|
||||||||
நான்காம் திருமுறை-12 |
||||||||
4.012.திருப்பழனம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
114 சொன்மாலை பயில்கின்ற
குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு
பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கண்
முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பனென்
புதுநலமுண் டிகழ்வானோ.
4.012.1
சொல் வரிசையைத் தவறாமல்கூவுகின்ற குயில் இனங்களே! பல வரிசையாக உள்ள கோடுகள் பொருந்திய வண்டுகள் பண்பாடும் திருப்பழனத்தை உகந்தருளியிருப்பவனாய், மாலையின் முற்பகுதியில் ஒளிவீசும் பிறை விளங்கும் சடைமுடியைத் தலையில் உடையவனாய்ப் பொன் போன்ற கொன்றை மாலையை மார்பில் அணிந்த எம்பெருமான் என்னுடைய கன்னிஇள நலத்தை நுகர்ந்து பின் என்னை இகழ்ந்து புறக்கணிப்பானோ? தூது சென்று எம்பெருமானிடம் என் நிலையைச் சொல்லுங்கள்.
115 கண்டகங்காள் முண்டகங்காள்
கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான்
பாட்டோவாப் பழனத்தான்
வண்டுலாந் தடமூழ்கி
மற்றவனென் றளிர் வண்ணம்
கொண்டநா டானறிவான்
குறிக்கொள்ளா தொழிவானோ.
4.012.2
நீர் முள்ளிகளே! கடல் முள்ளிகளே! தாழைகளே! நெய்தல்களே! பண்டரங்கத் கூத்திற்கு உரிய வேடத்தானாய். பாட்டுக்கள் நீங்காத திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான், வண்டுகள் உலாவுகின்ற குளத்தில் யான் மூழ்க என்னைக் காப்பதற்காகத தானும் குளத்தில் குதித்து என்னைக் கரைசேர்த்தபோழ்து அவன என் தளிர்போன்ற வண்ணத்தை அனுபவித்த அந்நாளை, தான் நினைவில் வைத்திருப்பவள் ஆதலின் என்னைத் தன் அடியவளாக ஏற்றுக்கொள்ளாது என்னைத் தனித்து வருந்துமாறு விடுபவனல்லன்.
116 மனைக்காஞ்சி யிளங்குருகே
மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைம்மா வுரிபோர்த்தான்
பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லா
முரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள்
சொற்றூதாய்ச் சோர்வாளோ.
4.012.3
வீட்டுக்கொல்லையில் வளர்க்கப்பட்ட காஞ்சி மரத்தில் தங்கியிருக்கும் இளைய நாரையே! மறந்தாயோ! பிரகாசிக்கின்ற வண்டே! மதம் பொழியும் முகத்தை உடையதாய்ப் பனை போலும் திரண்டு உருண்ட பருத்த துதிக்கையை உடைய யானைத் தோலை மேலே போர்த்தவனாய்ப் பலரும் பாடும் திருப்பழனத்து எம்பெருமான் நினைக்கின்ற நினைவை எல்லாம் அறிந்து வந்து என்னிடம் கூற மாட்டாயா? என் தூதாகச் சென்ற என் தோழி அவன்பால் தான் கொண்ட காதலால் தூது சொல்லவேண்டிய செய்தியை நெகிழவிட்டுவிட்டாளோ?
117 புதியையா யினியையாம்
பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று
பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை
மதித்திட்ட மதிகங்கை
விதியாள னென்னுயிர்மேல்
விளையாடல் விடுத்தானோ.
4.012.4
புதிய இனிய பூமணம் கமழும் தென்றல் காற்றே! சுடுகாட்டைத் தன் இருப்பிடமாகக் கொண்டு பலரும் புகழும் பழனத்தானாய், தன்னை மதியாத தக்கனும் மற்றவரும் செய்தவேள்வியை ஒரு பொருளாகக் கொண்டு அழித்த, விதியைத் தன் இட்டவழக்காக ஆள்கின்ற பெருமான், என் உயிருடன் விளையாடுகின்றானோ?
118 மண்பொருந்தி வாழ்பவர்க்கும்
மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும்
வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த விசைபாடும்
பழனஞ்சே ரப்பனையென்
கண்பொருந்தும் போதத்துங்
கைவிடநான் கடவேனோ.
4.012.5
இம்மண்ணுலகில் பொருந்தி இம்மை இன்பமே கருதி வாழ்கின்றவருக்கும் மேம்பட்ட தூய்மையை உடைய வேதியர்க்கும் வானத்தில் இருக்கும் தேவர்களுக்கும் துன்ப வீடும் இன்பப் பேறுமாய் நிற்பவனாய், சான்றோர்கள் பண்ணொடு பொருந்த இசைபாடும் திருப்பழனத்தில் உறையும் என் தலைவனை யான் உயிர்போய்க் கண் மூடும் நேரத்திலும் கைவிடக் கூடியவனோ?
