|
||||||||
முதல் திருமுறை-96 |
||||||||
1.096.திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
1036 மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
அன்னி யூரமர், மன்னு சோதியே. 1.096.1
திருஅன்னியூரில் எழுந்தருளிய நிலைபெற்ற ஒளி வடிவினனாகிய சிவன், பிறை சூடிய திருமுடியோடு பல தலங்களிலும் எழுந்தருளியிருந்து, ஆங்காங்குள்ள மக்கட்குத் தலைவனாய் விளங்குபவன்.
1037 பழகுந் தொண்டர்வம், அழக னன்னியூர்க்
குழகன் சேவடி, தொழுது வாழ்மினே. 1.096.2
இறைவன்பால் மனம் ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள். அன்னியூரில் அழகனாகவும் இளமைத் தன்மை உடையவனாகவும் எழுந்தருளியுள்ள சிவபிரானின் செம்மையான திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.
1038 நீதி பேணுவீர், ஆதி யன்னியூர்ச்
சோதி நாமமே, ஓதி யுய்ம்மினே. 1.096.3
நீதியைப் போற்றி அதன்படி வாழ்கின்றவர்களே. அன்னியூரில் விளங்கும் ஒளி வடிவினனாகிய சிவபிரான் திருநாமங்களையே ஓதி உய்வீர்களாக.
1039 பத்த ராயினீர், அத்த ரன்னியூர்ச்
சித்தர் தாள் தொழ, முத்த ராவரே. 1.096.4
இறைவனிடம் பத்திமை பூண்டவர்களே, தலைமையாளனாய் அன்னியூரில் விளங்கும் ஞானவடிவினனின் திருவடிகளைத் தொழுதலால் வினை மாசுகளிலிருந்து விடுபட்டவராவீர்.
1040 நிறைவு வேண்டுவீர், அறவ னன்னியூர்
மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே. 1.096.5
மனநிறைவுடன் வாழ விரும்புகின்றவர்களே, அற வடிவினனாய் நான்கு வேதங்களிலும் பரம்பொருளாகக் கூறப்பட்டுள்ள அன்னியூர்ப் பெருமான் திருவடிகளுக்கு அன்பு செய்து அவனோடு உறவு கொள்வீர்களாக.
1041 இன்பம் வேண்டுவீர், அன்ப னன்னியூர்
நன்பொ னென்னுமின், உம்பராகவே. 1.096.6
உலக வாழ்க்கையில் இன்பங்களை எய்த விரும்பும் அடியவர்களே, அன்பனாக விளங்கும் அன்னியூர் இறைவனை நல்ல பொன்னே என்று கூறுமின், தேவர்களாகலாம்.
1042 அந்த ணாளர்தம், தந்தை யன்னியூர்
எந்தை யேயெனப், பந்த நீங்குமே. 1.096.7
அந்தணர்களின் தந்தையாக விளங்கும் அன்னியூர் இறைவனை எந்தையே என அழைக்க மலமாயைகள் நீங்கும்.
1043 தூர்த்த னைச்செற்ற, தீர்த்த னன்னியூர்
ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே. 1.096.8
காமாந்தகனாகிய இராவணனைத் தண்டித்த புனிதனாகிய அன்னியூர் இறைவனை அடைந்து அன்புக்குரியவனாக அவனைப் போற்றி வாழுங்கள்.
1044 இருவர் நாடிய, அரவ னன்னியூர்
பரவு வார்விண்ணுக், கொருவ ராவரே. 1.096.9
திருமால் பிரமர்களால் அடிமுடி தேடப்பட்ட அரவை அணிகலனாகப் பூண்ட அன்னியூர் இறைவனைப் பரவித் துதிப்பவர் தேவருலகில் இந்திரராவர்.
1045 குண்டர் தேரருக்கு, அண்ட னன்னியூர்த்
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே. 1.096.10
சமணர்களாலும் புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களின் வினைகள் விண்டு போகும்.
1046 பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால்
வேந்த னன்னியூர், சேர்ந்து வாழ்மினே. 1.096.11
பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் ஆய்ந்து சொல்லிய பாடல்களைப் பாடி அன்னியூர் வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து வாழ்வீர்களாக.
திருச்சிற்றம்பலம்
1.096.திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள் |
||||||||
by Swathi on 30 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|