|
||||||||
மூன்றாம் திருமுறை-108 |
||||||||
3.108.திருஆலவாய்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
3956 வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லியமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
3.108.1
உமாதேவியைத் தன் உடம்பில் ஒரு பாதியாக வைத்துள்ள பரமனே! தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! வேதத்தையும், வேள்வியையும், பழித்துத் திரியும் பயனற்றவர்களாகிய சமணர்களையும், புத்தர்களையும் வாதில் வென்றழிக்க உம்மை வேண்டுகின்றேன். உமது திருவுள்ளம் யாது? உலகனைத்தும் உமது புகழே மிக வேண்டும். திருவருள்புரிவீராக!
3957 வைதி கத்தின் வழியொழு காதவக்
கைத வம்முடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
3.108.2
கருநீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானே! வேதநெறிகளைப் பின்பற்றி ஒழுகாத வஞ்சனையையுடைய கரிய சமணர்களையும், புத்தர்களையும் கூட்டி வாது செய்து வெல்ல விரும்புகின்றேன். உமது திருவுள்ளம் யாது? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் முதல்வரே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள்புரிவீராக!
3958 மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையின் மாமழு வாளனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
3.108.3
மான்கன்றையும், மழுவையும் கைகளில் ஏந்தியுள்ள சிவபெருமானே! வேத நெறிப்படி ஒழுகாத கொடிய பாவிகளாகிய, கையினால் முடி பறிக்கப்பட்ட தலையோடு பாயை உடுத்தித் திரியும் சமணர்கள் தோல்வியுறும்படி அவர்களோடு வாது செய்ய உமது திருவுளம் யாது? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் முதல்வரே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள்புரிவீராக!
3959 அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாதுசெயத்திரு வுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
3.108.4
ஒளிபொருந்திய பிறைச்சந்திரனை அணிந்த முதல்வனே! வரையறுக்கப்பட்ட வேதத்தின் ஆறு அங்கம் வகுக்கும் கொள்கைகளை வெறுக்கும் சமணர்களாகிய கீழோர்களைத் தடுத்து அவர்களோடு அடியேன் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிகவேண்டும். திருவருள்புரிவீராக!
3960 அந்த ணாளர் புரியு மருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
3.108.5
நெருப்பில் வெந்த திருவெண்ணீற்றினை அணியும் வேறுபட்ட இயல்புகளையுடைய சிவபெருமானே! அந்தணர்கள் செய்யும் அரிய வேதக்கிரியைகளை நினைத்துப் பார்க்காத சமணர்களின் வலிமைகள் சிதறும்படி அடியேன் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது? அழகிய திருஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதி மூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள் புரிவீராக!
3961 வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை யுரித்தவெங் கள்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
3.108.6
காட்டில் வாழும் யானையின் தோலை உரித்துப் போர்த்த என் உள்ளங் கவர்ந்த கள்வரே! அந்தணர்கள் விரும்பிச் செய்கின்ற வேள்விச் செயல்களை இகழ்ந்து பேசும் வன்னெஞ்சினராகிய அமண்குண்டர்களை அடியேன் வாது செய்து விரட்ட உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதி மூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள் புரிவீராக!
3962 அழல தோம்பு மருமறை யோர்திறம்
விழல தென்னு மருகர் திறத்திறம்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழலி லங்கு திருவுருச் சைவனே
ஞால நின்புக ழேமிக வேண்டந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
3.108.7
நெருப்புப் போன்று விளங்கும் சிவந்த திருமேனியுடைய சிவபெருமானே! அழலோம்பி அருமறையாளர்கள் செய்யும் காரியங்களைப் பயனற்றவை என்று கூறும் சமணர்களின் பலவகைத் திறமைகளும் விலக வாது செய்ய எண்ணுகின்றேன். உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம்ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டுகின்றேன். திருவருள்புரிவீராக!
3963 நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவு நில்லா வமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாள ரக்கற்கு மருளினாய்
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
3.108.8
சிறந்த வாள்வீரனான இராவணனுக்கு மிக்க அருள் புரிந்தவரே! திருநீறு பூசியவர் மேல் பட்டு வீசும் காற்றடிக்கும் இடத்திலும் நில்லாத வன்கண்மை பொருந்திய உள்ளமுடைய சமணர்களின் பிழையைத் தௌவித்து வாது செய்ய, உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள்புரிவீராக!
3964 நீல மேனி யமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலு நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
3.108.9
திருமாலும், பிரமனும் காணுதற்கரியவராய், அழகிய திருமேனியோடு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற சிவபெருமானே! கரிய உடலையுடைய சமணர்களோடு உமது உயர்வினை வெளிப்படுத்தும் வண்ணம் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! உலகனைத்தும்உம் புகழே மிக வேண்டும். திருவருள்புரிவீராக!
3965 அன்று முப்புரஞ் செற்ற வழகநின்
துன்று பொற்கழல் பேணா வருகரைத்
தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
3.108.10
சினந்து பேசும் இயல்புடைய சமண, புத்தர்களால் காணஇயலாத தலைவரே! முன்னொரு காலத்தில் முப்புரங்களை எரித்த அழகரே! உம்முடைய பொன்போன்ற திருவடிகளைப் போற்றாத சமணர்கள் தோற்றோட வாதம் செய்ய, உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும். திருவருள் புரிவீராக!
3966 கூட லாலவாய்க் கோனை விடைகொண்டு
வாடன் மேனி யமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தவிப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே 3.108.11
நான்கு மாடங்கள் கூடும் திரு ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரை வணங்கி, உண்ணாநோன்புகளால் வாடிய உடலைஉடைய சமணர்களோடு வாது செய்து அவர்களைத் தோல்வியுறும் படி செய்ய இறைவரது இசைவும், அருளும் பெற்ற, மாடங்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் பாடிய இப்பதிக பாடல்களை ஓத வல்லவர்கள் பாக்கியவான்களாவர்.
திருச்சிற்றம்பலம்
3.108.திருஆலவாய் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|