|
||||||||
நான்காம் திருமுறை-31 |
||||||||
4.031.திருக்கடவூர்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர்.
தேவியார் - அபிராமியம்மை.
304 பொள்ளத்த காய மாயப்
பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில்
விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி
யுணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலுங்
கடவூர்வீ ரட்ட னாரே.
4.031.1
துவாரங்கள் பல உடைய உடம்பெனும் மாயப் பண்டங்களாயப் போகந்தரும் சாதனங்களான மாதர் தொகுதியில் ஏற்படும்பற்றை அறவொழிக்க வேண்டில் சிவபெருமானுக்குத் தீபம் ஏற்றித் தூபம் இட்டு வழிபடும் திருத்தொண்டுகளை விரும்பி மேற்கொள்ளுங்கள். உள்ளமாகிய தகழியிலே உயிராகிய திரியை முறுக்கியிட்டு ஞானமாகியதீபமேற்றிக் கொண்டிருந்து உணருமாற்றால் உணரவல்லவர்களின் கொடுமைகள் அனைத்தையும் போக்குவர் திருக்கடவூர்ப் பெருமான்.
305 மண்ணிடைக் குரம்பை தன்னை
மதித்துநீர் மைய லெய்தில்
விண்ணிடைத் தரும ராசன்
வேண்டினால் விலக்கு வாரார்
பண்ணிடைச் சுவைகள் பாடி
யாடிடும் பத்தர்க் கென்றும்
கண்ணிடை மணியர் போலுங்
கடவூர்வீ ரட்ட னாரே.
4.031.2
இந்நிலவுலகிலே உமக்கக் கிட்டியுள்ள மனித உடம்பாகிய கூட்டினைப் பெருமையாகக் கருதி நீங்கள் மயக்கந்தரும் இவ்வுலக வாழ்வில் ஈடுபடுவீராயின், யமலோகத்திலுள்ள தருமராசர் உம் உடம்பிலிருந்து உயிரைப் பிரிக்கவிரும்பினால் அதனை அப்பொழுது தடுக்க வல்லவர் யாவர் உளார்? பண்களோடு சுவையாக எம்பெருமான் புகழைப்பாடிக் கூத்தாடும் அடியவர்களுக்கெல்லாம் கண்மணியைப் போன்றிருந்து அவர்கள் உய்ய வழிகாட்டுகிறார் கடவூர் வீரட்டனார்.
306 பொருத்திய குரம்பை தன்னுட்
பொய்நடை செலுத்து கின்றீர்
ஒருத்தனை யுணர மாட்டீ
ருள்ளத்திற் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறு தன்னை
வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினி லிருப்பர் போலுங்
கடவூர்வீ ரட்ட னாரே.
4.031.3
உயிரைத் தன்னுள் பொருந்தச் செய்த மனித உடம்பில் இருந்து பொய்யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர். உணர வேண்டிய ஒப்பற்ற கடவூர் வீரட்டராகிய அவரை உணர்ந்து, பெருமானாரை உணராதீராய் மனத்தில் ஏற்பட்டுள்ள தீங்கான எண்ணங்களை நீக்காதீராய் உள்ளீர். தம்மைத் துன்புறுத்தும் ஐம்பொறிகளாகிய களிறுகளைச் செயற்படாதொழியச் செய்யும் வழியிலே முயன்று அவற்றை அடக்கிய ஞானியருடைய கருத்தில் எப்போதும் உள்ளார் கடவூர் வீரட்டனார்.
307 பெரும்புலர் காலை மூழ்கிப்
பித்தர்க்குப்பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்
கார்வத்தையுள்ளே வைத்து
விரும்பிநல்விளக்குத் தூபம்
விதியனா லிடவல்லார்க்குக்
கரும்பினிற் கட்டிபோல் வார்
கடவூர்வீ ரட்ட னாரே.
4.031.4
வைகறையாமத்தில் நீராடிப் பெருமானிடத்தில் பத்தர்களாகி அரும்புகளையும் மலர்களையும் முறைப்படி பறித்துக் கொண்டு உள்ளத்தில் அன்பை ஆக்கி விருப்பத்தோடு நல்ல விளக்குகளையும் தூபங்களையும் முறைப்படி இட்டு வழிபடவல்ல அடியவர்களுக்குக் கருப்பங்கட்டி போல இனிப்பவராவார் கடவூர் வீரட்டனார்.
308 தலக்கமே செய்து வாழ்ந்து
தக்கவா றொன்று மின்றி
விலக்குவா ரிலாமை யாலே
விளக்கத்திற்கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தி னுள்ளே
காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்கு கின்றேன்
கடவூர்வீ ரட்ட னீரே.
4.031.5
கடவூர் வீரட்டனீரே! நாணத்தக்க செயல்களையே செய்து வாழ்நாளைக் கடத்தி, ஏற்ற செயல் எதுவும் செய்யாமல், தவறு செய்வதைத் தடுத்து நல்வழிப்படுத்துவாரும் ஒருவரும் இல்லாமையால், செஞ்சுடர் விளக்கத்தில்தானே கூவித் தானே அடங்கும் கோழியைப் போல உள்ளேன். என் மனத்தினுள்ளே ஐம்பொறிகளும் கலக்கத்தைத் தருகின்றன. யமனுடைய ஏவலர்கள் வந்து கலக்குதலால்யான் யம பயத்தாற் கலங்குகின்றேன்.
