும்
வருந்தப் பேசி வண்தமிழ் இசையை
அருந்தா திருக்க ஆணை போட்டாள்.

தலைவன்பால் வந்து தலைவி குந்தினாள்.
மகளொடு வீணை வாசித் திருந்த
நாலாவது வீட்டு நல்லி எழுந்து
கூடத்துத் தலைவர் கொலுவை அடைந்தாள்.
"என்ன சேதி?" என்றான் தலைவன்.
நல்லி ஓர்புதுமை நவில லுற்றாள்.

"கடலின் அலைகள் தொடர்வது போல
மக்கள் சந்தைக்கு வந்துசேர்ந் தார்கள்.
ஆடவர் பற்பலர் அழகுப் போட்டி
போடுவார் போலப் புகுந்தனர் அங்கே!
என்விழி அங்கொரு பொன்மலர் நோக்கி
விரைந்தது; பின்அது மீள வில்லை.
பின்னர் அவன்விழி என்னைக் கொன்றது;
என்னுளம் அவனுளும் இரண்டும் பின்னின;
நானும் அவனும் தேனும் சுவையும்
ஆனோம். இவைகள் அகத்தில் நேர்ந்தவை.

மறுநாள் நிலவு வந்தது கண்டு
நல்லிக் காக நான்தெருக் குறட்டில்
காத்திருந் தேன்;அக் காளை வந்தான்.
தேனாள் வீட்டின்`எண்' தெரிவி என்றான்.
நான்கு - எனும்மொழியை நான் முடிக்குமுன்
நீயா என்று நெடுந்தோள் தொட்டுப்
பயிலுவ தானான் பதட்டன்; என்றன்
உயிரில் தன்உயிர் உருக்கிச் சேர்த்து
மறைந்தான்" என்று மங்கை என்னிடம்
அறைந்தாள். உம்மிடம் அவள் இதைக்கூற 
நாணினாள். ஆதலால் நான்இதைக் கூறினேன்
என்று நல்லி இயம்பும் போதே
இன்னலிற் கிடந்த இருவர் உள்ளமும்
கன்னலின் சாற்றுக் கடலில் மூழ்கின.

"நல்லியே நல்லியே! நம்பெண் உன்னிடம்
சொல்லியது இதுவா? நல்லது நல்லது,
பெண்பெற்ற போது பெருமை பெற்றோம்.
வண்ண மேனி வளர வளர,எம்
வாழ்வுக்கு உரிய வண்மை பெற்றோம்;
ஏழ்ந ரம்புகொள் யாழ்போல் அவள்வாய்
இன்னான் இடத்தில் என்அன் பென்று
சொன்னதால் இன்பம் சூழப் பெற்றோம்.
என்மகள் உள்ளத்தில் இருக்கும் தூயனின்
பொன்னடி தனில்எம் பொருளெல்லாம் வைத்தும்,
இரந்தும் பெண்ணை ஏற்றுக் குடித்தனம்
புரிந்திடச் செய்வோம் போ"என் றுரைத்தான்.

தலைவி சாற்றுவாள் தலைவ னிடத்தில்.
"மலைபோற் சுமந்தஎன் வயிற்றில் பிறந்தபெண்
நல்லி யிடத்திற் சொன்னாள். இதனைச்
சொல்லும் போதில்என் செல்வியின் சொற்கள்
முல்லை வீசினவோ! முத்துப் பற்கள்
நிலா வீசினவோ! நீல விழிகள்
உலவு மீன்போல் ஒளி வீசினவோ! 
நான்கேட் கும்பேறு பெற்றிலேன்" என்று
மகள்தன் மணாள னைக்கு றித்ததில்
இவர்கட்கு இத்தனை இன்பம் வந்ததே!



