|
||||||||
நான்காம் திருமுறை-32 |
||||||||
4.032.திருப்பயற்றூர்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருப்பயத்தீசுவரர்.
தேவியார் - காவியங்கண்ணியம்மை.
314 உரித்திட்டா ரானை யின்றோ
லுதிரவா றொழுகி யோட
விரித்திட்டா ருமையா ளஞ்சி
விரல்விதிர்த தலக்க னோக்கித்
தரித்திட்டார் சிறிது போது
தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டா ரெயிறு தோன்றத்
திருப்பயற் றூர னாரே.
4.032.1
திருப்பயற்றூர்ப் பெருமானார் குருதிவெள்ளம் ஆறாக ஓட யானையின் தோலை உரித்துத் தம் திருமேனியில் விரித்துப் போர்த்தார். யானைத்தோலை உரித்ததனையும் போர்த்ததனையும் கண்டு பார்வதிதேவியார் அஞ்சித்தம் விரல்களைப் பலகாலும் உதறி வருந்தியதனைக் கண்டு, சிறிதுநேரம் அத்தோலைப் போர்த்தியபின் அவ்வாறு தொடர்ந்து போர்த்தும் ஆற்றல் இல்லாதவரைப் போலக் காட்சி வழங்கித் தாமும் பற்கள்தோன்றச் சிரித்துவிட்டார்.
315 உவந்திட்டங் குமையோர் பாகம்
வைத்தவ ரூழி யூழி
பவந்திட்ட பரம னார்தா
மலைசிலை நாக மேற்றிக்
கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங்
கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந்
திருப்பயற் றூர னாரே.
4.032.2
திருப்பயற்றூரனார்பல ஊழிகளையும் படைத்த பெருமானாராய், விரும்பிப் பார்வதிபாகராய், மலையை வில்லாகக் கொண்டு, பாம்பை அதற்கு நாணாகக் கட்டி, உலகங்களில் பலரையும் சென்று பற்றி வருத்திய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு, வெகுண்டு சிவந்த கண்களையுடையவர்.
316 நங்களுக் கருள தென்று
நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளு மெங்க
டத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செ யென்ன
நின்றவ னாக மஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார்
திருப்பயற் றூர னாரே.
4.032.3
திருப்பயற்றூரனார் நமக்கு அருள்கிட்டும் என்று நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்கு அவ்வாறே அருள் செய்யும் உண்மைப் பொருளாய்த் தீ நிறத்தவராய் எங்களுக்கு அருள் செய்வீராக என்று எல்லா உயிர்களும் வேண்டித் தொழுமாறு அழியாது நின்ற முதல்வராய்ப் பாம்பினை அஞ்சும் பிறைமதிக்கு அஞ்சவேண்டாதவாறு அருள் செய்துள்ளார்.
317 பார்த்தனுக் கருளும் வைத்தார்
பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்
சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார்
கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடையில் வைத்தார்
திருப்பயற் றூர னாரே.
4.032.4
திருப்பயற்றூரனார் அருச்சுனனுக்கு அருளி, பாம்பினை இடுப்பில் ஆடுமாறு இறுகக்கட்டி, சாத்தனை மகனாக ஏற்றுக் காளிக்காகச் சாமவேதம் பாடியவாறு கூத்து நிகழ்த்திக் கொடிய பாம்பு, பிறை, கங்கை ஆகிய இவற்றைச் சடையில் அணிந்தவராவார்.
318 மூவகை மூவர் போலு
முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலு
நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலு
மாதிரை நாளர் போலும்
தேவர்க டேவர் போலும்
திருப்பயற் றூர னாரே.
4.032.5
திருப்பயற்றூரனார் அருவம் அருவுருவம் உருவம் என்ற மூவகைப்பட்ட இலயசிவம், போகசிவம், அதிகாரசிவம் என்ற மூவராய், நிறைந்த நெற்றிக்கண்ணராய், முறையாக வைகரி முதலான நால்வகை ஒலிகளை வெளிப்படுத்தும் நாவினை உடையவராய், நான்கு வேதங்கள் சிவாகமம் முதலிய ஞானநூல்கள் என்பவற்றின் வடிவினராய், திருவாதிரை நாளை உகப்பவராய்த் தேவர்களுக்குத் தலைவராய் விளங்குபவராவார்.
