திருவள்ளுவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டாட வேண்டுமென வலியுறுத்தி ராஜ்யசபாவில் எம்.பி தருன் விஜய் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக பேச ராஜ்யசபா தலைவரிடம், அனுமதி கேட்டிருந்த தருண் விஜய்க்கு, நேற்று பேச அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, இந்தியா என்பது, துளசிதாசரும், வால்மீகியும் மட்டும் தான், என்ற நிலை தற்போது உள்ளது. உண்மை அதுவல்ல. திருவள்ளுவர், கண்ணகி போன்றவர்களையும், உள்ளடக்கியது தான் இந்தியா.
நான் இமயமலைச் சேர்ந்தவன் என்றாலும், தமிழ் அன்னைக்கு தான், என் முதல் வணக்கம். 'அகர முதல எழுத்தெல்லாம், ஆதிபகவன் முதற்றே உலகு' என்ற, கற்பனைக்கு எட்டாத தத்துவத்தைச் சொன்ன, மாபெரும் தத்துவ ஞானியான, திருவள்ளுவரைப் பற்றி, வட மாநில மக்கள், அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டும்.
அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, வட மாநிலங்களில் பாடப் புத்தகங்களிலும், இடம்பெறச் செய்ய வேண்டும்.
இந்தியாவில் மொழிகளான கன்னடம், தெலுங்கு, வங்கம் என, எத்தனையோ மொழிகள் இருந்தாலும், அத்தனைக்கும், தலையாய மொழி, தமிழ் தான்.
உலகம் முழுவதும் உள்ள, மிகவும் பழமையான மொழிகளை கண்டறிந்து, 'மெமரி ரிஜிஸ்டர்' என்ற பட்டியலை, யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கியது. அதில் இடம்பெற்ற, முதல் மற்றும் ஒரே இந்திய மொழி, தமிழ் தான். அத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மொழியில், திருக்குறளை எழுதி, உலகத்திற்கு தந்த மகான், திருவள்ளுவரது பிறந்த நாளை, தேசிய அளவில் கொண்டாடுவதற்கு, அனைவரும் ஆதரவு தர வேண்டும் என இந்தியிலும், தடுமாற்ற தமிழிலும் உணர்ச்சி பொங்க, தருண்விஜய் பேசி முடித்ததும், சபையில் அவருக்கு ஆதரவாக பலத்த கரகோஷங்கள் உண்டாகின.
அந்த நேரத்தில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி சபையில் எழுந்து "தருண் விஜயின் கோரிக்கைக்கு, இத்தனை பெரிய வரவேற்பு உள்ளது. எனவே, அவரது கோரிக்கையை ஏற்று, திருவள்ளுவரின் பிறந்த நாளை, மத்திய அரசே கொண்டாடும். அடுத்த ஆண்டு முதல், தேசிய அளவில், கொண்டாடுவதற்கு உண்டான, அனைத்து ஏற்பாடுகளும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்படும், மேலும் திருக்குறளை இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
|