|
||||||||
மூன்றாம் திருமுறை-111 |
||||||||
3.111.திருவீழிமிழலை
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
3990 வேலினேர்தரு கண்ணினாளுமை
பங்கனங்கணன் மிழலைமாநகர்
ஆலநீழலின் மேவினானடிக்
கன்பர்துன் பிலரே
3.111.1
வேல் போன்று கூர்மையும், ஒளியுமுடைய கண்களை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். அழகிய கண்களையுடைய சிவபெருமான். அவர் திருவீழிமிழலை என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்றார். ஆலமரநிழல் கீழிருந்து அறம்உரைத்தவர். அப்பெருமானின் திருவடிகளை அன்புடன் வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை.
3991 விளங்குநான்மறை வல்லவேதியர்
மல்குசீர்வளர் மிழலையானடி
உளங்கொள்வார்தமை யுளங்கொள்வார்வினை
யொல்லை யாசறுமே
3.111.2
நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல அந்தணர்கள் வசிக்கின்ற, புகழ்மிக்க திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உள்ளத்தால் தியானிப்பவர்கள் சிவனடியார்கள், அவ்வடியார்களை வழிபடும் அன்பர்களின் வினையான குற்றம் விரைவில் நீங்கும்.
3992 விசையினோடெழு பசையுநஞ்சினை
யசைவுசெய்தவன் மிழலைமாநகர்
இசையுமீசனை நசையின்மேவினான்
மிசைசெயா வினையே
3.111.3
வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய விடத்தை உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். நஞ்சுண்டும் சாவாது புகழுடன் விளங்கும் அப்பெருமானை நாடி வணங்கினால் வினையானது துன்பம் செய்யாது.
3993 வென்றிசேர்கொடி மூடுமாமதிண்
மிழலைமாநகர் மேவிநாடொறும்
நின்றவாதிதன் னடிநினைப்பவர்
துன்பமொன் றிலரே
3.111.4
சிவபெருமானின் வெற்றிக்கொடிகள் வானத்தை மூடும்படி விளங்கும், உயர்ந்த மதில்களையுடையது திருவீழி மிழிலை என்னும் மாநகர். அப்பெருமாநகரினைவிரும்பி ஆங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை நாள் தோறும் நினைத்து வழிபடுபவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை.
3994 போதகந்தனை யுரிசெய்தோன்புய
னேர்வரும்பொழின் மிழலைமாநகர்
ஆதரஞ்செய்த வடிகள்பாதம்
அலாலொர்பற் றிலமே
3.111.5
செருக்குடன் முனிவர்களால் கொடு வேள்வியினின்றும் அனுப்பப்பட்ட மதங்கொண்ட யானையின் தோலை உரித்த சிவபெருமான், மேகம்படியும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிகளைத்தவிர வேறு பற்று எதுவும் எமக்கு இல்லை.
3995 தக்கன்வேள்வியைச் சாடினார்மணி
தொக்கமாளிகை மிழலைமேவிய
நக்கனாரடி தொழுவர் மேல்வினை
நாடொறுங் கெடுமே
3.111.6
சிவபெருமான், தக்கன் வேள்வியைத் தகர்த்தவர். இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திகம்பரரான சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் தொழுபவர்கட்கு மேல்வினை உண்டாகாது.
3996 . போரணாவுமுப் புரமெரித்தவன்
பொழில்கள்சூழ்தரு மிழலைமாநகர்ச்
சேருமீசனைச் சிந்தைசெய்பவர்
தீவினை கெடுமே
3.111.7
போர்க்குணத்தை விரும்பி அதனை மேற் கொண்ட அசுரர்களின் முப்புரங்களை எரித்த சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானைச் சிந்தித்து வழிபடும் அடியவர்களின் தீவினை அழிந்துவிடும்.
3997 இரக்கமிஃறொழி லரக்கனாருட
னெருக்கினான்மிகு மிழலையானடி
சிரக்கொள்பூவென வொருக்கினார்புகழ்
பரக்குநீள் புவியே
3.111.8
இரக்கம் அற்ற தொழில்புரியும் அரக்கனான இராவணனின் உடல் நெரியும்படி கயிலைமலையின் கீழ் அடர்த்த சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிக் கமலங்களை சிரசின்மேல் வைத்த மலர்போலக் கொண்டு, சிந்தையை ஒருமுகப்படுத்தி வழிபடுபவர்கள், உலகில் புகழுடன் விளங்குவர்.
3998 துன்றுபூமகன் பன்றியானவ
னொன்றுமோர்கிலா மிழலையானடி
சென்றுபூம்புன னின்றுதூவினார்
நன்றுசேர் பவரே
3.111.9
இதழ் நெருங்கிய தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமனும், பன்றி உருவெடுத்த திருமாலும் உணர்தற்கரியவனான சிவ பெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமானின் திருவடிகளை, பூவும், நீரும் கொண்டு பூசிப்பவர்கள், முத்தி பெறுவர்.
3999 புத்தர்கைச்சமண் பித்தர்பொய்க்குவை
வைத்தவித்தகன் மிழலைமாநகர்
சித்தம்வைத்தவ ரித்தலத்தினுண்
மெய்த்தவத் தவரே
3.111.10
புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய்க் குவியல்களாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த ஞானசொரூபரான சிவபெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் மீது சித்தம் வைத்து வழிபடுபவர்கள் இப்பூவுலகில் மெய்யான தவத்தைப் புரிந்தவராவர்.
4000 சந்தமார்பொழின் மிழலையீசனைச்
சண்பைஞானசம் பந்தன்வாய்நவில்
பந்தமார்தமிழ் பத்தும்வல்லவர்
பத்தரா குவரே
3.111.11
சந்தன மணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி, சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய திருவருளால் பிணிக்கப்படும் இத்தமிழ்ப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பத்தர்கள் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
3.111.திருவீழிமிழலை |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|