2.17. பணமும் மணமும்


அத்தைமகன் முத்தனும் ஆளிமகள் தத்தையும்
ஒத்த உளத்தால் ஒருமித்து - நித்தநித்தம்
பேசிப் பிரிவார் பிறரறியா மற்கடி
தாசி எழுதியே தாமகிழ்வார் - நேசம்
வளர்ந்து வருகையிலே, மஞ்சினி தன்மைந்தன்
குளிர்ந்த பெருமாளைக் கூட்டி - உளங்கனிந்தே
ஆளியிடம் வந்தான்; அமர்ந்தான்; பின்பெண்கேட்டான்.
ஆளி சிரித்தே அவனிடத்தில் - "கேளண்ணா
தத்தை விதவைப்பெண் சம்மதமா?" என்றுரைத்தான்.
"மெத்தவிசேட" மெனச்சொல்லி மஞ்சினிதான் - ஒத்துரைத்தான்.
"சாதியிலே நான்மட்டம் சம்மதமா?" என்றே
ஓதினான் ஆளி. "ஒருபோதும் - காதில்நான்
மட்டம் உயர்வென்ற வார்த்தையையும் ஏற்பதில்லை
இட்டந்தான்" என்றுரைத்தான் மஞ்சினி. - "கிட்டியே
ஊர்ப்பானை தன்னை உருட்டி உயிர்வாழும்
பார்ப்பானை நீக்கிப் பழிகாரர் - தீர்ப்பான
நையும் சடங்ககற்றி நற்றமிழர் ஒப்பும்மணம்
செய்வாயா?" என்றாளி செப்பினான். - "ஐயோஎன் 
உத்தேசம் பார்ப்பான் உதவா தெனலன்றோ?
செத்தாலும் பார்ப்பானைத் தேடேனே! - சத்தியமாய்ச்
சொன்னேன்" எனஉரைத்தான் மஞ்சினி. சொன்னதும்
பின்ஆளி சம்மதித்தான் பெண்கொடுக்க! - அந்நேரம்
வந்த தொருதந்தி! வாசித்தான் ஆளிஅதை:
கந்தவேள் பாங்கில்நீர் கட்டிய - சொந்தப்
பணம்இல்லை, பாங்கு முறிந்தது, யாதும் 
குணமில்லை என்றிருத்தல் கண்டு - திணறியே
"வீடும் எனக்கில்லை வெண்ணிலையும் ஒன்றுமில்லை
ஆடுவிற்றால் ரூபாய்ஓர் ஐந்நூரு - கூடிவரும்
மஞ்சினி யண்ணா மணத்தை நடத்துவோம்
அஞ்சாறு தேதிக் கதிகமாய் - மிஞ்சாமல்
நாளமைப்போம்" என்றந்த ஆளி நவிலவே,
தோளலுத்த மஞ்சினி "ஆளியண்ணா - கேளிதை
இந்த வருடத்தில் நல்லநாள் ஏதுமில்லை
சிந்திப்போம் பின்"என்று செப்பினான். - "எந்த
வருடத்தி லே?எந்த வாரத்தில்? எந்தத்
தெருவில்? திருமணம் என்ற - ஒருசொல்
நிச்சயமாய்ச் சொல்லண்ணா நீ"என்றான் ஆளிதான்.
பச்சோந்தி மஞ்சினி பாடலுற்றான்: - "பச்சையாய்த்
தாலி யறுத்தவளைத் தாலிகட்டி னால்ஊரார்
கேலிபண்ண மாட்டாரா கேளண்ணா? - மேலும் 
சாதியிலே மட்டமென்று சாற்றுகின்றாய். அம்மட்டோ
வேதியனை நீக்கிடவும் வேண்டுமென்றாய் - ஏது
முடியாதே" என்று முடித்தெழுந்து சென்றான்.
படியேறி நின்றமெய்க் காதல் - துடிதுடிக்கும் 
முத்தன் அங்குவந்தான். "முகூர்த்தநாள் நாளைக்கே,
தத்தையை நீமணக்கச் சம்மதமா? - மெத்த
இருந்தசொத்தும் இல்லையப்பா ஏழைநான் நன்றாய்த்
தெரிந்ததா முத்தா? செலவும் - விரிவாக
இல்லை மணந்துகொள்" என்றுரைத்தான் ஆளி!அந்தச்
சொல்லால் துளிர்த்துப்பூத் துக்காய்த்து - நல்ல
கனியாய்க் கனிந்திட்ட முத்தன் உளந்தான்
தனியாய் இராதே "தடையேன் - இனி"என்றான்.
முந்திமணம் ஆயிற்றாம். "பாங்கு முறியவில்லை"
தந்திவந்து சேர்ந்ததாம் பின்பு!



2.18. திருமணம்


மாதிவள் இலையெனில் வாழ்தல் இலையெனும்
காதல் நெஞ்சக் காந்தமும், நாணத்
திரைக்குட் கிடந்து துடிக்கும் சேயிழை
நெஞ்ச இரும்பும் நெருங்கும்! மணம்பெறும்!

