|
||||||||
மூன்றாம் திருமுறை-116 |
||||||||
3.116.திருவீழிமிழலை
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
4046 துன்றுகொன்றைநஞ் சடையதே
தூய கண்டநஞ் சடையதே
கன்றின் மானிடக் கையதே
கல்லின் மானிடக் கையதே
என்று மேறுவ திடவமே
யென்னி டைப்பலி யிடவமே
நின்ற தும்மிழலை யுள்ளுமே
நீரெனைச் சிறிது முள்ளுமே
3.116.1
சிவபெருமான் நெருங்கிய கொன்றைமலரைச் சூடியுள்ளது சடையில். அவருடைய தூயகழுத்து நஞ்சை அடக்கியுள்ளது. மான்கன்றை ஏந்தி உள்ளது இடக்கை. இமயமலையரசன் மகளான மான் போன்ற உமாதேவியைக் கொண்டுள்ளது இடப்பக்கம். அவர் என்றும் ஏறும் வாகனம் இடபமே. பிச்சாடனரான நீர் நான் பிச்சையிட என்னிடத்து வருவீராக. நீர் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில், அதுபோல அடியேன் உள்ளத்திலும் எழுந்தருள நினைப்பீராக!
4047 ஓதி வாயதும் மறைகளே
யுரைப்ப தும்பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே
பணிகின் றேன்மிகு மாதையே
காது சேர்கனங் குழையரே
காத லார்கனங் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா
மிழலை மேவிய வேதியா
3.116.2
சிவபெருமான் ஓதுவன வேதங்களே. உரைப்பது பிறர் எவர்க்கும் தெரிவதற்கரிய பொருள்களே. திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டது உமாதேவியை. வழிபடுகின்றேன் அவ்வழகிய கோலத்தை. காதிலே அணிந்திருப்பது கனவிய குழை. அவர் தம்மிடத்து அன்பு செலுத்துபவர்களிடத்துக் குழைந்து நிற்பர். வீதியிலே மிகுவது வேதஒலி. வேதங்களை அருளிச் செய்த அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்.
4048 பாடு கின்றபண் டாரமே
பத்த ரன்னபண் டாரமே
சூடு கின்றது மத்தமே
தொழுத வென்னையுன் மத்தமே
நீடு செய்வதுந் தக்கதே
நின்ன ரைத்திகழ்ந் தக்கதே
நாடு சேர்மிழலை யூருமே
நாக நஞ்சழலை யூருமே
3.116.3
சிவபெருமான் ஊழி இறுதியில் பாடுகின்ற பண்தாரம் என்னும் இசை ஈறாகிய எழுவகை இசையுமே. பக்தர்கட்கு ஞானக்கருவூலமாய் விளங்குபவர். அவர் சூடுவது ஊமத்த மலர். அவரை வணங்கும் என்னைப் பித்தனாக்கினார். அவரையே நீளத் தியானித்துப் போற்றுமாறு செய்தார். இது தகுமோ? அவருடைய இடுப்பில் விளங்குவது அக்குப்பாசியே. அப்பெருமான் மிழலை நாட்டிலுள்ள திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுகின்றார். அவருடைய திருமேனியில் நாகமும், கண்டத்தில் நஞ்சும், கரத்தில் நெருப்பும் விளங்குகின்றன.
4049 கட்டு கின்றகழ னாகமே
காய்ந்ததும் மதன னாகமே
இட்ட மாவதிசை பாடலே
யிசைந்த நூலினமர் பாடலே
கொட்டுவான் முழவம் வாணனே
குலாயசீர் மிழலை வாணனே
நட்ட மாடுவது சந்தியே
நானுய்தற் கிரவு சந்தியே
3.116.4
சிவபெருமான் திருவடிகளில் வீரக்கழலாக அணிந்துள்ளது நாகத்தையே. அவர் எரித்தது மன்மதனது உடம்பையே. அவர் விரும்புவது அடியவர்கள் பாடும் இசைப் பாடலே. பொருந்திய நூலின் அமைதிக்கு ஏற்றதாயிருப்பது அவர் ஆடலே. அவ்வாடலுக்கு முழவங் கொட்டுபவன் வாணனே. இவை திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் சிறப்புக்கள். அவர் நடனமாடுவது சந்தி என்னும் நாடக உறுப்பின்படி. நான் காம வாதையினின்றும் பிழைப்பதற்கு இராக்காலம் தக்க சமயமாகும்.