319 ஞாயிறாய் நமனு மாகி
வருணனாய்ச் சோம னாகித்
தீயறா நிருதி வாயுத்
திப்பிய சாந்த னாகிப்
பேயறாக் காட்டி லாடும்
பிஞ்ஞக னெந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந்
திருப்பயற் றூர னாரே.
4.032.6
திருப்பயற்றூரனார் தீ நீங்காத கையினராய், தீபங்கள் நீங்காத சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய், தலைக்கோலம் அணிந்தவராய், நமக்குத் தந்தையாராய், தலைவராய், ஞாயிறு, சந்திரன்களாகவும், யமன், வருணன், அக்கினி, நிருருதி, வாயு, மேம்பட்ட சாந்த வடிவினனாகிய ஈசானன் ஆகிய எண்திசை காப்போராகவும் உள்ளார்.
320 ஆவியா யவியு மாகி
யருக்கமாய்ப் பெருக்க மாகிக்
பாவியர் பாவந் தீர்க்கும்
பரமனாய்ப் பிரம னாகிப்
காவியங் கண்ண ளாகிக்
கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார்
திருப்பயற் றூர னாரே.
4.032.7
திருப்பயற்றூரனார் வேள்வித் தீயின் புகையாய், வேள்வியில் தேவருக்கு வழங்கப்படும் அவி உணவாய், நுண் பொருளாய், மிகப்பெரும் பொருளாய், தீவினை செய்தவருடைய தீவினைகளை எல்லாம் போக்கும் பெருமானாய், பிரமனாய், கருங்குவளைபோன்ற கண்களை உடையளாகிக் கடல் போன்ற நீலநிறம் உடைய பார்வதிபாகராகயும் உள்ளார்.
321 தந்தையாய்த் தாயு மாகித்
தரணியாய்த் தரணியுள் ளார்க்
கெந்தையு மென்ன நின்ற
வேழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே யென்றென்
றுள்குவா ருள்ளத் தென்றும்
சிந்தையுஞ் சிவமு மாவார்
திருப்பயற் றூர னாரே.
4.032.8
திருப்பயற்றூரனார், தந்தையாராய்த் தாயாராய் உலகங்களாய், உலகில் உள்ளார் அனைவருக்கும் தலைவராய், ஏழு உலகங்களில் உள்ள உயிர்களின் செயற்பாட்டிற்கு உடனாய் நின்று இயக்குபவராய், 'எந்தையே! எம்பெருமானே!' என்று தியானிப்பவர்கள் உள்ளத்திலே சிந்தையும் சிந்திக்கப்பெறும் சிவமுமாகி உள்ளவராவார்.
322 புலன்களைப் போக நீக்கிப்
புந்தியை யொருங்க வைத்து
இலங்களைப் போக நின்று
விரண்டையு நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வல்லார்
மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந்
திருப்பயற் றூர னாரே.
4.032.9
திருப்பயற்றூரனார், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புல நுகர்ச்சிகளையும் அடியோடு போக்கி, உள்ளத்தை ஒருவழிப்பட நிலைநிறுத்தி, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களையும் கடக்க நான், தான் என்ற இரண்டையும் நீக்கி அவனேதானே ஆகிய அந்நெறியாளராய், மாயை, கன்மம் என்ற மலங்களைச் செயற்படாதவாறு செய்ய வல்ல அடியவர் மனத்திலே இன்பவடிவினராய்ச் சினத்தைவிளைக்கும் பிறவித் துன்பங்களை நீக்கி நிற்பவராவர்.
323 மூர்த்திதன் மலையின் மீது
போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற்
பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்து
மடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா வென்னக் கேட்டார்
திருப்பயற் றூர னாரே.
4.032.10
திருப்பயற்றூரனார், சிவபெருமானுடைய கயிலைமலையைக் கடந்து புட்பகவிமானம் போகாதாக, அச்செய்தியைச் சொல்லிய தேரோட்டியை வெகுண்டு நோக்கி, மனத்தான் நோக்கிப் பூமியில் தேரினின்றும் குதித்து விரைந்து கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டு இராவணன் அதனைப் பெயர்த்து ஆரவாரம் செய்தபோது மலை நடுங்குதல் கண்டு பார்வதி அஞ்சும் அளவில் அவன் தலைகள் பத்தையும் விரலால் நசுக்கிப் பின் பாடிய தேத்தெத்தா என்ற இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்பவரானார்.
திருச்சிற்றம்பலம்
4.032.திருப்பயற்றூர் |
||||||||
by Swathi on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|