நிலையினின் சலியா நிலைமை யானும் பலஉலகு எடுத்த ஒருதிறத் தானும் நிறையும் பொறையும் பெறும்நிலை யானும் தேவர் மூவரும் காவ லானும் தமனியப் பராரைச் சயிலம் ஆகியும் (5)
அளக்கஎன்று அமையாப் பரப்பின தானும் அமுதமும் திருவும் உதவுத லானும் பலதுறை முகத்தொடு பயிலுத லானும் முள்ளுடைக் கோட்டு முனைஎறி சுறவம் அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும் (10)
நிறைவுளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை தருதலின் வானத் தருஐந்து ஆகியும் மறைவெளிப் படுத்தலின் கலைமகள் இருத்தலின் அகமலர் வாழ்தலின் பிரமன் ஆகியும் உயிர்பரிந்து அளித்தலின் புலமிசை போக்கலின் (15)
படிமுழுது அளந்த நெடியோன் ஆகியும் இறுதியில் சலியாது இருத்த லானும் மறுமைதந்து உதவும் இருமை யானும் பெண்இடம் கலந்த புண்ணியன் ஆகியும் அருள்வழி காட்டலின் இருவிழி ஆகியும் (20)
கொள்ளுநர் கொள்ளக் குறையாது ஆதலின் நிறைவுளம் நீங்காது உறைஅருள் ஆகியும் இவைமுதல் ஆகி இருவினை கெடுக்கும் புண்ணியக் கல்வி உள்நிகழ் மாக்கள் பரிபுரக் கம்பலை இருசெவி உண்ணும் (25)
குடக்கோச் சேரன் கிடைத்துஇது காண்கஎன மதிமலி புரிசைத் திருமுகம் கூறி அன்புஉருத் தரித்த இன்புஇசைப் பாணன் பெருநிதி கொடுக்கஎன உறவிடுத் தருளிய மாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன் (30)
இருசரண் பெருகுநர் போல பெருமதி நீடுவர்; சிறுமதி நுதலே! (32)
|