அருணகிரியாரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது. இங்குள்ள மூலவரின் மறு பெயர் காங்கேயன்.மூலஸ்தானத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். சன்னதி முன் மண்டபத்தில் அருணகிரியார் இருக்கிறார். இவருக்கு தனி வாசலும், துவாரபாலகர்களும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு வருபவர்கள் முதலில் அருணகிரியாரை தரிசித்து விட்டு அதன்பின்பே, முருகனை தரிசிக்கிறார்கள்.
இங்குள்ள விநாயகர் சுந்தர விநாயகர் எனப்படுகிறார். இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது.பிரகாரத்தில் விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், நவவீரர்கள், நால்வர், சரஸ்வதி, லட்சுமி, வீரபத்திரர், நாகர், பைரவர் என பரிவார தெய்வங்கள் இருக்கின்றன. முருகனுக்கான ஸ்மித்ர சண்டிகேஸ்வரருக்கும் சன்னதி இருக்கிறது. காங்கேயனாகிய முருகன் அருளும் தலம் என்பதால் இவ்வூர், "காங்கேய நல்லூர்' என்றழைக்கப்படுகிறது.
சித்திரை பிறப்பின்போது, முருகன் வடக்கு கோபுரத்தின் கீழ் எழுந்தருளி காட்சி தருகிறார். வடக்கு, குபேர திசை என்பதால் அன்று வடதிசை நோக்கிய முருகனைத் தரிசித்தால் வருடம் முழுதும் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பதன் அடிப்படையில் இவ்வாறு எழுந்தருளுகிறார். |