இனி, இதுவே 'மாட்டு' என்னுஞ் செய்யுளுறுப்பின் பயனாமென்பது நுண்ணறிவுடையார்க் கெல்லாம் இனிது விளங்கிக்கிடப்பவும், இதன் கருத்துப் பொருள் இதுவாதல் அறிய மாட்டாத நச்சினார்க்கினியர், செய்யுளில் இடையற்று ஒழுகும் பொருள் ஒழுக்கம் அறிந்து உரை எழுதாராய், ஓர் அடியில் ஒரு சொல்லையுந் தொலைவிற் கிடக்கும் வேறோர் அடியில் வேறொரு சொல்லையுந் தமக்குத் தோன்றியவா றெல்லாம் எடுத்து இணைத்துத் தாமோர் உரை உரைக்கின்றார். நச்சினார்க்கினியர்க்கு முன்னேயிருந்த நக்கீரர், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் முதலான உரையாசிரியன்மாராதல், பின்னேயிருந்த சிவஞானயோகிகள் முதலியோராதல் இவ்வாறு செய்யுட்களைக் கண்டவாறெல்லாம் அலைத்து உரை எழுதக் கண்டிலம். மேலும் நச்சினார்க்கினியர் இங்ஙனஞ் செய்யுட்களை அலைத்து நலிந்து பொருள் சொல்லு முறையை ஆசிரியர் சிவஞானயோகிகள் தாம் இயற்றிய தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் ஆங்காங்கு மறுத்தருளியவாறுங் காண்க. அகன்று கிடக்குஞ் செய்யுட் பொருளை அணுகவைத்துப் பொருத்திச் சொல்வதே தொல்காப்பியனார் கூறிய மாட்டு என்னும் உறுப்பாவதன்றிச் செய்யுள் ஒரு பக்கமும் உரை ஒரு பக்கமுமாக வைத்து உரைப்பது அ·து அன்றாம் என்பது கடைப்பிடிக்க. அற்றன்று, நச்சினார்க்கினியர் உரைக்கும் உரைப்பொருள் சிறந்ததாகலின், அவர் அவ்வாறு செய்யுட்களை அலைத்துப் பொருள் கூறுதல் குற்றமாகாதெனின்; நன்று சொன்னாய், அவர் எவ்வளவு தான் சிறந்த உரை உரைப்பினும் அது செய்யுட்பொருளைக் கௌவிக் கொண்டு செல்லாமல் வேறுபடுமாயின், அது கொள்ளற்பாலதன்று என மறுக்க. செய்யுளுக்கு இசைய உரை யெழுதுதல் வேண்டுமேயன்றி, உரைக்கு ஏற்பச் செய்யுளை அலைத்து மாற்றல் வேண்டுமென்றல் "முடிக்குத் தக்க தலைசெய்து கொள்வேம்" என்பார் சொற்போல் நகையாடுதற்கே ஏதுவாமென்றொழிக. அற்றன்று, செய்யுளியற்றிய புலவரே ஓர் ஒழுங்குமின்றி அவ்வாறு சொற்களையும் பொருள்களையும் சிதற வைத்துப் பாடினாராகலின் அக்கருத்தறிந்து நச்சினார்க்கினியர் அங்ஙனம் பொருளுரைத்துக் கொண்டார் என்னமோ வெனின்; அறியாது கடாயினாய், உலகவியற்கையும், மக்களியற்கையும் அறிந்து, வரிசை வரிசையாக அரும்பொருள் விளங்கித் தோன்றப் பாடும் நல்லிசைப் புலவர் அவ்வாறு ஓரொழுங்கு மின்றிப் பாடினாரென்றல் உலகில் எங்குங் காணப்படாமையானும், அது நல்லிசைப் புலமை ஆகாமை யானும் அங்ஙனஞ் சொல்லுதல் பெரியதோர் இழுக்காய் முடியும் என்றுணர்க.
அற்றாயின், மிக்க செந்தமிழ் நூற் புலமையும் நுணுகிய அறிவுமுடைய நச்சினார்க்கினியர் அவ்வாறு இணங்காவுரை எழுதியதுதான் என்னையோவெனின்; வடமொழியில் இங்ஙனமே செய்யுட்களை அலைத்துப் பாட்டு ஒரு பக்கமும் உரை ஒருபக்கமுமாக இணங்காவுரை எழுதிய சங்கராசிரியர் காலத்திற்குப் பின்னே யிருந்த நச்சினார்க்கினியர், வடமொழியில் அவர் எழுதிய உரைகளைப் பன்முறை பார்த்து அவைபோற் றமிழிலும் உரை வகுக்கப்புகுந்து தமிழ்ச் செய்யுள் வழக்கின் வரம்பழித்து விட்டாரென்றுணர்க. வேதாந்த சூத்திரத்திற்குச் சங்கராசிரியர் இயற்றிய பாடியவுரை அச்சூத்திரத்திற்குச் சிறிதும் ஏலாவுரை என்பது, ஆசிரியர் இராமாநுசர் பாடிய உரையானும் தீபா (Thibaut) பண்டிதர் திருத்திய ஆங்கில மொழிபெயர்ப்பானும் உணர்க.
இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை பொருந்துமிடங்களிலெல்லாம் ஏற்றுக் கோடற்பாலதேயாம் என்பதும், அரிய பெரிய பழந்தமிழ் நூல்கள் விளங்குமாறு விளக்கவுரை விரித்த நச்சினார்க்கினியர் இவ்வாறு ஓரோவிடங்களில் நலிந்துரை எழுதுதல் பற்றி இகழப்படுவாரல்ல ரென்பதும் ஈண்டு வற்புறுத்துகின்றாம். இனி இம் முல்லைப்பாட்டினுரை நச்சினார்க்கினியராற் பெரிதுஞ் செய்யுளை அலைத்து வரையப்பட்டதாகலின், அவருரையின் உதவிகொண்டே இப்பாட்டுக்குச் செவ்வையான வேறொரு புத்துரை பின்னர் எழுதுகின்றாம். அங்கு அதனைக் கண்டுகொள்க.
|