|
||||||||
முதல் திருமுறை-107 |
||||||||
1.107.திருக்கொடிமாடச்செங்குன்றூர்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்கு நாட்டிலுள்ளது. திருச்செங்கோடு என வழங்குகின்றது.
சுவாமிபெயர் - அர்த்தநாரீசுவரர்.
தேவியார் - அர்த்தநாரீசுவரி.
1152 வெந்தவெண் ணீறணிந்து விரிநூல்
திகழ்மார்பில் நல்ல
பந்தண வும்விரலா
ளொருபாக மமர்ந்தருளிக்
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
அந்தண னைத்தொழுவார்
அவல மறுப்பாரே.
1.107.1
விரிக்கப் பெற்ற பூணநூல் திகழும் திருமார்பினனாய், நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து, பந்து பொருந்திய கைவிரல்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய அழகிய தண்ணளியை உடைய சிவபெருமானைத் தொழுவார் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.
1153 அலைமலி தண்புனலோ டரவஞ்
சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான்
மலையா ரிளவாழைக்
குலைமலி தண்பாழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார்
தடுமாற் றறுப்பாரே.
1.107.2
அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கை நதியோடு பாம்பினையும், சடையின்கண் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையின்கண் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடைய குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுவார் தடுமாற்றம் தவிர்வர்.
1154 பாலன நீறுபுனை திகழ்மார்பிற்
பல்வளைக்கை நல்ல
ஏல மலர்க்குழலா
ளொருபாக மமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான்
கழலேத்தல் நீதியே.
1.107.3
பால் போன்று வெள்ளிய திருநீற்றைப் புனைந்து விளங்கிய மார்பினோடு பல்வகை வளையல்களையும் பாங்குறப் புனைந்த கையினளாய், மணம் கமழும் நறுமலர்களைச் சூடிய கூந்தலினளாகிய உமையம்மை ஒரு பாகமாக அமைந்த கோலத்தோடு அழகிய மலர்கள் பூத்த பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய நீல நன்மாமிடற்றானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே நீதியாகும்.
1155 வாருறு கொங்கைநல்ல மடவாள்
திகழ்மார்பி னண்ணும்
காருறு கொன்றையொடுங்
கதநாகம் பூண்டருளிச்
சீருறு மந்தணர்வாழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான்
கழலேத்தல் நீதியே.
1.107.4
கச்சணிந்த தனங்களை உடைய அழகிய உமையம்மை விளங்கும் திருமார்பின்கண் கார்காலத்தே மலரும் கொன்றை மலர் மாலையோடு சினம் பொருந்திய பாம்பை அணிகலனாகப் பூண்டு சிறப்புப் பொருந்திய அந்தணர்கள் வாழும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய கங்கையணிந்த செஞ்சடையனாய் விளங்கும் சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதல் நீதியாகும்.
1156 பொன்றிக ழாமையொடு புரிநூல்
திகழ்மார்பி னல்ல
பன்றியின் கொம்பணிந்து
பணைத்தோளியோர் பாகமாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச்
செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான்
கழலேத்தல் மெய்ப்பொருளே.
1.107.5
திருமகள் விளங்கும் திருமாலாகிய ஆமையினது ஓட்டினோடு முப்புரிநூல் திகழும் மார்பின்கண் நல்ல பன்றியின் கொம்புகளையும் அணிந்து மூங்கில் போன்ற தோளினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்கக் குன்றுகள் போன்ற மாளிகைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் வானில் திகழும் மின்னல் போன்று விளங்கும் செஞ்சடையானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே மெய்ப் பொருளாகும்.
1157 ஓங்கிய மூவிலைநற் சூல
மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு
மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார்
வினையாய பற்றறுமே.
1.107.6
மேம்பட்ட மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய்த் திருமுடியில் தடுத்த கங்கையோடு, பிறையையும் சடையின்கண் அணிந்து, தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் வேர்ப்பற்றோடு நீங்கும்.
1158 நீடலர் கொன்றையொடு நிமிர்புன்
சடைதாழ வெள்ளை
வாட லுடைதலையிற்
பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார்
வினையாய தேயுமே.
1.107.7
கொத்தாக நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களோடு நிமிர்ந்து தோன்றும் சிவந்த சடைகள் தாழ்ந்து தொங்க, வெண்மையான புலால் நீங்கிய தலையோட்டில் பலி ஏற்றுண்ணும் வாழ்க்கையனாய், வெண்காந்தள் மலர்ந்த புதர்களை உடைய வளமான முல்லை நிலங்களால் சூழப்பட்ட கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய பெருமை உடையோனின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் தேய்ந்தொழியும்.
1159 மத்தநன் மாமலரும் மதியும்வளர்
கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல்
துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மேய
தத்துவ னைத்தொழுவார்
தடுமாற் றறுப்பாரே.
1.107.8
செஞ்சடைமீது நல்ல ஊமத்த மலரையும் இளமதியையும் கொத்தாக அலரும் கொன்றை மலருடன் ஒருசேரநெருங்கச் சூடிப் பூங்கொத்துக்கள் அலரும் தண்ணிய பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தத்துவனைத் தொழுவார் தடுமாற்றங்கள் இலராவர்.
1160 செம்பொனின் மேனியனாம் பிரமன்றிரு
மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போ
லொளியாய வாதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மேய
நம்பன தாடொழுவார்
வினையாய நாசமே.
1.107.9
சிவந்த பொன்போன்ற மேனியினன் ஆகிய பிரமனும் திருமாலும் தேடுமாறு பவளத் திரள் போல ஒளி வடிவினனாய் ஓங்கிநின்ற மூல காரணனும், கொம்புகளாகக் கிளைத்து நெருங்கிய மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் நாசமாகும்.
1161 போதியர் பிண்டியரென் றிவர்கள்
புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட்
டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
வேதிய னைத்தொழநும்
வினையான வீடுமே.
1.107.10
போதி மரத்தை வழிபடும் புத்தர், அசோக மரத்தை வழிபடும் சமணர் ஆகியோர் பொய்ந்நூல்களை மேற்கோள்களாகக்காட்டிக் கூறும் புனைந்துரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதி உழல்பவர்களே!, இசை பாடும் குயில்கள் கோதிய தளிர்களோடு கூடிய தண்பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய வேதம் விரித்த சிவபிரானைத் தொழுமின்; நம் வினைகள் யாவும் அழியும்.
1162 அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார்
புகலிந்நகர் பேணும்
தலைமக னாகிநின்ற
தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச்
செங்குன்றூ ரேத்தும்
நலமலி பாடல்வல்லார்
வினையான நாசமே.
1.107.11
அலைகள் மிகுந்த குளிர்ந்த நீரால் சூழப்பட்ட அழகிய புகலி நகரை விரும்பும் தலைமகனாகிய தமிழ் ஞானசம்பந்தன், கொல்லும் தொழிலில் வல்ல மூன்று இலை வடிவான சூலத்தைக் கையில் ஏந்தியவனாய சிவபிரான் எழுந்தருளிய கொடிமாடச் செங்குன்றூரைப் போற்றிப் பாடிய, நலம் மிக்க, இப்பதிகப் பாடல்களை ஓத, வல்லவர்களின் வினைகள் நாசமாகும்.
திருச்சிற்றம்பலம்
1.107.திருக்கொடிமாடச்செங்குன்றூர் |
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|