|
||||||||
நான்காம் திருமுறை-25 |
||||||||
4.025.திருவதிகைவீரட்டானம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
249 வெண்ணிலா மதியந் தன்னை
விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்றங்
குணர்வினுக் குணரக் கூறி
விண்ணிலார் மீயச் சூரார்
வேண்டுவார் 1வேண்டி லார்க்கே
அண்ணியார் பெரிதுஞ் சேயா
ரதிகைவீ ரட்ட னாரே.
4.025.1
தேவருலகிலும் இருப்பதோடு, நிலவுலகில் மீயச்சூர் முதலிய திருத்தலங்களில் உறைபவராய், தம்மை விரும்புபவருக்கு அண்மையில் உள்ளவராய், வேண்டாதவருக்குப் பெரிதும் தொலைவில் உள்ளவராய் விளங்கும் பெருமானார், வெள்ளிய ஒளிவீசும் பிறையை அது விரும்புமாறு விரிசடையிற் சூடி, அடியேன் உள்ளத்திலே ஞானஒளி நிலவப்புகுந்து நின்று, அவ்விடத்தில் உணர்விற்குப் பொருந்துமாறு உணர்த்த வேண்டியவற்றை உணர்த்தி, அதிகை வீரட்டத்தில் உள்ளார்.
250 பாடினார் மறைக ணான்கும்
பாயிருள் புகுந்தென் னுள்ளம்
கூடினார் கூட லால
வாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடன் மேவிச்
சூழ்சுடர் சுடலை வெண்ணீ
றாடினா ராடன் மேவி
யதிகைவீ ரட்ட னாரே.
4.025.2
கூடல் நகர ஆலவாய்க் கோயிலிலுள்ள பெருமான் நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு நறிய கொன்றை மாலையை விரும்பிச் சூடி, சுடுகாட்டின் ஒளிவீசும் சாம்பல் பூசி, திரிபுரத்தை அழிக்குந் திருவிளையாடலை விரும்பி அதிகை வீரட்டத்தில் தங்கியவராய், பரந்த ஆன்மிக இருளிலே நுழைந்து வந்து, அடியேனுடைய உள்ளத்தை அடைந்தார்.
251 ஊனையே கழிக்க வேண்டி
லுணர்மின்க ளுள்ளத் துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு
சிந்தையுட் சிந்திக் கின்ற
ஏனைய பலவு மாகி
யிமையவ ரேத்த நின்று
ஆனையி னுரிவை போர்த்தா
ரதிகைவீ ரட்ட னாரே.
4.025.3
உடம்பு எடுத்தலாகிய பிறவித்துயரை அடியோடு போக்க விரும்பினால், உள்ளத்துள்ளே நினைக்கும் எல்லா எண்ணங்களிலும் உறைபவராய், வண்டுகள் வருந்துமாறு மலர்களைக் கைகளில் கொண்டு தேவர்கள் துதிக்குமாறு, யானைத் தோலைப் போர்த்தி நின்று, அதிகை வீரட்டத்தில் காட்சி வழங்கும் பெருமானாரை உள்ளத்துள்ளே தியானித்து உணருங்கள்.
252 துருத்தியாங் குரம்பை தன்னிற்
றொண்ணூற்றங் கறுவர் நின்று
விருத்திதான் றருக வென்று
வேதனை பலவுஞ் செய்ய
வருத்தியால் வல்ல வாறு
வந்துவந் தடைய நின்ற
அருத்தியார்க் கன்பர் போலு
மதிகைவீ ரட்ட னாரே.
4.025.4
தோல்துருத்தி போன்ற உடம்பிலே தொண்ணுற்றாறு தத்துவங்களும் தாத்துவிகங்களும் உறைவிடங்கொண்டு தங்கள் வாழ்வுக்கு உரிய பொருள்களை அளிக்க வேண்டுமென்று பல துயரம் செய்யுமாறு உயிரினங்களை வருத்துவதனாலே, தம்மால் இயன்றளவு பெருமானாகிய தம்மை நாடி வந்து அடைந்த விருப்பினை உடைய அடியவர்பால் அதிகை வீரட்டனார் தாமும் அன்பராய் உதவுகிறார்.
253 பத்தியா லேத்தி நின்று
பணிபவர் நெஞ்சத் துள்ளார்
துத்தியைந் தலைய நாகஞ்
சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை
யுமையவ ணடுங்க வன்று
அத்தியி னுரிவை போர்த்தா
ரதிகைவீ ரட்ட னாரே.
4.025.5
பத்தியோடு வணங்கும் மெய்யன்பர் சித்தத்தில் நிலையாக உள்ளவரும், படப்பொறிகளை உடைய ஐந்தலை நாகத்தைப் பரந்த சடைமுடியின்மேல் சூடி, வடக்கிலுள்ள இமய மலையரசன் மகளான உமாதேவி நடுங்குமாறு யானைத் தோலைப் போர்த்தியவரும் அதிகை வீரட்டனாரே.