புணர்ச்சி இன்பம் கருதாப் பூவையின்
துணைப்பாடு கருதும் தூயோன், திருமணச்
சட்டத் தாற்பெறத் தக்க தீநிலை
இருப்பினும் அதனை மேற்கொளல் இல்லை.
அஃது திருமணம் அல்ல ஆதலால்!

என்தின வறிந்து தன்செங் காந்தள்
அரும்பு விரற்கிளி அலகு நகத்தால்
நன்று சொறிவாள் என்று கருதி
மணச்சட் டத்தால் மடக்க நினைப்பது
திருந்திவரும் நாட்டுக்குத் தீயஎடுத் துக்காட்டு!
மங்கையர் உலகின் மதிப்புக்குச் சாவுமணி!

மலம் மூடத்தான் மலர்பறித் தேன்எனில்
குளிர்மலர்ச் சோலை கோவென் றழாதா?

திருமண மின்றிச் செத்தால், அந்தச்
சில்லிட்ட பிணத்துக்குத் திருமணம் செய்ய
மெல்லிய வாழைக் கன்றைவெட் டுவது
புரோகிதன் புரட்டுநூல்! அதனைத்
திராவிடர் உள்ளம் தீண்டவும் நாணுமே!



கருத்துரைப் பாட்டு


2.19. தலைவன் கூற்று


(வேந்தனிட்ட வேலையை மேற்கொண்டு செல்லும் தலவன், தன் தேர்ப்பாகனை நோக்கி, `இன்று விரைந்து சென்று அரசன் இட்ட வேலையை முடித்து நாளைக்கே தலைவியின் இல்லத்தை அடைய வேண்டும்; தேரை விரைவாக நடத்து' என்று கூறுவது.)

நாமின்று சென்று நாளையே வருவோம்;
வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்;
இளம்பிறை போல்அதன் விளங்கொளி உருளை
விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்
காற்றைப் போலக் கடிது மீள்வோம்;
வளயல் நிறைந்த கையுடை
இளையளை மாண்புற யான்மணந் துவக்கவே.

(குறுந்தொகை 189--ஆம் பாடல். மதுரை ஈழத்துப் பூதன்றேவன் அருளியது.)



2.20. தலைவி கூற்று


(தலைவனை நினைத்துத் தான் துயிலாதிருத்தலைத் தோழிக்குத் தலைவி கூறியது.)

ஆர்ப்புறும் இடிசேர் கார்ப்பரு வத்தைக்
கொல்லையின் மணந்த முல்லைக் கொடியின்
சிரிப்பென அரும்பு விரிக்கும் நாடனை
எண்ணித் துயில்நீங் கியஎன்
கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே!

(குறுந்தொகை 186--ஆம் பாடல். ஒக்கூர் மாசாத்தி அருளியது.)



2.21. தோழி கூற்று


(தலைவன், தலைவியை மணம் புரியாமல் நெடுநாள் பழகி, ஒருநாள் வேலிப்புறத்திலே வந்து நிற்கிறான்.அவன் காதில் விழும்படி, தலைவியை நோக்கிக் கூறுகிறாள் தோழி: "தலைவன் நட்பினால் உன்தோள் வாடினாலும் உன் அன்பை அது குறைத்துவிடவில்லை" 
என்று.) 

மிளகு நீள்கொடி வளர்மலைப் பாங்கில்
இரவில் முழங்கிக் கருமுகில் பொழிய,
ஆண்குரங்கு தாவிய சேண்கிளைப் பலாப்பழம்
அருவியால் ஊர்த்துறை வரும்எழிற் குன்ற-
நாடனது நட்புநின் தோளை
வாடச் செய்யினும் அன்பைமாய்க் காதே!



2.22 கதவு பேசுமா?


காதல் துரத்தக் கடிதுவந்த வேல்முருகன்
ஏதும் உரையாமல் இருவிரலை வீட்டுத்
தெருக்கதவில் ஊன்றினான். "திறந்தேன்" என்றோர்சொல்
வரக்கேட்டான். ஆஆ! மரக்கதவும் பேசுமோ?
"என்ன புதுமை" எனஏங்க, மறுநொடியில்
சின்னக் கதவு திறந்த ஒலியோடு
தன்னருமைக் காதலியின் தாவுமலர்க் கைநுகர்ந்தான்!
புன்முறுவல் கண்டுள்ளம் பூரித்தான். "என்னேடி
தட்டுமுன்பு தாழ்திறந்து விட்டாயே" என்றுரைத்தான்.
விட்டுப் பிரியாதார் மேவும்ஒரு பெண்நான்
பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை, தெருவில்
கருமரத்தாற் செய்த கதவு.



