|
||||||||
மூன்றாம் திருமுறை-83 |
||||||||
3.083.திருநல்லூர்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர்.
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
3690 வண்டிரிய விண்டமலர் மல்குசடை
தாழவிடை யேறிப்
பண்டெரிகை கொண்டபர மன்பதிய
தென்பரத னயலே
நண்டிரிய நாரையிரை தேரவரை
மேலருவி முத்தம்
தெண்டிரைகண் மோதவிரி போதுகம
ழுந்திருந லூரே
3.083.1
வண்டு அமர விரிந்த மலர்கள் நிறைந்த சடைதொங்கச் சிவபெருமான் இடபவாகனத்திலேறி, பண்டைக்காலந்தொட்டே கையில் நெருப்பேந்தியவனாய் விளங்கும் பதியாவது, பக்கத்தில் நண்டு ஓட, நாரை தேட மலையிலிருந்து விழும் அருவி முத்துக்களை அடித்துக் கொண்டு வந்து சேர்க்க, காவிரியின் தௌளிய அலைகள் மோதுவதால் அரும்புகள் மலர நறுமணம் கமழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3691 பல்வளரு நாகமரை யார்த்துவரை
மங்கையொரு பாகம்
மல்வளர்பு யத்திலணை வித்துமகி
ழும்பரம னிடமாம்
சொல்வளரி சைக்கிளவி பாடிமட
வார்நடம தாடிச்
செல்வமறை யோர்கண்முறை யேத்தவள
ருந்திருந லூரே
3.083.2
நச்சுப்பல்லுடைய நாகத்தை இடுப்பிலே கச்சாகக் கட்டி, மலைமங்கையாகிய உமாதேவியைத் தன் வலிமையான தோளின் இடப்பாகத்தில் அணைத்து மகிழும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, மகளிர் பொருட்செறிவுடைய பாடல்களைப் பாடி, அவற்றிற்கேற்ப நடனமாடுவதும், வேதம் ஓத வல்ல அந்தணர்கள் நியதிப்படி போற்றி வழிபடுவதும் ஆகிய புகழ்வளரும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3692 நீடுவரை மேருவில தாகநிகழ்
நாகமழ லம்பால்
கூடலர்கண் மூவெயிலெ ரித்தகுழ
கன்குலவு சடைமேல்
ஏடுலவு கொன்றைபுன னின்றுதிக
ழுந்நிமல னிடமாம்
சேடுலவு தாமரைக ணீடுவய
லார்திருந லூரே
3.083.3
பெரிய மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், அக்கினியை அம்பாகவும் கொண்டு, பகைவர்களின் மும்மதில்களை எரித்த அழகனான சிவபெருமானின் சடைமேல் இதழ்களையுடைய கொன்றையும், கங்கையும் விளங்குகின்றன. இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பெருமைமிக்க தாமரை மலர்கள் விளங்கும் வயல்வளமுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3693 கருகுபுரி மிடறர்கரி காடரெரி
கையதனி லேந்தி
அருகுவரு கரியினுரி யதளர்பட
வரவரிடம் வினவில்
முருகுவிரி பொழிலின்மண நாறமயி
லாலமர மேறித்
திருகுசின மந்திகனி சிந்தமது
வார்திருந லூரே
3.083.4
சிவபெருமான் கருகிய கண்டத்தை உடையவர், சுடுகாட்டில் கையில் எரியும் நெருப்பேந்தி நடனமாடுபவர். தம்மைத் தாக்க வந்த மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, சோலைகளிலுள்ள நறுமணத்தை நுகர்ந்த இன்பத்தால் மயில்களாட, அவ்வாடலுக்குப் பொழில் பரிசில் வழங்கிலதே என்று சினந்தவை போல் குரங்குகள் மரத்திலேறி, மயிலாடுதல் கண்ட இன்பத்திற்கு ஈடாகப் பரிசு கொடுப்பனபோல் கனிகளை உதிர்க்கக் கனிச்சாறு பெருகும் திருநல்லூர் எனும் திருத்தலமாம்.
3694 பொடிகொடிரு மார்பர்புரி நூலர்புனல்
பொங்கரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுத
லாளரவரிடமாம்
இடிகொண்முழ வோசையெழி லார்செய்தொழி
லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை யகலமன மினியவர்கள்
சேர்திருந லூரே
3.083.5
சிவபெருமான் திருநீறணிந்த அழகிய மார்பை உடையவர். முப்புரிநூல் அணிந்தவர். கங்கையையும், பாம்பையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியுடையவர். இடப வாகனத்தில் வீற்றிருந்தருளும் முதற்பொருளானவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இடி போன்ற முழவோசை ஒலிக்க, தொழிலாளர்களின் கைத்திறத்தால் அழகுடன் விழாக்கள் சிறந்து விளங்க, அவ்விழாக்களைச் சேவித்தலால் துன்பம்தரும் வினைகள் அகல, இனிய மனமுடையோர் வசிக்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3695 புற்றரவர் நெற்றியொர்க ணொற்றைவிடை
யூர்வரடை யாளம்
சுற்றமிருள் பற்றியபல் பூதமிசை
பாடநசை யாலே
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கண்
முற்றுமெயின் மாளச்
செற்றவ ரிருப்பிட நெருக்குபுன
லார்திருந லூரே
3.083.6
சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பை அணிந்தவர், நெற்றியில் ஒரு கண் உடையவர். இடப வாகனத்தில் அமர்ந்தவர். இவையே அவரது அடையாளமாகும். அத்தகையவர் அடையாளம் காணமுடியாத இருட்டில் பல பூதங்கள் இசைபாட நடனம்புரிபவர். விருப்பத்தோடு வேதங்களைக் கற்ற அந்தணர்களால் உணர்ந்து போற்றப்படுபவர். பகையசுரர்களின் முப்புரங்கள் எரியும் படி சினந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நீர்வளம் நிறைந்த திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3696 பொங்கரவ ரங்குமுடன் மேலணிவர்
ஞாலமிடுபிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய்து
லங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை
யடிகளிடம் வினவில்
செங்கயல்வ திக்குதிகொ ளும்புனல
தார்திருந லூரே
3.083.7
இறைவன் சினம் பொங்கப் படமெடுத்தாடும் பாம்பை அணிந்துள்ளவர். எலும்பையும் திருமேனியில் அணிந்தவர். பிரமகபாலமேந்திப் பூமியிலுள்ளோர் இடும் பிச்சையேற்க ஆரவாரித்துத் திரிபவர். தம் திருமேனியில் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர். கங்கையையும், பாம்பையும், சந்திரனையும் சடை முடியிலணிந்துள்ளவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது செங்கயல் மீன்கள் சேற்றில் குதிக்கும் நீர்வளமிக்க திருநல்லூர் என்னும் திருத்தலம் ஆகும்.
