|
||||||||
மூன்றாம் திருமுறை-94 |
||||||||
3.094.திருவெங்குரு
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
திருவெங்குரு என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
3810 விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல் லாரிட ரிலரே 3.094.1
தேவர்கள் தொழுது போற்றுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும், சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணிந்துள்ள சிவபெருமானே! சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணியும் பெருமானாகிய உம் தொழத்தக்க திருவடிகளைத் தியானிக்க வல்லவர் துன்பம் அற்றவர்கள் ஆவர்.
3811 வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய வருமறை யீரே
ஆதிய வருமறை யீருமை யலர்கொடு
ஓதிய ருணர்வுடை யோரே 3.094.2
நால்வேதங்களையும் ஐயந்திரிபறக் கற்ற அந்தணர்கள் வழிபடுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும், முதன்மையான வேதத்தின் பொருளானவரே! முதன்மையான வேதத்தின் பொருளானவரான உம்மை மலர்கள் கொண்டு பூசித்துத், தோத்திரம் செய்பவர்கள் சிவஞானம் உடையவர்கள் ஆவர்.
3812 விளங்குதண் பொழிலணி வெங்குருமேவிய
இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீரும திணையடி
உளங்கொள வுறுபிணி யிலரே 3.094.3
பெருமையுடன் விளங்குகின்ற குளிர்ந்த சோலைகளையுடைய அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையினையுடைய சிவபெருமானே! இளம்பிறைச் சந்திரனைச் சடையில் அணிந்துள்ள உம்முடைய இரண்டு திருவடிகளையும் மனத்தால் நினைத்துத் தியானிப்பவர்கள் உற்றபிணிகள் இல்லாதவராவர்.
3813 விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
வண்டமர் வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்க டுயர்பிணி யிலரே 3.094.4
முறுக்குடைந்து விரிகின்ற மலர்களையுடைய சோலைகளால் அழகுடன் திகழும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும், வண்டுகள் விரும்பும் நீண்ட சடையுடைய சிவபெருமானே! வண்டுகள் விரும்பும் சடையினையுடைய பெருமானாகிய உம்மை வாழ்த்தும் சிறப்புடைய தொண்டர்கள் துயரும், பிணியும் அற்றவர்கள் ஆவர்.
3814 மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொ டரவசைத் தீரே
அக்கினொ டரவசைத் தீரும தடியிணை
தக்கவ ருறுவது தவமே 3.094.5
அன்பின் மிக்கார் தொழுது எழுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அக்குப்பாசியோடு பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமானே! அக்குப்பாசியோடு பாம்பையும் அணிந்துள்ள பெருமானாகிய உம் இணையடிகளைத் துதிக்கும் தகுதிபெற்ற அடியவர்கள் பெறுவது சிறந்த தவத்தின் பயனாகும்.
3815 வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே 3.094.6
சுடப்பட்ட வெண்ணிறத் திருவெண்ணீற்றினை அணிந்து, திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற அழிவில்லாத புகழுடைய சிவபெருமானே! அழிதல் இல்லாத புகழுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபட்டுத் தியானிப்பவர்களின் வினைகள் சிதைந்து போகும்.
3816 விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அழன்மல்கு மங்கையி னீரே
அழன்மல்கு மங்கையி னீருமை யலர்கொடு
தொழவல்லல் கெடுவது துணிவே 3.094.7
திருவிழாக்கள் நிறைந்ததும், சோலைகள் அழகு செய்வதுமான திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் நெருப்பேந்திய அழகிய திருக்கரத்தையுடைய சிவ பெருமானே! நெருப்பேந்திய அழகிய திருக்கரமுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபடுபவர்களின் துன்பங்கள் கெடுவது நிச்சயம்.
3817 வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
சித்தம துடையவர் திருவே 3.094.8
சாமர்த்தியமுடைய, நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் நிறைந்த திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, ஊமத்த நன்மலரினைச் சூடியுள்ள, சிவபெருமானே! ஊமத்தம் மலர் சூடிய உம் திருவடிகளைத் தொழும் சித்தமுடையவர்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றவர் ஆவார்.
3818 மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன் மணிமிடற் றீரே
ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
சீலம துடையவர் திருவே 3.094.9
மேலான பக்தர்கள் தொழுதெழுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, விடம் தங்கிய அழகிய கண்டத்தை உடைய சிவபெருமானே! விடம் தங்கிய அழகிய கண்டத்தையுடையவராகிய உம்திருவடிகளைத் தொழுகின்ற நல்லொழுக்கம் உடையவர்களே பேரின்பம் பெறுவர்.
3819 விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
உரைமல்கு புகழவ ருயர்வே 3.094.10
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அரையில் கட்டிய புலித்தோல் ஆடையையுடைய சிவபெருமானே! அரையில் கட்டிய புலித்தோலாடையையுடைய பெருமானாகிய உம் இணையடிகளை நிரம்பிய சொற்களால் புகழ்பவர்களே உயர்வு அடைவர்.
திருச்சிற்றம்பலம்
3.094.திருவெங்குரு |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|