|
||||||||
மூன்றாம் திருமுறை-38 |
||||||||
3.038.திருக்கண்டியூர்வீரட்டம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர்.
தேவியார் - மங்கைநாயகியம்மை.
இறை உத்தரவு.
3200 வினவினேனறி யாமையில்லுரை
செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை
மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம
ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ்
வையமாப்பலி தேர்ந்ததே
3.038.1
இறையருளை வேண்டிய பணிசெய்யும் அன்பர்காள்! அறியாமை காரணமாக வினவுகின்றேன். உரைசெய்வீர்களாக! ஆரவாரத்தோடு மிகுந்தநீர் செல்லும் காவிரியின் கரையிலுள்ள திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்ட நாதன், தனக்கு நெருக்கமான திருமாலும், பிரமனும் அண்டங்களை ஆளத் தான் சுடுகாட்டில் வாழ்ந்து ஆடியும், பாடியும் பிச்சையேற்றுத் திரிவது ஏன்? தனக்கு முன்னோர் தேடிவைத்த பொருள் இல்லாத காரணத்தினாலா?
3201 உள்ளவாறெனக் குரைசெய்மின்னுயர்
வாயமாதவம் பேணுவீர்
கள்ளவிழ்பொழில் சூழங்கண்டியூர்
வீரட்டத்துறை காதலான்
பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை
வைத்ததும்பெரு நீரொலி
வெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு
மங்கையா ளுடனாகவே
3.038.2
உயர்ந்த பெரிய தவநெறியில் நிற்பவர்களே! எனக்கு உள்ளவாறு உரைசெய்வீர்களாக! தேன்கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கண்டியூரில் தனக்கு ஒப்பாரும், மிக்காருமில்லாத, உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமான் இளம்பிறைச் சந்திரனைச் சிவந்த சடையின் மீது வைத்ததும், பெருநீர்ப் பெருக்காகிய கங்கையைச் சடையில் தாங்கியதும் என் கொல்?.
3202 அடியராயினீர் சொல்லுமின்அறி
கின்றிலேன்அரன் செய்கையைப்
படியெலாந்தொழு தேத்துகண்டியூர்
வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய்முத லாய்இவ்வைய
முழுதுமாய்அழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி
நூலும்பூண்டெழு பொற்பதே
3.038.3
என் சிற்றறிவினால் சிவபெருமானின் செய்கையை அறிய இயலவில்லை. எப்பொழுதும் சிவபெருமானின் திருவடிகளை இடையறாது சிந்தித்துக் கொண்டிருக்கும் அடியவர்களே! நீங்கள் எனக்குச் சொல்வீர்களாக! உலகமெல்லாம் தொழுது போற்றுகின்ற திருக்கண்டியூரில் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இவ்வுலகிற்கு அந்தமாயும், ஆதியாயும் இருப்பவன். இவ்வுலகம் முழுவதும் நிறைந்து விளங்குபவன். அப்பெருமான் தன் அழகிய மார்பில் திருநீற்றுப் பூச்சும், முப்புரிநூலும் பூண்டு தோன்றுவது ஏன்?
3203 பழையதொண்டர்கள் பகருமின்பல
வாயவேதியன் பான்மையைக்
கழையுலாம்புனல் மல்குகாவிரி
மன்னுகண்டியூர் வீரட்டன்
குழையொர்காதினிற் பெய்துகந்தொரு
குன்றின்மங்கை வெருவுறப்
புழைநெடுங்கைநன் மாவுரித்தது
போர்த்துகந்த பொலிவதே
3.038.4
சிவனடியார் திருக்கூட்டமரபில் வழிவழியாய் வருகின்ற பழ அடியீராகிய நீங்கள் புத்தடியேனுக்குப் பலவாகிய தன்மைகளையுடைய இறைவனின் தன்மையைக் கூறுங்கள். மலையிலிருந்து பெருகும் காவிரியால் வளம்மிகுந்த திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன், தன் காதில் ஒரு குழையணிந்து மகிழ்ந்து, மலைமகளான உமாதேவி அஞ்சுமாறு துளையுடைய நீண்ட தும்பிக்கையையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தது ஏன்?
3204 விரவிலாதுமைக் கேட்கின்றேன்அடி
விரும்பியாட்செய்வீர் விளம்புமின்
கரையெலாந்திரை மண்டுகாவிரிக்
கண்டியூருறை வீரட்டன்
முரவமொந்தை முழாவொலிக்க
முழங்குபேயொடுங் கூடிப்போய்ப்
பரவுவானவர்க் காகவார்கடல்
நஞ்சமுண்ட பரிசதே
3.038.5
அடியார் நடுவுள் கலந்திருக்கப் பெறாமையால் இவற்றை வினவுகின்றேன். இறைவனின் திருவடிகட்கு விரும்பிப் பணிசெய்யும் அடியவர்களே! விளம்புவீராக. அலைகள் மோதுகின்ற காவிரியின் கரையிலுள்ள திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன், முரவு, மொந்தை, முழவு முதலான வாத்தியங்கள் முழங்க, பேய்க்கணங்களும், பூதகணங்களும் சூழ்ந்து நிற்க, தன்னை வழிபட்ட தேவர்கள் பொருட்டுப் பெரிய பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட தன்மைதான் என்கொல்?.
3205 இயலுமாறெனக் கியம்புமின்னிறை
வன்னுமாய்நிறை செய்கையைக்
கயனெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி
கண்டியூருரை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக்
காகஅன்றயன் பொய்ச்சிரம்
அயனகவ்வ தரிந்துமற்றதில்
ஊணுகந்த வருத்தியே
3.038.6
மெய்யடியார்களே! இறைவன் உலகினுக்கும், உயிருக்கும் தலைவனாய் இருப்பதோடு, உலகப்பொருள்களிலும், அனைத்து உயிர்களிடத்தும் அவையேயாய்க் கலந்து வியாபித்து நிற்கும் தன்மையை எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக! கயல் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் உலகத்தில் மழை பொழியச் செய்து நலம்புரியும் தேவர்கட்காகப் பிரமனுடைய ஐந்தாவது சிரத்தை அயலார் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து, அதில் பிச்சையேற்றுண்ணும் விருப்பம் என்கொல்?
3206 திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச்
செல்வன்றன்னது திறமெலாம்
கருந்தடங்கண்ணி னார்கடாந்தொழு
கண்டியூருறை வீரட்டன்
இருந்துநால்வரொ டானிழல்லற
முரைத்தும்மிகு வெம்மையார்
வருந்தவன்சிலை யாலம்மாமதின்
மூன்றுமாட்டிய வண்ணமே
3.038.7
தௌந்த சிவஞானம் பெற்று இறைவனுக்குத் தொண்டு செய்யும் அன்பர்களே! மெய்ச் செல்வனாக விளங்கும் சிவபெருமானின் தன்மைகளை எனக்கு உரைப்பீர்களாக! கருநிற அழகிய கண்களையுடைய மகளிர் வழிபடும் திருக்கண்டியூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன், அன்று ஆலமரநிழலில் நால்வர்க்கு அறம் உரைத்ததும், தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு மேருமலையை வில்லாக வளைத்ததும் என்கொல்?
3207 நாவிரித்தரன் றொல்புகழ்பல
பேணுவீரிறை நல்குமின்
காவிரித்தடம் புனல்செய்கண்டியூர்
வீரட்டத்துறை கண்ணுதல்
கோவிரிப்பய னானஞ்சாடிய
கொள்கையுங்கொடி வரைபெற
மாவரைத்தலத் தாலரக்கனை
வலியைவாட்டிய மாண்பதே
3.038.8
நாவால் சிவபெருமானது பழம்புகழ் போற்றும் அடியவர்களே! எனக்கு விடை கூறுவீர்களாக. காவிரியால் நீர் வளம்மிக்க திருக்கண்டியூர் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான், பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம் ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் தன்மையும், கொடி போன்ற பார்வதி அமைதி பெற, பெரிய கயிலைமலையில் தன் காற்பெருவிரலை ஊன்றி மலையின் கீழ் இராவணன் நெரியுமாறு செய்து அவன் வலிமையை அழித்த மாண்பும் என்கொல்?
3208 பெருமையேசர ணாகவாழ்வுறு
மாந்தர்காளிறை பேசுமின்
கருமையார்பொழில் சூழுந்தண்வயற்
கண்டியூருறை வீரட்டன்
ஒருமையாலுயர் மாலுமற்றை
மலரவன்உணர்ந் தேத்தவே
அருமையாலவ ருக்குயர்ந்தெரி
யாகிநின்றவத் தன்மையே
3.038.9
சிவபெருமானுடைய பெருமையைப் புகழ்ந்து கூறி, அவனைச் சரண்புகுந்து அவனருளால் வாழும் மாந்தர்காள்! விடை கூறுவீர்களாக! மரங்களின் அடர்த்தியால் வெயில் நுழையாது இருண்டு விளங்கும் சோலைகள் சூழ்ந்த, குளிர்ச்சியான வயல்களையுடைய திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளுகின்ற வீரட்டநாதன், திருமாலும், பிரமனும் சிவபெருமானின் முழுமுதல்தன்மையை உணர்ந்து போற்றும்படி, அவர்கள் காண்பதற்கு அரியவனாய் உயர்ந்து நெருப்புமலையாய் நின்ற தன்மை என் கொல்?
3209 நமரெழுபிறப் பறுக்குமாந்தர்காள்
நவிலுமின்உமைக் கேட்கின்றேன்
கமரழிவயல் சூழுந்தண்புனற்
கண்டியூருறை வீரட்டன்
தமரழிந்தெழு சாக்கியச்சமண்
ஆதரோது மதுகொளா
தமரரானவ ரேத்தவந்தகன்
தன்னைச்சூலத்தில் ஆய்ந்ததே
3.038.10
தம்மைச் சார்ந்து விளங்கும் சுற்றத்தவர்களின் ஏழு பிறப்புக்களையும் அறுக்கும் மெய்யடியார்களே! உங்களை வினவுகின்றேன். விடை கூறுவீர்களாக. பூமியில் வெடிப்பு ஏற்பட்டு வறட்சி உண்டாகாதவாறு குளிர்ந்த நீர் பாயும் வயல்கள் சூழ்ந்த திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டன், தமது சமயத்தவர் பயனெய்தாது அழியும்படி இறைவனைச்சாரும் வழிகளை எடுத்துரைக்காத புத்தர், சமணர்கள் உரைக்கும் உலகியல் அறங்களான கொல்லாமை, பரதுக்க துக்கம் இவற்றை மறுத்து, தேவர்கள் ஏத்த அந்தகாசுரனைச் சூலத்தால் குத்திக் கொன்றது ஏன்?
3210 கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர்
வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக்
கேட்டுகந்த வினாவுரை
திருத்தமாந்திகழ் காழிஞானசம்
பந்தன்செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
உரைசெய்வார் உயர்ந்தார்களே
3.038.11
அன்பர்தம் கருத்தாக விளங்குபவனாய், சோலைகள் சூழ்ந்த திருக்கண்டியூர் வீரட்டானத்தில் பிறரால் காணப்பெறாது மறைந்திருந்து மனத்தைக் கவரும் கள்வனாய், சொல்லின் பொருளாக இருக்கும், அப்பெருமானின் திறத்தினை அடியவர்களிடம் வினாவுரையாகக் கேட்டு மகிழும் முறையில் சீகாழியில் அவதரித்த, இறைவனின் இயல்புகளை நன்கு உணர்ந்த ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஒருவராகத் தனித்தும், பலராகச் சேர்ந்தும் ஓதவல்லவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
3.038.திருக்கண்டியூர்வீரட்டம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|