LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1163 - கற்பியல்

Next Kural >

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) காமமும் நாணும் - காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்; நோனா என் உடம்பின் அகத்து - தம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே; உயிர் காவாத் தூங்கும் - உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன. (பொறாமை மெலிவானாயது. தூங்கும் என்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது. 'தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே விடும்' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன, பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று. (காத்தண்டாக- காவடித்தண்டாக: தூங்குதல்- தொங்குதல்) இது தலைமகள் மனமகிழ்ச்சி யிதுவென்று கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) காமமும் நாணும் - என் காமநோயும் அதை யுண்டாக்கியவர்க்கு உரைப்பதைத் தடுக்கும் நாணமும்; நோனா என் உடம்பின் அகத்து - அவற்றைத் தாங்காது வருந்தும் என் உடம்பினிடத்து ; உயிர் காவாத் தூங்கும் - என் உயிரைக் காவட்டுத் தண்டாகக் கொண்டு அதன் இரு கடையிலுந் தொங்குகின்றன. காமமும் நாணமும் ஒத்த இருதலைச் சுமைகளாக வருத்துவது தோன்றக் 'காவாத்தூங்கும்' என்றும் உயிரிருப்பதனாலேயே காமமும் நாணமுந் தோன்றுவதால் ' உயிர் காவா' என்றும் , காவாட்டுச் சுமையைத் தாங்கும் வலிமை நோயால் மெலிந்துள்ள உடம்பிற் கின்மையால் 'நோனாவுடம்பினகத்து' என்றும் , கூறினாள் . நோயும் நீங்காது நோய்நீக்கும் வழித்தடையும் நீக்காது இருதலைக் கொள்ளி யெறும்புபோல் இடர்ப்படுகின்றேன் என்பதாம். உடம்பைக் காவுவோனாக உருவகியாமையால் இது ஒரு மருங்குருவகம்.
கலைஞர் உரை:
பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது.
சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
காமத் துன்பத்தைப் பொறுக்க முடியாமல் தவிக்கிற என் உடம்பிலுள்ள உயிரைக் காவடித் தண்டாக்கி, ஒரு புறத்தில் காம வேதனையும் இன்னொரு புறத்தில் வெட்கமும் சமனாகத் தொங்கி இழுக்கின்றன. (அதனால் என் உயிர் வளைந்து ஒடிந்துவிடும்போல் இருக்கிறது.)
Translation
My soul, like porter's pole, within my wearied frame, Sustains a two-fold burthen poised, of love and shame.
Explanation
(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.
Transliteration
Kaamamum Naanum Uyirkaavaath Thoongumen Nonaa Utampin Akaththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >