LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 244 - துறவறவியல்

Next Kural >

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.)
மணக்குடவர் உரை:
நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார். இது தீமை வாராதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - மற்ற உயிர்களையெல்லாம் பேணி அவற்றினிடத்து அருள் பூண்பவனுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன்னுயிர் அஞ்சுவதற் கேதுவான தீவினைகள் இரா என்று கூறுவர் அறிந்தோர். "தன்னுயிர் போல் மன்னுயிரையும் எண்ண வேண்டும்" . என்னும் பழமொழியில், மன் என்னுஞ் சொல் மற்ற என்று பொருள் படுதலால், அதை யொத்த இவ்விடத்தும் அப்பொருள் உரைக்கப்பட்டது. அஞ்சும் வினை தன்னதாகவும் பிறரதாகவுமிருக்கலாம். தன் வினையாயின் மறுமைத் துன்பமும் பிறர் வினையாயின் இம்மைத் துன்பமும் நோக்கிய அச்சமாகும். உயர்ந்த அருளறம் பூண்டோன் தீவினை செய்யான் என்பதும், அவனால் அருள் செய்யப் பெற்றவனும் நன்மைக்குத் தீமை செய்யான் என்பதும், கருத்து.
கலைஞர் உரை:
எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைக் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(சீவகாருணியம் உள்ளவன் தன்னுயிரைப் பற்றிப் பயப்படமாட்டான்.) உலகத்தில் உள்ள மற்ற உயிர்களை யெல்லாம் தன்னுயிர்போலப் பாதுகாக்கும் கருணை புரிகிறவனுக்குத் தன்னுயிரைப்பற்றிப் பயப்படவேண்டிய வேலையே இருக்காது.
Translation
Who for undying souls of men provides with gracious zeal, In his own soul the dreaded guilt of sin shall never feel.
Explanation
(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures).
Transliteration
Mannuyir Ompi Arulaalvaarkku Illenpa Thannuyir Anjum Vinai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >