நடைத்திரைப் பரவை நாற்கடல் அணைத்து வரையறுத்து அமைந்த வகைநான் காக விதிவரத் திருத்திய மேதினிப் பொறையை குருமணி விரித்தலின் தேனொடு கிடந்து மாயாது தொடுத்த மணமலர் சுமத்தலின் (5)
வரைஎன நிறுத்திய திருவுறை பெருந்தோள் தரித்தும் அணைத்தும் தான்எனக் கண்டும் செய்ததும் அன்றி திருமணம் பணைத்துக் காக்கவும் குரிசில் கருத்துறும் போலும் விடையா வடந்தைசெய் வெள்ளிஅம் சிலம்பினும் (10)
தென்கால் விடுக்கும் செம்பின் பொருப்பினும் கொண்டல்வந் துலவும் நீலக் குவட்டினும் கோடைசென் நுடற்றும் கொல்லிக் கிரியினும் பிறந்தவர் பிறவாப் பெரும்பதி யகத்தும் முடிந்தவர் முடியா மூதூர் இடத்தும் (15)
கண்டவர் காணாக் காட்சிசெய் நகரினும் வேகத் தலையினும் விதிஆ கமத்தினும் கல்வியர் உளத்தும் கலர்நெஞ் சகத்தும் தெய்வம் விடுத்துப் பொய்கொள் சிந்தையினும் கொலையினர் கண்ணும் குன்றா தியைந்து (20)
வெளியுறத் தோன்றி இருளுற மறைந்த விஞ்சைவந் தருளிய நஞ்சணி மிடற்றோன் சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும் சின்னக் குறளும் செழுங்கார் போலப் பெருமறை முழங்கும் திருநகர்க் கூடல் (25)
ஒப்புற் றடைமலர் சுமந்த மைப்புறக் கூந்தல் கொடிவணங்கு இடையே! (27)
|