119 பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போ
யிரைதேரும்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ
தறியேனான்
அங்கோல வளைகவர்ந்தா னணிபொழில்சூழ்
பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா
தொழிவானோ.
4.012.6
மிக்க வெள்ளத்தை உடைய பெரிய கடலில் அலைகளின் பின்னே பின்னே சென்று இரையாகிய மீன்களை ஆராயும் சிவந்த கால்களையும் வெண்ணிறத்தையும் உடைய இளைய நாரையே! அடியேன் இனிச் செய்யும் திறன் அறியேன். என்னுடைய அழகிய திரண்ட வளையல்களைக் கவர்ந்தவனாகிய, அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான் தன்னுடைய அழகிய நறிய கொன்றைப் பூமாலையை அருளாது அடியேனைக் கைவிடுவானோ?
120 துணையார முயங்கிப்போய்த்
துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான்
பாட்டோவாப் பழனத்தான்
கணையார விருவிசும்பிற்
கடியரணம் பொடிசெய்த
இணையார மார்பனென்
னெழினலமுண் டிகழ்வானோ.
4.012.7
துணையானபேட்டினைத் தழுவிச் சென்று நீர்த்துறையை அடையும் இளைய நாரையே! முரசங்களின் ஆரவாரமும் பாடல்களின் ஒலியும் நீங்காத திருப்பழனத்தில் உறைபவனாய், அம்பினால் வானத்தில் இயங்கிய காவலை உடைய மும்மதில்களையும் அடியோடு பொடியாக்கியவனும், முடிக்கப்படாமல் இரு பக்கமும் தொங்கவிடப்படும் மாலையை அணிந்த மார்பினை உடையவனுமான எம்பெருமான், என் அழகையும் இனிமையையும் நுகர்ந்து பின் என்னை அலட்சியம் செய்வானோ?
121 கூவைவாய் மணிவரன்றிக்
கொழித்தோடுங் காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப்
பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன்
கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள்
போகாத பொழுதுளதே.
4.012.8
திரளாக உள்ள மணிகளை வாரிக் கரையிலே சேர்த்துப் பெருகி ஓடிக்கொண்டிருக்கும் காவிரிப் பாவையின்கண் முத்துக்கள் விளங்குமாறு மகளிர் பாய்ந்து நீராடும் திருப்பழனத்தை உடையவனாய், கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை உடைய பார்வதியின் கேள்வனாய், உள்ள எம்பெருமானுடைய காளை எழுதிய கொடியாடை மேலே உள்ள மழலைபோல் இனிமையாகப் பேசும் பூவைகளே! எம்பெருமானுடைய பிரவாற்றாமல் அடியேனுக்குப் பொழுது ஒவ்வொரு கணமும் ஓர் ஊழியாய் நீண்டு, கழியாது துன்புறுத்துகின்றது.
122 புள்ளிமான் பொறியரவம்
புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் றொழுதேத்த
விருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கு
மென்றுரைப்ப ருலகெல்லாம்
கள்ளியே னானிவர்க்கென்
கனவளையுங் கடவேனோ.
4.012.9
புள்ளிகளை உடைய மானே! படப்புள்ளிகளை உடைய பாம்பே! அன்னப் பறவையின் உருவத்தை எழுதிய கொடியை உயர்த்திய பிரமனும், படங்களை உடைய திருஅனந்தாழ்வானைப் படுக்கையாக உடைய திருமாலும், தொழுது துதிக்குமாறு பழனத்தில் உறையும் எம்பெருமான் தன்னைத் தியானிப்பவருடைய வினைகளைப் போக்கி இன்பம் அருளுவான் என்று உலகோர் கூறுகின்றனர். உள்ளத்தில் கள்ளத் தன்மையை உடைய அடியேன் வினை தீரப் பெறாமையே அன்றி இத்தலைவனுக்கு என் கனமான வளையல்களையும் இழக்கும் நிலையேன் ஆவேனோ?
123 வஞ்சித்தென் வளைகவர்ந்தான்
வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம்
பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய
வழலோம்பு மப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற
சேவடியாய் கோடியையே.
4.012.10
அஞ்சிப்போய்க் கலியின் துயரம் நீங்குமாறு முத்தீயை ஓம்பும் அப்பூதியின் குடுமிக்குத் தாமரைப் பூவாக இருக்கும் சிவந்த அடிகளை உடைய கூடல் தெய்வமே! என் வளைகளை வஞ்சித்துக் கவர்ந்த, செம்பஞ்சு போன்ற சிவந்த கால்களையும் வெண்சிறகுகளையும் உடைய அன்னப் பறவைகள் பரவி ஆரவாரிக்கும் பழனத்து எம் பெருமான் அடியேனுக்கு அருள் செய்ய வாரானே என்றாலும், கூடல் சுழியின் இரண்டு முனைகளும் இணைந்து ஒன்று சேருமாறு செய்வாயாக.
திருச்சிற்றம்பலம்
4.012.திருப்பழனம் |
||||||||
by Swathi on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|