பாரதி


2.23. புதுநெறி காட்டிய புலவன்


தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே!
வாயார்ந் துங்கட்கு வணக்கம் சொன்னேன்!
வண்மைசேர் திருச்சி வானொலி நிலையம்
இந்நாள் ஐந்தாம் எழிற்கவி யரங்கிற்
கென்னைத் தலைமை ஏற்கும் வண்ணம்
செய்தமைக்கு நன்றி செலுத்து கின்றேன்.

உய்வகை காட்டும் உயர்தமி ழுக்குப்
புதுநெறி காட்டிய புலவன் பாரதி
நன்னாள் விழாவினை நானிலம் பரப்பும்
வானொலி நிலையம் வாழ்கென வாழ்த்தினேன்!
இக்கவி யரங்கு மிக்கு யர்ந்ததாம்.
எக்கா ரணத்தால்? என்பீ ராயின்,
ஊர்ஒன் றாகி உணர்வொன் றாகி
நேர்ஒன்று பட்டு நெடுநாள் பழகிய
இருவரிற் சுப்பிர மணிய னென்று
சொற்பா ரதியை சோம சுந்தர
நற்பா ரதிபுகழ்ந்து சொற்பெருக் காற்றுவார்;
அன்றியும் பாரதி அன்பர் பல்லோர்
இன்றவன் கவிதை எழிலினைக் கூறுவார்.

