|
||||||||
மூன்றாம் திருமுறை-112 |
||||||||
3.112.திருப்பல்லவனீச்சரம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
4001 பரசுபாணியர் பாடல்வீணையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தரசுபேணி நின்றார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.1
சிவபெருமான் மழுப்படையைக் கையில் ஏந்தியவர். வீணையில் பாட்டிசைப்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் ஆட்சி புரிந்து அருள்புரிபவர். இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்? ஒருவரும் அறியார்.
4002 பட்டநெற்றியர் நட்டமாடுவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திட்டமா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.2
தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள அணிகலன் அணிந்த நெற்றியர். திருநடனம் செய்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்?
4003 பவளமேனியர் திகழுநீற்றினர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தழகரா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.3
சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த மேனியுடையவர், ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அழகர். இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்?
4004 பண்ணில்யாழினர் பயிலுமொந்தையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தண்ணலா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.4
இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர். மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர். இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்?
4005 பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெல்லியாட் டுகந்தார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.5
சிவபெருமான் பற்களே இல்லாத மண்டையோட்டில் பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். இரவில் நடனம் ஆடுதலை விரும்புபவர். இவர் தன்மை யார் அறிவார்?
4006 பச்சைமேனியர் பிச்சைகொள்பவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திச்சையா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.6
சிவபெருமான் பச்சைநிறம் கொண்ட திருமேனி உடையவர். பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். இவர் தன்மை யார் அறிவார்?
4007 பைங்கணேற்றினர் திங்கள்சூடுவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெங்குமா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.7
இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல் ஏறுபவர். பிறைச்சந்திரனை சூடியுள்ளவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும், எங்கும் வியாபித்துள்ளவர். இவர் தன்மை யார் அறிவார்?
4008 பாதங்கைதொழ வேதமோதுவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தாதியா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.8
தம் திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவபெருமான் அருளிச்செய்தார். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியாய் இருப்பவர். இவரது தன்மையை யார் அறிவார்?
4009 படிகொண்மேனியர் கடிகொள்கொன்றையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தடிகளா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.9
இறைவன் உலகம் முழுவதையும் தம் திரு மேனியாகக் கொண்டவர். நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவன் தன்மை யார் அறிவார்?
4010 பறைகொள்பாணியர் பிறைகொள்சென்னியர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திறைவரா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.10
இறைவன் பறை என்னும் இசைக்கருவியை உடையவன். பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவர் தன்மை யார் அறிவார்?
4011 வானமாள்வதற் கூனமொனறிலை
மாதர்பல்லவ னீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ்
சொல்லவல்லவர் நல்லவரே
3.112.11
அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து இறைவனைப் போற்றி, ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர். அவர்கள் மறுமையில் வானுலகை ஆள்வதற்குத் தடையொன்றுமில்லை.
திருச்சிற்றம்பலம்
3.112.திருப்பல்லவனீச்சரம் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|