1. கண்ணன் - என் தோழன்
(புன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம்)
வத்ஸல ரசம்
1. பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவ தற்கே - இனி என்ன வழியென்று கேட்கில், உபாயம் இருகணத் தேயுரைப் பான்; - அந்தக் கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு உன்னை யடைந்தேன் என்னில் உபாயம் ஒருகணத் தேயுரைப் பான்.
2. கானகத்தே சுற்று நாளிலு<ம் நெஞ்சிற் கலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ் சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில் தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன் ஊனை வருத்திடு நோய்வரும் போதினில் உற்ற மருந்துசொல் வான்;- நெஞ்சம் ஈனக் கவலைக ளெய்திடும் போதில் இதஞ்சொல்லி மாற்றிடு வான்;
3. பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு பேச்சினி லேசொல்லு வான்; உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன் உண்ணும் வழியுரைப் பான்; அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் அரைநொடிக் குள்வரு வான்; மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன் வாழ்வினுக் கெங்கள்கண் ணன்;
4. கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங் கேலி பொறுத்திடு வான்; எனை ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல் செய்திடு வான்; - என்றன் நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று நான்சொல்லும் முன்னுணர் வான்; அன்பர் கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு கொண்டவர் வேறுள ரோ?
5. உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில் ஓங்கி யடித் திடுவான்; நெஞ்சில் கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு காறி யுமிழ்ந்திட வான்; சிறு பள்ளத்தி லேநெடு நாள்ழு குங்கெட்ட பாசியை யெற்றி விடும் - பெரு வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடு வான்.
6. சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச் சிரித்துக் களித்திடு வான்; நல்ல வன்ன மகளிர் வசப்பட வேபல மாயங்கள் சூழ்ந்திடு வான்; அவன் சொன்ன படி நடவாவிடி லோமிகத் தொல்லை யிழைத்திடு வான்; கண்ணன் தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின் சகத்தினில் வாழ்வதி லேன்.
7. கோபத்தி லெயொரு சொல்லிற் சிரித்துக் குலுங்கிடச் செய்திடு வான்; மனஸ் தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி தழைத்திடச் செய்திடு வான்; பெரும் ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று அதனை விலக்கிடு வான்; சுடர்த் தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந் தீமைகள் கொன்றிடு வான்.
8. உண்மை தவறி நடப்பவர் தம்மை உதைத்து நசுக்கிடுவான்; அருள் வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள் மலைமலை யாவுரைப் பான்; நல்ல பெண்மைக் குணமுடையான்; சில நேரத்தில் பித்தர் குணமுடை யான்; மிகத் தண்மைக் குணமுடை யான் சில நேரம் தழலின் குணமுடை யான்.
9. கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர் குணமிகத் தானுடை யான்; கண்ணன் சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு சூதறி யாதுசொல் வான்; என்றும் நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது நயமுறக் காத்திடு வான்; கண்ணன் அல்லவ ருக்கு விடத்தினில் நோயில் அழலினி லுங்கொடி யான்.
10. காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண்மகிழ் சித்திரத் தில் - பகை மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம் முற்றிய பண்டிதன் காண்; உயர் வேத முணர்ந்த முனிவ ருணர்வினில் மேவு பரம்பொருள் காண்; நல்ல கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன்.
2. கண்ணன் - என் தாய்
(நொண்டிச் சிந்து) 1. உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்; வண்ணமுற வைத்தெனக் கே - என்றன் வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள், கண்ணனெனும் பெயருரடையாள், என்னைக் கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து மண்ணெனுந்தன் மடியில் வைத்தே - பல மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள்.
2. இன்பமெனச் சில கதைகள் - எனக் கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள் துன்பமெனச் சில கதைகள் - கெட்ட தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள். என்பருவம் என்றன் விருப்பம் - எனும் இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே அன்பொடவள் சொல்லிவரு வாள்; அதில் அற்புதமுண் டாய்ப்பர வசமடை வேன்.
3. விந்தைவிந்தை யாக எனக்கே - பல விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்; சந்திரனென் றொரு பொம்மை - அதில் தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும் மந்தை மந்தையா மேகம் - பல வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும் முந்தஒரு சூரியனுண்டு - அதன் முகத்தொளி கூறுதற்கொர் மொழியிலை யே.
4. வானத்து மீன்க ளுண்டு - சிறு மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்; நானத்தைக் கணக்கிடவே - மனம் நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை; கானத்து மலைக ளுண்டு - எந்தக் காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை; மோனத்தி லேயிருக்கும் - ஒரு மொழியுரை யாதுவிளை யாடவருங் காண்.
5. நல்லநல்ல நதிகளுண்டு - அவை நாடெங்கும் ஓடிவிளை யாடி வாருங்காண்; மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும் விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்; எல்லையதிற் காணுவ தில்லை; அலை எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்; ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண்.
6. சோலைகள் காவினங்கள் - அங்குச் சூழ்தரும் பலநிற மணிமலர்கள் சாலவும் இனியனவாய் - அங்குத் தருக்களில் தூங்கிடும் கனிவகைகள் ஞாலமுற்றிலும் நிறைத் தே - மிக நயந்தரு பொம்மைகள் எனக்கென வே; கோலமுஞ் சுவையுமுற - அவள் கோடிபல் கோடிகள் குவித்துவைத் தாள்.
7. தின்றிடப் பண்டங்களும் - செவி தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக ளும், ஒன்றுறப் பழகுதற்கே - அறி வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்; கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக் கொடுநெருப் பாய், அனற் சுவையமு தாய், நன்றியல் காதலுக் கே -இந்த நாரியர் தமையெனைச் சூழவைத் தாள்.