இங்குத் தலைமை ஏற்ற நானும்
திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல்
பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில
கூறுவேன்; முடிவுரை கூறுவேன் பின்பே.
கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு
நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநம்
தாயகம் சமண்மதம் தனைப்பெற்ற தன்றோ?
முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமா னுசனை ஈன்ற தன்றோ? 
இந்நாடு வடகலை ஏன்என எண்ணித்
தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ?
துருக்கர் கிருத்துவர் சூழ்இந் துக்களென்
றிருப்பவர் தமிழரே என்ப துணராது
சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு,
மெச்சவும் காட்டுவோன் வேண்டுமென் றெண்ணி
இராம லிங்கனை ஈன்ற தன்றோ?
மக்கள் தொகுதி எக்குறை யாலே
மிக்க துன்பம் மேவு கின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்!
செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க
விக்டர் யூகோ மேவினான் அன்றோ?
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்த மிழ்த்தேர்ப் பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்!இந் நாட்டினைக் 
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில்நீக்கப் பாடி வந்தநிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன். புதிய 
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன்! என்னென்று சொல்வேன்!
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வா றென்பதை எடுத்துரைக் கின்றேன்:
கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும்
பிறபொருள் குறித்துப் பேசேல் என்றும்
கடவுைளைக் குறிக்குமக் கவிதையும் பொருள்விளங்
கிடஎழு துவதும் ஏற்கா தென்றும்
பொய்ம்மதம் பிறிதெனப் புழுகுவீர் என்றும்
கொந்தும் தன்சாதிக் குண்டு சட்டிதான்
இந்த உலகமென் றெழுதுக என்றும்
பழமை அனைத்தையும் பற்றுக என்றும்
புதுமை அனைத்தையும் புதைப்பீர் என்றும்
கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல்
எள்ளத் தனைநிலை இலாத தென்றும்
எழிலுறு பெண்கள்பால் இன்புறும் போதும்
அழிவுபெண் ணால்என் றறைக என்றும்
கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும்
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும்
மாலை பார்த்தொரு மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும் 
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று
விரைந்து தன்பேரை மேலே எழுதி
இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
வருவதே புலமை வழக்கா றென்றும்
இன்றைய தேவையை எழுதேல் என்றும்
முன்னால் நிலையிலே முட்டுக என்றும்
வழக்கா றொழிந்ததை வைத்தெழு தித்தான்
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்
புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும்
நந்தமிழ்ப் புலவர் நவின்றனர் நாளும்!
அந்தப் படியே அவரும் ஒழுகினர்.
தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால்
தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
இருள்நிலை யடைந்திருந் திட்டதின் பத்தமிழ்!
செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல்
செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்.
விழுந்தார் விழித்தே எழுந்தார் எனஅவன்
மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்!
"வில்லினை எடடா - கையில்
வில்லினை எடடா - அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா"
என்று கூறி, இருக்கும் பகையைப்
பகைத் தெழும்படி பகர லானான்.
"பாருக்குள்ளே நல்லநாடு - இந்தப் பாரதநாடு"
என்பது போன்ற எழிலும் உணர்வும்
இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான்!
இந்நாடு மிகவும் தொன்மை யானது
என்பதைப் பாரதி இயம்புதல் கேட்பீர்:
"தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்"
மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்கு கின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்:
"முப்பது கோடி முகமுடையாள் உயிர் 
மொய்ம்புற வொன்றுடையாள் - அவள் 
செப்பும் மொழிபதி னெட்டுடையாள் - எனிற்
சிந்தனை யொன்றுடை யாள்"
இந்நாட் டின்தெற் கெல்லை இயம்புவான்:
"நீலத்திரை கடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம்செய் குமரி யெல்லை"
கற்பனைக் கிலக்கியம் காட்டி விட்டான்!
சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடு மாறு
மக்க ளுக்கவன் வழங்குதல் கேட்பீர்:
"இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதம்திரு இரண்டுமாறிப் பழிமிகுத் திழிவுற்றாலும்
விதம்தரு கோடிஇன்னல் விளைத்தெனை யழித்திட்டாலும்
சுதந்திர தேவிநின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே."
பாரதி பெரிய உள்ளம் பார்த்திடு வீர்கள்:
"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு"
"விடுதலை! விடுதலை! விடுதலை!"
"மனிதர் யாரும் ஒருநிகர் 
சமானமாக வாழ்வமே" என்றறைந்தார் அன்றோ?
பன்னீ ராயிரம் பாடிய கம்பனும்
இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை
எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை.
செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்:
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே" - என்றான். 
சினம்பொங்கும் ஆண்டவன் செவ்விழி தன்னை
முனம்எங்கும் இல்லாத மொழியா லுரைத்தான்:
"வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா - அங்கு
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது 
வேலவா" என்று கோலம் புதுக்கினான்.
பெண்உதட் டையும் கண்ணையும் அழகுறச்
சொல்லி யுள்ளான் சொல்லு கின்றேன்:
"அமுதூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும்"
இந்த நாளில் இந்நாட்டு மக்கட்கு
வேண்டும் பண்பு வேண்டும் செயல்களைக்
கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான்.
"முனைமுகத்து நில்லேல்" முதியவள் சொல்இது.
"முனையிலே முகத்துநில்" - பாரதி முழக்கிது!
"மீதூண் விரும்பேல்" மாதுரைத் தாள்இது.
"ஊண்மிக விரும்பு" - என உரைத்தான் பாரதி.
மேலும் கேளீர் - "கோல்கைக் கொண்டுவாழ்"
"குன்றென நிமிர்ந்துநில்" "நன்று கருது"
"நினைப்பது முடியும்", நெற்றி சுருக்கிடேல்"
எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப்
பாய்ச்சு கின்றான் பாரதிக் கவிஞன்!
அன்னோன் கவிதையின் அழகையும் தௌிவையும்
சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும்
இங்கு முழுதும் எடுத்துக் கூற
இயலா தென்னுரை இதனோடு நிற்கவே.

( அனைத் திந்திய வானொலித் திருச்சி நிலையத்தில் 5-வது கவியரங்கில் தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டது. 1946 )



2.24. தேன்கவிகள் தேவை


பொழுது விடியப் புதுவையி லோர்வீட்டில்
விழிமலர்ந்த பாரதியார் காலை வினைமுடித்து
மாடிக்குப் போவார்; கடிதங்கள் வந்திருக்கும்.
வாடிக்கை யாகவரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்.
சென்னைத் தினசரியின் சேதி சிலபார்ப்பார்.
முன்னால் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
சரியாய்ப் படித்ததுண்டா இல்லையா என்று
வரிமேல் விரல்வைத்து வாசிப்பார் ஏட்டை.