4050 ஓவி லாதிடுங் கரணமே
யுன்னு மென்னுடைக் கரணமே
ஏவு சேர்வுநின் னாணையே
யருளி னின்னபொற் றாணையே
பாவி யாதுரை மெய்யிலே
பயின்ற நின்னடி மெய்யிலே
மேவி னான்விறற் கண்ணனே
மிழலை மேயமுக் கண்ணனே
3.116.5
மிழலையை உகந்தருளியிருக்கும் முக்கண் இறைவரே படைப்புக் காலமுதல் மகாசங்கார காலம் வரை ஓய்வின்றித் தொழிலாற்றும் கரணபூதர். மனம் முதலிய அகக்கருவிகள் உம்மையே நினைக்கும். மன்மதபாணம் என்மேல் தைப்பதும் உம் ஆணையால், உம் பொன்போன்ற திருவடிகளை நீர் அருளினால் துன்பம் எனக்கு நேருமோ? உம்மைக் கருதாது உரைப்பன மெய்ம்மையாகாது. வலியோனாகிய திருமால் உம்முடைய திருவடியை உண்மையாகவே பொருந்தப் பெற்றான்.
4051 வாய்ந்த மேனியெரி வண்ணமே
மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே
கடுநடஞ் செயுங் காலனே
போந்த தெம்மிடை யிரவிலே
யும்மிடைக் கள்வ மிரவிலே
வேய்ந்ததும் மிழலை யென்பதே
விரும்பியே யணிவ தென்பதே
3.116.6
சிவபெருமானின் திருமேனி நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடையது. அவர் மகிழ்ந்து பாடுவது பல வண்ணப் பாடல்களையே. அவரால் உதைக்கப் பட்டு வீழ்ந்தவன் காலன். அவர் அழகிய திருநடனம் செய்யும் கால்களை உடையவர். அவர் எங்கள் வீட்டிற்குப் பிச்சை யேற்க வந்தது இரவில். எம் உள்ளம் புகுந்து கவர்ந்தது இரவில். அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். அவர் விரும்பி அணிவது எலும்பு மாலையே.
4052 அப்பி யன்றகண் ணயனுமே
யமரர் கோமகனு மயனுமே
ஒப்பி லின்றமரர் தருவதே
யொண்கையா லமரர் தருவதே
மெய்ப்ப யின்றவ ரிருக்கையே
மிழலை யூரும திருக்கையே
செப்புமின் னெருது மேயுமே
சேர்வுமக் கெருது மேயுமே
3.116.7
பாற்கடலில், துயிலும் கண்ணுடைய திருமாலும், தேவேந்திரனும், பிரமனும் கேட்டவற்றை ஒப்பின்றி உமது திருக்கரம் வழங்கி வருதலால் அது கற்பக விருட்சம் ஆகும். மெய்த்தவம் செய்பவர்களின் உள்ளக்கோயில் உமது இருப்பிடமாகும். திருவீழி மிழலை என்னும் திருத்தலமும் நீர் வீற்றிருந்தருளும் இடமாகும். உமக்கென்றுள்ள விளைநிலமாகிய என் மனநிலத்தில் எருது புகுந்து கேடு விளைவித்தல் தகுமோ? அதை ஓட்டி என்னை ஆட்கொள்ள அங்கு வருவதற்கு உமக்கு எருதும் இருக்குமே.