8. இறகுடைப் பறவைக ளும் - நிலந் திரிந்திடும் விலங்குகள் ஊர்வன கள் அறைகடல் நிறைந்திட வே -எண்ணில் அமைத்திடற் கரியபல் வகைப்பட வே சுறவுகள் மீன்வகை கள் - எனத் தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்; நிறைவுற இன்பம்வைத் தாள்; - அதை நினைக்கவும் முழுதி<லுங் கூடுதில்லை.
9. சாத்திரம் கோடி வைத்தாள்; அவை தம்மினும் உயர்ந்ததொர் ஞானம் வைத்தாள்; மீத்திடும் பொழுதினி லே - நான் வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே கோத்தபொய் வேதங்க ளும் - மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும் மூத்தவர் பொய்ந்நடை யும் - இள மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்;
10. வேண்டிய கொடுத்திடு வாள்; அவை விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்; ஆண்டருள் புரிந்திடு வாள்; அண்ணன் அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்; யாண்டுமெக் காலத்தி னும் -அவள் இன்னருள் பாடுநற் றொழில்புரி வேன் நீண்டதொர் புகழ்வாழ் வும் -பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள்.
3. கண்ணன் - என் தந்தை
நொண்டிச் சிந்து
ப்ரதான ரஸம் - அற்புதம்
1. பூமிக் கெனைய னுப்பி னான்; அந்தப் புதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு; நேமித்த நெறிப்படி யே - இந்த நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே போமித் தரைகளி லெல்லாம் - மனம் போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார். சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்கள் தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன்.
2. செவ்வத்திற்கோர் குறையில்லை; எந்தை சேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை; கல்வியில் மிகச் சிறந்தோன் - அவன் கவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை; பல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு; நல்வழி செல்லு பவரை - மனம் நையும்வரை சோதலைசெய் நடத்தை யுண்டு.
3. நாவு துணிகுவ தில்லை - உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே; யாவருந் தெரிந்திடவே - எங்கள் ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு. மூவகைப் பெயர் புனைந்தே - அவன் முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்; தேவர் குலத்தவன் என்றே - அவன் செய்திதெரி யாதவர் சிலருரைப்பார்.
4. பிறந்தது மறக் குலத்தில்; அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்; சிறந்தது பார்ப்பனருள்ளே; சில செட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு; நிறந்தனிற் கருமை கொண்டான்; அவன் நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்! துறந்த நடைக ளுடையான் - உங்கள் சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.
5. ஏழைகளைத் தோழமை கொள்வான்; செல்வம் ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்; தாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத் தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்; நாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு நாளிலிருந்த படிமற்றோர் நாளினி லில்லை. பாழிடத்தை நாடி யிருப்பான் - பல பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான்.
6. இன்பத்தை இனிதென வும் - துன்பம் இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை; அன்பு மிகவுடையான் - தெளிந் தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே, வன்புகள் பல புரிவான்; ஒரு மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்; முன்பு விதித்த தனையே - பின்பு முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான்.
7. வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை; வேதங்க ளென்று புவியோர் சொல்லும் வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை; வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன் வேதத்திற் சிலசில கலந்ததுண்டு; வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம்.
8. நாலு குலங்கள் அமைத்தான்; அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர், சீலம் அறிவு தருமம் - இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்; மேலவர் கீழவ ரென்றே - வெறும் வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம் போலிச் சுவடியை யெல்லாம் - இன்று பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான்.
9. வயது முதிர்ந்து விடினும் - எந்தை வாலிபக் களையென்றும் மாறுவதில்லை; துயரில்லை; மூப்பு மில்லை - என்றும் சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை; பயமில்லை, பரிவொன்றில்லை, எவர் பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.
10. துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத் தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்; அன்பினைக் கைக்கொள் என்பான்; துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்; என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில் ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்; இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும் இன்பமிகத் தருவதில் இன்ப முடையான்.
4. கண்ணன் - என் சேவகன்
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார் வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார் ஏனடா நீ நேற்றைக் கிங்குவர வில்லை யென்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்; வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார் 5 பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார் ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார் தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார் உள்வீட்டுச் செய்தி யெல்லாம் ஊரம் பலத்துரைப்பார் எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார். 10
சேவகரால் பட்ட சிரமமிக வுண்டு கண்டீர்; சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில் எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்; மாடு கன்றுமேய்த்திடுவேன், மக்களைநான் காத்திடுவேன்; 15
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்; சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்; சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்; காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானா<லும்; 20
இரவிற் பகலிலே எந்நேர மானா<லும் சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்; கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே! ஆன பொழுதுங்கோலடி குத்துப்போர் மற்போர் 25
நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன் என்று பலசொல்லி நின்றான். ஏதுபெயர்? சொல் என்றேன் ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலு<ள்ளோர் என்னை என்றான். கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்ல குணம் ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் - ஈங்கிவற்றால்; 30
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன், மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய் கூலியென்ன கேட்கின்றாய்? கூறு கென்றேன். ஐயனே! தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் 35
ஆன வயதிற் களவில்லை; தேவரீர் ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை யென்றான். பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே கண்டு மிகவும் களிப்புடனே நானவனை 40
ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப் பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என்குடும்பம் 45
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன் வீதி பெருக்குகிறான்; வீடுசுத்த மாக்குகிறான் தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான் மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய் ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் 50
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோவந்தான், இடைச்சாதியென்று சொன்னான். 55
இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்துவிட்டேன்! கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், 60
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்! கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்ணனெனை யாட் கொள்ளக் காரணமும் உள்ளனவே!
|