3697 ஏறுபுகழ் பெற்றதெனி லங்கையவர்
கோனையரு வரையில்
சீறியவ னுக்கருளு மெங்கள்சிவ
லோகனிட மாகும்
கூறுமடி யார்களிசை பாடிவலம்
வந்தயரு மருவிச்
சேறுகமரானவழி யத்திகழ்த
ருந்திருந லூரே
3.083.8
மிக்க புகழ் பெற்ற தென் இலங்கை மன்னனான இராவணனைக் கயிலைமலையின் கீழ் நெருக்கி அடர்த்துப் பின்னர் அவனுக்கு நீண்ட வாழ்நாளும், வெற்றிதரும் வீரவாளும் அளித்து அருள்செய்தவர் சிவலோக நாதரான சிவபெருமான் ஆவார். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, அடியார்கள் இசைபாடி வலம் வரும்பொழுது, பக்தியால் அவர்கள் கண்களிலிருந்து பெருக்கெடுக்கும் ஆனந்தக் கண்ணீர் அருவியெனப் பாய்ந்து அருகிலுள்ள நிலவெடிப்புகளில் விழ, வெடிப்புக்கள் நீங்கி நிலம் சேறாகத் திகழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3698 மாலுமலர் மேலயனு நேடியறி
யாமையெரி யாய
கோலமுடை யானுணர்வு கோதில்புக
ழானிடம தாகும்
நாலுமறை யங்கமுத லாறுமெரி
மூன்றுதழ லோம்பும்
சீலமுடை யார்கணெடு மாடம்வள
ருந்திருந லூரே
3.083.9
திருமாலும், தாமரை மலர்மேல் வீற்றிருக்கின்ற பிரமனும் தேடியும் அறியமுடியா வண்ணம் பெருஞ்சோதிவடிவாய் விளங்கியவனும், இயல்பாகவே பாசங்களின் நீங்கி முற்றுணர்வும், இயற்கையுணர்வும் உடையவனும், குற்றமற்ற புகழையுடையவனும் ஆன சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும், மூன்று அழலும் ஓம்புகின்ற சீலமுடைய தூய அந்தணர்கள் வாழ்கின்ற நீண்ட மாடமாளிகைகளையுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3699 கீறுமுடை கோவணமி லாமையிலொ
லோவியதவத்தர்
பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள்
வேடமவை பாரேல்
ஏறுமட வாளொடினி தேறிமுனி
ருந்தவிடமென்பர்
தேறுமன வாரமுடை யார்குடிசெ
யுந்திருந லூரே
3.083.10
கிழித்த துணியும், கோவணமும் இல்லாமையால் ஆடை துவைக்கும் தொழில் நீங்கிய தவத்தவர்களாகிய சமணத் துறவிகளும், அழியக்கூடிய உடலைத் துவராடையில் போர்த்திக் கொள்ளும் புத்தத்துறவிகளும் கொண்ட வேடத்தை ஒரு பொருட்டாக ஏற்க வேண்டா. சிவபெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு இடபத்தின் மீது இனிதேறி, தொன்றுதொட்டு வீற்றிருந்தருளும் இடமாவது, சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்ற தௌந்த உள்ளமும், அன்பும் உடையவர்களான சிவனடியார்கள் வாழ்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3700 திரைகளிரு கரையும்வரு பொன்னிநில
வுந்திருந லூர்மேல்
பரசுதரு பாணியைந லந்திகழ்செய்
தோணிபுர நாதன்
உரைசெய்தமிழ் ஞானசம்பந்தனிசை
மாலைமொழி வார்போய்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி
பேறுபெறு வாரே
3.083.11
காவிரியின் இருகரைகளிலும் அலைகள் மோதுவதால் செழிப்புடன் விளங்கும் திருநல்லூர் என்னும் திருத்தலத்திலுள்ள மழுவேந்திய கரமுடைய சிவபெருமானை, வயல் வளமிக்க, தோணிபுர நாதனான தமிழ் ஞானசம்பந்தன் போற்றிசைத்த இப்பாமாலையை ஓதுபவர்கள், பிரமனால் நறுமணமிக்க சிறந்த மலர்கள்தூவி வழிபடப்படும் சிவபெருமானுடைய திருவடியைப் பெறும் பேற்றினை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
3.083.திருநல்லூர் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|