309 பழியுடை யாக்கை தன்னிற்
பாழுக்கே நீரிறைத்து
வழியிடை வாழ மாட்டேன்
மாயமுந் தௌய கில்லேன்
அழிவுடைத் தாய வாழ்க்கை
யைவரா லலைக்கப் பட்டுக்
கழியிடைத் தோணி போன்றேன்
கடவூர்வீ ரட்ட னீரே.
4.031.6
கடவூர் வீரட்டனீரே! குறைபாடுகள் யாவும் உள்ள இந்த உடம்பாகிய பயன் அற்ற பாழ் நிலத்தில், பயன்படும் நீரை வீணாகப்பாய்ச்சி, நேரிய வழியில் வாழ மாட்டாதேனாய், இவ்வுலக வஞ்சனையை உள்ளவாறு தௌந்து உணரமாட்டேனாய், பாழாகும் வாழ்க்கையை உடைய ஐம்பொறிகளால் பலவாறாக வருத்தப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலையும் தோணி போல உள்ளேன்.
310 மாயத்தை யறிய மாட்டேன்
மையல்கொண்மனத்த னாகிப்
பேயொத்துக் கூகை யானேன்
பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
நேயத்தா னினைய மாட்டே
னீதனேன் நீசனே னான்
காயத்தைக் கழிக்க மாட்டேன்
கடவூர்வீ ரட்ட னீரே.
4.031.7
தலைக்கோலம் அணிந்தவனே! பிறப்பில்லாதவனே! கடவூர் வீரட்டனே! பொய்ப்பொருளைப் பொய்ப்பொருள் என்று அறியமாட்டாதேனாய் மயக்கம் பொருந்திய மனத்தேனாகிப் பேயை ஒத்து அலைந்துதிரிந்து, கோட்டானைப் போலத் தௌவின்றிக் கலங்குகிறேன். அன்போடு உன்னைத் தியானிக்க ஆற்றல் இல்லாத, கீழாருள் கீழேனாகிய அடியேன், இவ்வுடம்பை இழப்பதற்கும் மனம் இல்லாதேனாய் உள்ளேன்.
311 பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து
பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா
ரென்னுங்கட் டுரையோடொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால்
ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ
ரட்டனீரே.
4.031.8
கடவூர் வீரட்டனீரே! சிவனடிப் பற்றில்லா வாழ்க்கை வாழ்ந்து பயனற்ற பாழ் நிலத்துக்கு நீர் இறைப்பாரைப் போல அறிவு ஆற்றல்களை வீணாக்கிவிட்டேன். அனுபவித்தால் தான் கீழ்மக்களுக்கு உண்மை புலப்படும் என்னும் பொருள் பொதித்த வார்த்தைக்கு இலக்கியமாக உள்ளேன். யான் எதற்காக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! யான் யாது செய்ய வல்லேன்! ஐம்பொறிகள் வசப்பட்டு வருந்தும் துயரத்தாலே ஞானநூல்களை ஞானதேசிகர்பால் உபதேச முறையில் கற்கவில்லை. ஆதலின் அடியேனுக்குப் பற்றுக் கோடாக இருப்பார் ஒருவரையும் காணேன்.
312 சேலினே ரனையகண்ணார் திறம்விட்டுச்
சிவனுக்கன்பாய்ப்
பாலுநற் றயிர்நெய்யோடு பலபல
வாட்டியென்றும்
மாலினைத் தவிர நின்ற
மார்க்கண்டற் காக வன்று
காலனை யுதைப்பர் போலுங்
கடவூர்வீ ரட்ட னாரே.
4.031.9
கடவூர் வீரட்டனார், சேல்மீன் போன்ற கண்களை உடைய மகளிரிடம் ஈடுபடும் செயலை விடுத்துச் சிவபெருமானுக்கு அன்பனாய் எம்பெருமானை பஞ்சகவ்வியம் முதலியவற்றால் அபிடேகித்து உலக மயக்கத்தைப் போக்கிச் சிவ வழிபாட்டில் நிலை பெற்ற மார்க்கண்டேயனுக்காகக் கூற்றுவனை உதைத்தவர்.
313 முந்துரு விருவ ரோடு
மூவரு மாயி னாரும்
இந்திர னோடு தேவ
ரிருடிக ளின்பஞ் செய்ய
வந்திரு பதுக டோளா
லெடுத்தவன் வலியை வாட்டிக்
கந்திரு வங்கள் கேட்டார்
கடவூர்வீ ரட்ட னாரே.
4.031.10
ஐந்தொழிற் கருத்தாக்கள் நிரலில் முற்படக் கூறப்படும் அயன், அரி எனும் இருவருடன் உருத்திரன், மகேசன், சதாசிவன் என்போரும் கூடி அமையும் ஐவராகவும் தாம் ஒருவரே இருந்து கொண்டு, இந்திரனும் தேவர்களும் முனிவர்களும் தம்மை வழிபட்டு இன்பத்தை விளைக்கவும், கயிலையை நெருங்கி வந்து அதனை இருபது தோள்களாலும் பெயர்த்த இராவணனுடைய வலிமையை அழித்து அவன் வாயினால் இசைப்பாடல்களைக் கேட்டு அருளினார் கடவூர் வீரட்டனார்.
திருச்சிற்றம்பலம்
4.031.திருக்கடவூர் |
||||||||
by Swathi on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|