|
||||||||
முதல் திருமுறை-94 |
||||||||
1.094.திருஆலவாய் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
1014 நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞால மாள்வரே. 1.094.1
நீலநிறம் பொருந்திய கண்டத்தினை உடைய திரு ஆலவாய் இறைவனைச் சென்று தொழுது மனத்தால் அவன் அருகில் இருப்பதாக உணர்பவர்கள், இவ்வுலகை ஆள்வர்.
1015 ஞால மேழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே. 1.094.2
எமபயம் இன்றி வாழ, ஏழுலகங்களிலும் எழுந்தருளியிருக்கும் ஆலவாய் இறைவனது மெய்ப்புகழையே உரையால் போற்றி வருவீர்களாக.
1016 ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே. 1.094.3
கல்லால மர நிழலில் வீற்றிருப்பவரும், காலனுக்குக் காலனாய் அவனை அழித்தருளிய பெருவீரரும் ஆகிய ஆலவாய் இறைவரை மனத்தால் அணுகியிருப்பீர்களாக.
1017 அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே. 1.094.4
ஆலவாய்க் கோயிலிலுள்ள எந்தையாகிய சிவபெருமானுடைய அழிவில்லாத புகழுக்கு இருப்பிடமான திருவடிகளை மனங்கொள்ளுங்கள்.
1018 ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே. 1.094.5
வெற்றியோடு கூடிய ஆனேற்றினானது நான்மாடக்கூடல் என்னும் ஆலவாயின் புகழைப் பாடி மனத்தால் அவ்விறைவனையே நாடி வாழ்வீர்களாக.
1019 அண்ண லாலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ண மின்பமே. 1.094.6
தலைமையாளனும் ஆலவாய் என்னும் மதுரைப் பதியின் கோயிலைப் பொருந்தியிருப்பவனுமாகிய சோமசுந்தரப் பெருமானையே எண்ணித் தொழுதுவரின் இன்பம் பெறுவது திண்ணமாகும்.
1020 அம்பொ னாலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே. 1.094.7
அழகிய பொன்மயமான ஆலவாய்த் திருக்கோயிலில் விளங்கும் இறைவனுடைய திருவடிகளே நமக்குச் சார்வாகும் என நம்பி வாழ்பவரின் துன்பம் நீங்கும்.
1021 அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்க முண்மையே. 1.094.8
அரக்கனாகிய பெருவலிபடைத்த இராவணனைக் கால் விரலால் நெரித்தருளிய ஆலவாய் அரன் புகழை உரைக்கும் உள்ளத்தார்க்கு அவனது கருணை உளதாகும்.
1022 அருவ னாலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே. 1.094.9
அருவனாய் விளங்கும் இறைவன் திருவாலவாயில் திருமால் பிரமர் ஆகிய இருவர் போற்றும் உருவனாய் மருவி ஓங்கி நிற்கின்றான்.
1023 ஆர நாகமாம், சீர னாலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே. 1.094.10
பாம்பாகிய ஆரத்தை அணிந்தவனாய், ஆலவாயில் பெரும் புகழாளனாய் விளங்கும் இறைவன், புத்தரையும் சமணரையும் அழித்த பெருவீரன் ஆவான் என்று அடியவர்கள் அவனைப் புகழ்ந்து போற்றுவார்கள்.
1024 அடிக ளாலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ், செடிக ணீக்குமே. 1.094.11
ஆலவாயில் எழுந்தருளிய அடிகளாகிய இறைவனது திருவருளில் தோய்ந்த ஞானசம்பந்தனின் அழிவற்ற இனிய இத்தமிழ் மாலை நமக்கு வரும் வினைகளைப் போக்குவதாகும்.
திருச்சிற்றம்பலம்
1.094.திருஆலவாய் - திருவிருக்குக்குறள் |
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|