|
||||||||
இரண்டாம் திருமுறை-117 |
||||||||
2.117.திருஇரும்பைமாகாளம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாகாளேசுவரர்.
தேவியார் - குயிலம்மை.
2736 மண்டுகங்கை சடையிற்
கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரமூன்
றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய்
விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில்
சுலாய்நின்ற மாகாளமே.
2.117. 1
கங்கையைச் சடையில் கரந்து, பிறைமதியைச் சூடி, மான் ஏந்திய கையால் கணைதொடுத்து முப்புரங்களை எரித்த குழகனது இடம், எண்திசையும் புகழ்பெற்று விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் வண்டுகள் இசைபாடி முரலும் பொழில் சூழ்ந்து விளங்குவதுமாகிய திருமாகாளமாகும்.
2737 வேதவித்தாய் வெள்ளைநீறு
பூசி வினையாயின
கோதுவித்தா நீறெழக்
கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க்
கும்மிடம் இரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர்
தொழநின்ற மாகாளமே.
2.117. 2
வேதவித்தாய், வெண்ணீறுபூசி, வினைகள் யாவற்றையும் அழித்து, கொடிய திரிபுரங்களை நீறெழச் செய்து, குற்றங்களுக்கு விதையானவற்றைத் தீர்த்து, அருள்புரியும் சிவபிரானது இடம், திருஇரும்பை நகரில் உள்ளதும், மாதவத் தோரும் மறையோரும் தொழ நின்றதுமான திருமாகாளமாகும்.
2738 வெந்தநீறும் எலும்பும்
அணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மா னிடம்எழில்
கொள்சோலை யிரும்பைதனுள்
கந்தமாய பலவின்
கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண்
டுகள்கின்ற மாகாளமே.
2.117. 3
திருவெண்ணீற்றையும் எலும்பையும் அணிந்தவனும், விடைஊர்தியனும், எந்தையும், தலைவனுமாகிய இறைவனது இடம், அழகிய சோலைகள் சூழ்ந்ததும் மணம் கமழும் பலாக்கனிகளை மந்திகள் ஏறிப் பறித்து உண்டு திரியும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருஇரும்பை நகரில் உள்ள திருமாகாளம் ஆகும்.
2739 நஞ்சுகண்டத் தடக்கி
நடுங்கும் மலையான்மகள்
அஞ்சவேழம் உரித்த
பெருமான் அமரும்மிடம்
எஞ்சலில்லாப் புகழ்போய்
விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந்
தழகாய மாகாளமே.
2.117. 4
நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும், மலைமகள் அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம், குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும்.
2740 பூசுமாசில் பொடியான்
விடையான் பொருப்பான்மகள்
கூசவானை யுரித்தபெரு
மான்குறை வெண்மதி
ஈசனெங்கள் இறைவன்
னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கண் மலர்கொண்
டணிகின்ற மாகாளமே.
2.117. 5
நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும், மலைமகள் அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம், குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும்.
2741 குறைவதாய குளிர்திங்கள்
சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன்
பகவன் பரந்தசடை
இறைவனெங்கள் பெருமான்
இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித்
தொழுகின்ற மாகாளமே.
2.117. 6
கலைகள் குறைந்த பிறைமதியைச் சூடிக் கூத்தாடிய வரும்,வினைகளை அழிக்கும் பரமரும், தூய்தான ஆறுகுணங்களை உடையவரும், பரவலான சடைகளை உடைய இறைவரும், எங்கள் பெருமானுமாகிய இறைவரது இடம் திருஇரும்பை நகரில் வேத வித்துக்கள் வழிபடும் திருமாகாளமாகும்.
2742 பொங்குசெங்கண் அரவும்
மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமானென
நின்றவர் தாழ்விடம்
எங்குமிச்சை யமர்ந்தான்
இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்
தழகாய மாகாளமே.
2.117. 7
சடையில் பாம்பையும் பிறையும் பகை நீக்கித் தங்க வைத்த பெருமானும், எவ்விடத்தும் விருப்போடு எழுந்தருளி விளங்குபவனுமாகிய இறைவனது இடம் திருஇரும்பையூரில் வானளாவிய பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருமாகாளம் ஆகும்.
2743 நட்டத்தோடு நரியாடு
கானத்தெரி யாடுவான்
அட்டமூர்த்தி யழல்போ
லுருவன் அழகாகவே
இட்டமாக இருக்கும்
இடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார்
பிணிதீர்க்கும் மாகாளமே.
2.117. 8
நரிகள் விளையாடும் இடுகாட்டில் எரியேந்தி நடனம் புரிபவரும், அட்டமூர்த்தி வடிவினரும், அழல் உருவினரும் ஆகிய இறைவர் விருப்போடு எழுந்தருளிய இடம் திருஇரும்பை நகரில் உள்ளதும் வலம் வந்து தொழுவார் பிணிகளைத் தீர்ப்பதுமாகிய திருமாகாளமாகும்.
2744 அட்டகாலன் றனைவவ்
வினான்அவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் மிருபத்திரண்
டும்இற வூன்றினான்
இட்டமாக விருப்பா
னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந்
தெழிலாரும் மாகாளமே.
2.117. 9
மார்க்கண்டேயரோடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவரும், இராவணன் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவரும், ஆகிய சிவபிரான் இட்டமாக இருக்குமிடம் திருஇரும்பை நகரில் விளங்குவதும் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.
2745 அரவமார்த்தன் றனலங்கை
யேந்தி யடியும்முடி
பிரமன்மாலும் அறியாமை
நின்ற பெரியோனிடம்
குரவமாரும் பொழிற்குயில்கள்
சேரும் இரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர்
தொழுகின்ற மாகாளமே.
2.117. 10
பாம்பைத் தம் இடையில் கட்டிக்கொண்டு, அனலை அங்கையில் ஏந்தி, பிரமன், மால் ஆகியோர் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்ற பெரியோன் இடம், குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த திரு இரும்பை நகரில் உள்ள வானோரும் மறையோரும் தொழும் திருமாகாளமாகும்.
2746 எந்தையெம்மான் இடம்எழில்
கொள்சோலை யிரும்பைதனுள்
மந்தமாய பொழில்சூழ்ந்
தழகாரு மாகாளத்தில்
அந்தமில்லா அனலாடு
வானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாட
வல்லார்பழி போகுமே.
2.117. 11
எந்தையும் எங்கள் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவதும் திருஇரும்பையில் விளங்கும் தென்றல் வந்துலவும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாகாளத்தில் முடிவற்ற நிலையில் அனலாடும் இறைவன் மீது ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதுபவர்களின் பழிகள் போகும்.
திருச்சிற்றம்பலம்
2.117.திருஇரும்பைமாகாளம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|