4053 தான வக்குலம் விளக்கியே
தாரகைச் செல விளக்கியே
வான டர்த்த கயிலாயமே
வந்து மேவு கயிலாயமே
தானெ டுத்தவல் லரக்கனே
தடமுடித் திரள ரக்கனே
மேன டைச்செல விருப்பனே
மிழலை நற்பதி விருப்பனே
3.116.8
சிவபெருமான், பகைத்து நிற்கும் அசுரர் அழிவர் என்பதை விளக்கியவர். தாரகை முதலான ஒளிதரும் பொருள்களின் ஒளியைத் தம் பேரொளியால் குன்றச் செய்தவர். வானை முட்டும் உயர்ந்த கயிலைமலையைத் தம் வல்லமையால் எடுத்த அரக்கனான இராவணனின் பெரிய முடிகளை நெரித்தவர். மனைகள் தோறும் சென்று பிச்சை எடுத்தலில் விருப்பமுடையவர். திருவீழிமிழலை என்னும் நற்பதியில் விரும்பி வீற்றிருந்தருளுபவர்.
4054 காய மிக்கதொரு பன்றியே
கலந்த நின்னவுரு பன்றியே
ஏய விப்புவி மயங்கவே
யிருவர் தாமன மயங்கவே
தூய மெய்த்திர ளகண்டனே
தோன்றி நின்றமணி கண்டனே
மேய வித்துயில் விலக்கணா
மிழலை மேவிய விலக்கணா
3.116.9
பன்றி உருவெடுத்த திருமால், பிரமன் ஆகிய இருவரும் சேர்ந்து தேடவும்,உம் உருவத் திருமேனியைக் காண்பதற்கு இயலாதவராய், இப்புவியில் மயங்கி நின்று, மனம் கலங்கிய நிலையில், தூய சோதித் திரளாய் அகண்ட திரு மேனியராய்த் தோன்றி நின்ற நீலகண்டத்தை உடையவரே. எம் தலைவரே! அடியேனின் தூக்கம் பிடிக்கா நிலையை விலக்குவீராக! திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அழகரே.
4055 கஞ்சியைக் குலவு கையரே
கலக்கமா ரமணர் கையரே
அஞ்ச வாதிலருள் செய்யநீ
யணைந்திடும் பரிசு செய்யநீ
வஞ்சனே வரவும் வல்லையே
மதித்தெ னைச்சிறிதும் வல்லையே
வெஞ்ச லின்றிவரு வித்தகா
மிழலைசே ரும்விறல் வித்தகா
3.116.10
சிவபெருமானே! கஞ்சி உண்ணும் கையையுடைய பௌத்தர்களும், சமணர்களும் அஞ்சுமாறு, அடியேன் வாதில் வெற்றி கொள்ள அருள்செய்தீர் நீவிர். பிறர் செய்யும் சூழ்ச்சியை அறிய வல்லீரும் நீவிர். அடியவரின் துயர் நீக்கிட வருவதற்கு வல்லீர். நீவிர் என் உரையைச் சிறிதளவேனும் மதித்து விரைவில் வரவும் இல்லையே. குறைதலில்லாமல் மேன்மேலும் வருகின்ற இத்துயரங்கள் எனக்குத் தகா. திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வலிமை மிக்க வித்தகரே.
4056 மேய செஞ்சடையி னப்பனே
மிழலைமே வியவெ னப்பனே
ஏயு மாசெய விருப்பனே
யிசைந்த வாசெய விருப்பனே
காய வர்க்கசம் பந்தனே
காழி ஞானசம் பந்தனே
வாயுரைத்த தமிழ் பத்துமே
வல்லவர்க்கு மிவை பத்துமே
3.116.11
சிவபெருமான் சிவந்த சடையில் கங்கையை அணிந்தவர். திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் என் அப்பர். முத்தொழிலையும் அவருடைய சந்நிதியில் அவரவர் செய்ய வாளா இருப்பவர். தம்மைப் போற்றி வழிபடும் பக்தர்கட்கு விருப்பமானவர். பஞ்ச பூதங்களோடும் தோய்ந்தும் தோயாமல் இருப்பவர். அப்பெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்கு, இவை ஞானத்தின் படிநிலைகள் பத்தாய் அமையும். (இறுதியில் சிவபோகம் பெறுவர் என்பது குறிப்பு).
திருச்சிற்றம்பலம்
3.116.திருவீழிமிழலை |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|