|
||||||||
முதல் திருமுறை-29 |
||||||||
1.029.திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சித்தநாதேசர்.
தேவியார் - அழகாம்பிகையம்மை.
305 ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
சீரு லாவு மறையோர் நறையூரில்
சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.
1.029.1
நெஞ்சே! ஊர்கள்தோறும் உலாவுவதால் கிடைக்கும் உணவைப் பெற்று, உலகம் பரவக் கங்கை நீரைத் தன் திருமுடியில் ஏற்று, அக்கங்கை நீர் உலாவும் மேல்நோக்கின சிவந்த சடைமுடியினை உடையதலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளிய, சீருடைய மறையவர் வாழும் நகரான நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்தைச் சென்றடைவாயாக.
306 காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
ஓடு கங்கை யொளிர்புன் சடைதாழ
வீடு மாக மறையோர் நறையூரில்
நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே.
1.029.2
நெஞ்சே! காட்டின்கண் முனிவர் குடில்களிலும், நாட்டின்கண் இல்லறத்தார் வீடுகளிலும் விரும்பிப் பலியேற்று, ஓடி வரும் கங்கை தங்கிய ஒளிவீசும் சிவந்த சடைகள் தாழ, தம் உடல்களை விடுத்து, முத்திப்பேற்றை அடைய விரும்பும் அந்தணர் வாழும் நறையூரில், புகழால் நீடிய சித்தீச்சரத்தில் விளங்கும் பெருமானை நினைவாயாக.
307 கல்வி யாளர் கனகம் மழன்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
மல்கு திங்கட் பொழில்சூழ் நறையூரில்
செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.
1.029.3
நெஞ்சமே! பொன்னையும் தீயையும் ஒத்த திருமேனியராய், கங்கை தங்கும் முறுக்கேறிய சிவந்த சடையினை உடையவராய் விளங்கும் சிவபிரானது ஊர், கல்வியாளர் நிறைந்ததாய், திங்கள் தங்கும் பொழில்கள் சூழ்ந்ததாய் விளங்கும் நறையூராகும். அவ்வூரில் செல்வர் வணங்கும் சித்தீச்சரத்தைச் சென்றடைவாயாக.
308 நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
ஆட வல்ல வடிக ளிடமாகும்
பாடல் வண்டு பயிலு நறையூரில்
சேடர் சித்தீச் சரமே தௌநெஞ்சே.
1.029.4
நெஞ்சே! மேல்நோக்கிய நீண்டு வளரவல்ல செஞ்சடைகள் தாழுமாறு ஆடுதலில் வல்ல அடிகளாகிய சிவபிரானது இடம் ஆகிய பாடுதலில் வல்ல வண்டுகள் நிறைந்து வாழும் சோலைவளம் உடைய நறையூரில் பெரியோர் வணங்கித் துதிக்கும் சித்தீச்சரத்தைத் தௌவாயாக.
309 உம்ப ராலு முலகின் னவராலும்
தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
நண்பு லாவு மறையோர் நறையூரில்
செம்பொன் சித்தீச் சரமே தௌநெஞ்சே.
1.029.5
நெஞ்சே! தேவர்களாலும், உலகிடை வாழும் மக்களாலும் தனது பெருமைகளை அளவிட்டுக் கூறுவதற்கு அரியவனாகிய சிவபிரானது ஊராய், நட்புத் தன்மையால் மேம்பட்ட மறையவர்கள் வாழும் திருநறையூரில் சிவபிரான் எழுந்தருளிய செம்பொன்மயமான சித்தீச்சரத்தையே தௌவாயாக.
310 கூரு லாவு படையான் விடையேறி
போரு லாவு மழுவா னனலாடி
பேரு லாவு பெருமா னறையூரில்
சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே.
1.029.6
கூர்மைமிக்க சூலப்படையை உடையவனாய், விடை மீது ஏறிப் போருக்குப் பயன்படும் மழுவாயுதத்தை ஏந்தி, அனல்மிசை நின்றாடி, ஏழுலகிலும் தன் புகழ் விளங்க நிற்கும் சிவபெருமான் திருநறையூரில் விளங்கும் சித்தீச்சரமே நாம் வழிபடற்குரிய இடமாகும்.
311 அன்றி நின்ற வவுணர் புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
ன்றில் வாச மணமார் நறையூரில்
சென்று சித்தீச் சரமே தௌநெஞ்சே.
1.029.7
நெஞ்சே! தன்னோடு வேறுபட்டு நிற்கும் அவுணர்களின் முப்புரங்களையும் எய்தழித்த வெற்றியோடு கூடிய வில்லை உடைய குற்றமற்றவன் விரும்பும் ஊர் ஆகிய, மணம் நிலைபெற்று வீசும் பொது மன்றங்களை உடைய திருநறையூருக்குச் சென்று, அங்குப் பெருமான் எழுந்தருளிய சித்தீச்சரத்தைத் தௌந்து வழிபடுக.
312 அரக்க னாண்மை யழிய வரைதன்னால்
நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரில்
திருக்கொள் சித்தீச் சரமே தௌநெஞ்சே.
1.029.8
நெஞ்சே! இராவணனது வலிமை கெடுமாறு கயிலை மலையால் ஊன்றி அடர்த்த கால் விரலை உடைய சிவபிரான் விரும்புவது, பரவிய புகழாளர் வாழ்வது ஆகிய திருநறையூரில் விளங்கும் சிவபிரானது சித்தீச்சரத்தைத் தௌவாயாக.
313 ஆழி யானு மலரி னுறைவானும்
ஊழி நாடி யுணரார் திரிந்துமேல்
சூழு நேட வெரியா மொருவன்சீர்
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.
1.029.9
நெஞ்சே! சக்கராயுதத்தை உடைய திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், உணராதவனாய், ஓர் ஊழிக்காலம் அளவும் திரிந்து சுற்றும் முற்றும் மேலும் கீழுமாய்த் தேட எரியுருவாய் ஓங்கி நின்ற சிவபெருமானது சிறப்புமிக்க இடமாகிய திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நினைவாய்.
314 மெய்யின் மாசர் விரிநுண் டுகிலிலார்
கையி லுண்டு கழறு முரைகொள்ளேல்
உய்ய வேண்டி லிறைவன் னறையூரில்
செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.
1.029.10
உடம்பின்கண் அழுக்குடையவர்களும், விரித்துக் கட்டும் நுண்ணிய ஆடைகளை அணியாதவர்களும், கைகளில் பலி ஏற்று உண்டு திரிபவர்களுமாகிய சமணர்கள் இடித்துக் கூறும் உரைகளைக் கொள்ளாதீர். நீர் இப்பிறப்பில் உய்தி பெற விரும்பினால், சிவபிரான் எழுந்தருளிய திருநறையூரில் செய்தமைத்த சித்தீச்சரத்தைச் சென்று வழிபடுமின். அதுவே சிறந்த தவமாம்.
315 மெய்த்து லாவு மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச் சரத்தை யுயர்காழி
அத்தன் பாத மணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே.
1.029.11
வாய்மையே பேசி வாழும் மறையவர் வாழும் திருநறையூரின்கண் சித்தன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவபெருமானது சித்தீச்சரத்தை, மேலான காழி மாநகரில் விளங்கும் சிவபிரானது திருப்பாதங்களைத் தனது திருமுடிக்கு அணியாகக் கொண்ட ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடிப்பரவப் பாவங்கள் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
|
||||||||
by Swathi on 29 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|