254 வரிமுரி பாடி யென்றும்
வல்லவா றடைந்தும் நெஞ்சே
கரியுரி மூட வல்ல
கடவுளைக் காலத் தாலே
சுரிபுரி விரிகு ழ(ல்)லா
டுடியிடைப் பரவை யல்குல்
அரிவையோர் பாகர் போலு
மதிகைவீ ரட்ட னாரே.
4.025.6
நெஞ்சே! சுருண்ட கடைகுழன்ற விரிந்த கூந்தலினளாய்த் துடிபோன்ற இடையினளாய்க் கடல்போன்ற அல்குலை உடைய பார்வதி பாகராய் அதிகை வீரட்டராய் யானைத் தோலைப் போர்த்திய கடவுளாய் விளங்குகிறார் அதிகை வீரட்டனார். அவரை என்றும் வரிப்பாடல்களையும் முரிப்பாடல்களையும் பாடிக் கொண்டு நம்மால் இயன்றவாறு அடையக் கடவோம்.
255 நீதியா னினைசெய் நெஞ்சே
நிமலனை நித்த மாகப்
பாதியா முமைதன் னோடும்
பாகமாய் நின்ற வெந்தை
சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச்
சுண்ணவெண் ணீறதாடி
ஆதியு மீறு மானா
ரதிகைவீ ரட்ட னாரே.
4.025.7
நெஞ்சே! பார்வதி பாகராய்ச் சோதியாய், ஒளிவிடும் ஞானதீபமாய் நின்ற எம் பிதாவும், திருநீறு பூசி உலகுக்கெல் லாம் ஆதியும் அந்தமுமாக உள்ளவரும் அதிகை வீரட்டனாவார். அத்தூயோரை நாடோறும் முறைப்படி தியானம் செய்வாயாக.
256 எல்லியும் பகலு மெல்லாந்
துஞ்சுவேற் கொருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில்
புக்கனர் காம னென்னும்
வில்லியங் கணையி னானை
வெந்துக நோக்கி யிட்டார்
அல்லியம் பழன வேலி
யதிகைவீ ரட்ட னாரே.
4.025.8
வில்லையும் அம்புகளையும் உடைய மன்மதன் வெந்து விழும்படி நோக்கியவர், அல்லிச் செடிகள் களையாக நிறைந்த வயல்களை உடைய அதிகை வீரட்டனார். ஒப்பற்றவரான அப்பெருமான் செயற்பாடு ஏதும் இன்றி இரவும் பகலும் கழிக்கும் அடியேன் பக்கல்வந்து அடியேனுடைய அற்பமான மனமாகிய கோயிலிலே புகுந்து விட்டார்.
257 ஒன்றவே யுணர்தி ராகி
லோங்காரத் தொருவ னாகும்
வென்றவைம் புலன்க டம்மை
விலக்குதற் குரியீ ரெல்லாம்
நன்றவ னார ண(ன்)னு
நான்முக னாடிக் காண்குற்
றன்றவர்க் கரியர் போலு
மதிகைவீ ரட்ட னாரே.
4.025.9
பெரியோனாகிய திருமாலும், பிரமனும் தேடிக் காண முயன்ற அன்று அவர்களுக்குக் காண்டற்கு அரியவரான அதிகை வீரட்டனார், ஐம்புலன்களையும் வென்று விலக்குதற்குரிய நீங்கள் எல்லீரும் மனம் பொருந்தித் தியானிப்பீராயின் ஓங்காரத்தில் உள்ளே உள்ள மெய்ப்பொருளாக உங்களுக்குக் காட்சி வழங்குவார்.
258 தடக்கையா லெடுத்து வைத்துத்
தடவரை குலுங்க வார்த்துக்
கிடக்கையா லிடர்க ளோங்கக்
கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரல்தான்
முருகமர் கோதை பாகத்
தடக்கினா ரென்னையாளு
மதிகைவீ ரட்ட னாரே.
4.025.10
என்னை அடியவனாக்கிக் கொண்ட அதிகை வீரட்டனார், பெரிய கயிலை மலை நடுங்குமாறு ஆரவாரித்து நீண்ட கைகளால் பெயர்க்க முயன்ற இராவணன் அதன் கீழகப்பட்டுத் துன்பங்கள் மிகுந்து விளக்கமானமண மணிமுடிகள் நசுங்கி அவலமுறுமாறு தம் திருவடிப் பெருவிரலைச் சற்றே வளைத்து ஊன்றினார். அவரே நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை இடப்பாகமாக அடக்கியவரும் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
4.025.திருவதிகைவீரட்டானம் |
||||||||
by Swathi on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|