தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்தக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நேற்று நடைபெற்றது.
கேர் அண்டு வெல்பேர் (Care and Welfare) அமைப்பு சார்பில், நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை இம்மண்ணில் மீண்டும் நடத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னை மெரினா கடற் கரை காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிடப்பட்டு. சமூக வலைத்தளங்கள் மூலம் இதற்காண அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்று தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஐடி நிறுவன பணியாளர்கள் என சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பேரணியில் பங்கேற்க மெரினாவில் திரண்டனர். பெண்கள் புடவை, தாவணியிலும் ஆண்கள் வேட்டி, சட்டை என தமிழரின் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்.
காலை 7.30 மணிக்கு கலங்கரை விளக்கம் அருகில் இருந்து தொடங்கிய பேரணி, உழைப்பாளர் சிலை அருகே காலை 9 மணிக்கு முடிவடைந்தது. பேரணியில் தாரை தப்பட்டையுடன் இளைஞர்கள் உற்சாகமாக அணிவகுத்து சென்றனர். அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை கட்டாயம் நடத்த வேண்டும் போன்ற ஜல்லிக்கட்டை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
|