|
|||||
அமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில்தான் குழந்தைகள் படிக்கிறார்களா? உண்மையாகவா? -மு.சிவலிங்கம் |
|||||
![]()
அமெரிக்காவில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 5 கோடியே 60 இலட்சம் பேர். இவர்களுள் 5 கோடியே 7 இலட்சம் பேர், அதாவது ஏறத்தாழ 90% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். இங்கு அரசுப் பள்ளிகள் பொதுப் பள்ளிகள் (Public Schools) என்று அழைக்கப்படுகின்றன. 10% மாணவர்கள் மட்டுமே தனியார் பள்ளிகளில் பயில்கின்றனர். 2017-18 ஆண்டில் 33 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்களும், 3 இலட்சம் தனியார் பள்ளி மாணவர்களும் +2 முடிக்கின்றனர். பள்ளிப் படிப்பை முடிப்பவர்களில் ஏறத்தாழ 70% பேரே கல்லூரியில் சேருகின்றனர். அமெரிக்காவில் மொத்தம் 98,200 அரசுப் பள்ளிகளும், 34,600 தனியார் பள்ளிகளும் உள்ளன. அரசுப் பள்ளிகளோடு ஒப்பிடும்போது தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 32 இலட்சம் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் பணிபுரிகின்றனர். அரசுப் பள்ளிகளில் சராசரியாக ஓர் ஆசிரியருக்கு 16 மாணவர்களும், தனியார் பள்ளிகளில் ஓர் ஆசிரியருக்கு 12 மாணவர்களும் உள்ளனர். 2017-18 ஆண்டில் பள்ளிக் கல்விக்காக அரசுக்கு ஆகும் செலவு 623.5 பில்லியன் டாலர்கள் ஆகும். இன்றைய ரூபாய் மதிப்பில் இது ஏறத்தாழ 43 இலட்சத்து 64 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்குச் சமம். ஒரு கல்வியாண்டில் ஒரு மாணவருக்கு ஆகும் செலவு 12,300 டாலர்கள் (ஏறத்தாழ 8 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய்) ஆகும். இங்கு என் பேரன் முதல் வகுப்புப் படித்த அரசு தொடக்கப் பள்ளியில் நான் நேரில் பார்த்தவையும், தெரிந்து கொண்ட தகவல்களும்: பெரிய பெரிய வகுப்பறைகள். ஒவ்வொரு மாணவர்க்கும் தனி மேஜை, நாற்காலி. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள். போதுமான எண்ணிக்கையில் ஆண்/பெண் கழிப்பறைகள். மிகப்பெரிய நூலகம். நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள், கணினிகள். மிகப்பெரிய விளையாட்டுத் திடல். அழகான கலையரங்கம். இங்குள்ள அரசுப் பள்ளிகளில் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் மட்டுமே படிக்க முடியும். கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் அட்மிஷன் உண்டு. தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் இடம் கிடைப்பது கடினம். அரசுப் பள்ளியில் படிப்பவர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் இலவசக் கல்வி. புத்தகம், நோட்டு எதுவும் வாங்க வேண்டாம். யூனிஃபார்ம் கிடையாது. ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு உண்டு. மற்றவர்கள் மாதத் தொடக்கத்தில் ஒரு தொகையைச் செலுத்திவிட்டுத் தேவையான நாட்களில் மதிய உணவு பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு மாணவரும் டஜன் கணக்கில் பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றை வாங்கி ஆண்டுத் தொடக்கத்தில் பள்ளியில் கொடுத்துவிட வேண்டும். (ஏழை மாணவர்கள் அவற்றையும் வாங்கித்தர வேண்டியதில்லை). அவற்றை மொத்தமாகப் போட்டு அனைத்து மாணவர்களும் பகிர்ந்து கொள்வர். மாணவர்கள் பள்ளிக்குப் புத்தகம், நோட்டுகள் எதையும் சுமந்து செல்ல வேண்டியதில்லை. தினமும் ஒன்றிரண்டு ஹோம்-ஒர்க் தாள்களை ஒரு கோப்புறையில் வைத்துத் தருவர். அவற்றைச் செய்து முடித்து அடுத்த நாள் திருப்பித் தரவேண்டும். நொறுக்குத் தீனி, மதிய உணவு எடுத்துச் செல்லலாம். பள்ளியில் தூய்மையான குடிநீர் உண்டு. சனி, ஞாயிறு, புதன் அரைநாள் பள்ளி விடுமுறை. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கின்ற வீட்டுக் குழந்தைகளை மாலை 6 மணிவரை பார்த்துக் கொள்ளும் வசதி உண்டு. அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். |
|||||
![]() |
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 17 Aug 2018 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|