அதன்மேல் அடுக்கடுக்காய் ஆரவா ரப்பண்!
நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்பஒலி
கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளறுகின்ற
துண்டு துணுக்குரைகள்! வீரச் சுடர்க்கதைகள்!
என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
பன்னத் தகுவதுண்டோ நாங்கள்பெரும் பாக்கியத்தை?
வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம்
போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்.
தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார்
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி
அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார்.
மாடியின்மேல் ஓர்நாள் மணிஎட் டரைஇருக்கும்
கூடிக் கவிச்சுவையைக் கொள்ளையிடக் காத்திருந்தோம்.
பாரதியார் வந்த கடிதம் படித்திருந்தார்.
சீரதிகம் கொண்டதொரு சென்னைத் தினசரியின்
ஆசிரியர் போட்ட கடிதம் அதுவாகும்.
வாசித்தார் ஐயர், மலர்முகத்தில் வாட்டமுற்றார்.
"என்னை வசனமட்டும் நித்தம் எழுதென்று
சென்னைத் தினசரியின் ஆசிரியர் செப்புகின்றார்.
பாட்டெழுத வேண்டாமாம்; பார்த்தீரா அன்னவரின்
பாட்டின் பயனறியாப் பான்மையினை" என்றுரைத்தார்.

பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் `சோர்வெ'ன்னும்
காரிருளில் கால்வைத்தார்; ஊக்கத்தால் மீண்டுவிட்டார்.
"பாட்டின் பயனறிய மாட்டாரோ நம்தமிழர்?
பாட்டின் சுவையறியும் பாக்கியந்தான் என்றடைவார்?"
என்று மொழிந்தார், இரங்கினார், சிந்தித்தார்
"நன்று மிகநன்று, நான்சலிப்ப தில்லை"என்றார்.

நாட்கள் சிலசெல்ல நம்மருமை நாவலரின்
பாட்டின் சுவையறிவோர் பற்பலபே ராகிவிட்டார்.
ஆங்கிலம் வல்ல கசின்ஸ்என்னும் ஆங்கிலவர்
"நீங்கள் எழுதி நிரப்பும் சுவைக்கவியை
ஆங்கிலத்தில் ஆக்கி அகிலஅரங் கேற்றுகின்றேன்
பாங்காய் எனக்குநல்ல பாட்டெழுதித் தாருங்கள்"
என்று வரைந்த கடிதத்தை எங்களிடம்
அன்றளித்தார். எம்மை அபிப்பிரா யம்கேட்டார்.
"வேண்டும் எழுதத்தான் வேண்டும்"என்றோம். பாரதியார்,
"வேண்டும்அடி எப்போதும் விடுதலை" என்
றாரம்பஞ் செய்தார்; அரைநொடியில் பாடிவிட்டார்.
ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல்
ஆங்கிலத்தில் அந்தக் கவிதான் வௌியாகித்
தீங்கற்ற சென்னைத் தினசரியின் ஆசானின்
கண்ணைக் கவர்ந்து கருத்தில் தமிழ்விளைத்தே
எண்ணூறாண் டாய்க்கவிஞர் தோன்றவில்லை இங்கென்ற
வீ.வீ.எஸ்.ஐயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து
பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!
ஆங்கிலவர் பாரதியின் ஆர்ந்த கவித்தேனை
வாங்கியுண்ணக் கண்டபின்னர் வாயூறிச் சென்னைத்
தினசரியின் ஆசிரியர் "தேவையினித் தேவை,
இனியகவி நீங்கள் எழுதுங்கள்" என்றுரைத்தார்;
தேவையில்லை என்றுமுன் செப்பிட்ட அம்மனிதர்
தேவையுண்டு! தேவையுண்டு! தேன்கவிகள் என்றுரைத்தார்!
"தாயாம் தமிழில் தரும்கவியின் நற்பயனைச்
சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை
அயலார் சுவைகண் டறிவித்தார், பின்னர்
பயன்தெரிந்தார் நம்தமிழர்" என்றுரைத்தார் பாரதியார்.
நல்ல கவியினிமை நம்தமிழர் நாடுநாள்
வெல்ல வருந்திரு நாள்.

பாரதிதாசன் கவிதைகள் - பகுதி 3

by Swathi   on 28 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.