|
||||||||
நான்காம் திருமுறை-5 |
||||||||
4.005.திருவாரூர்ப்பழமொழி
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
42 மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி யுறிதூக்கி
யுழிதந்தென் னுள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலு மாரூ ரரைக்
கையினாற் றொழா தொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வ னேனே.
4.005.1
உடம்பெல்லாம் வெண்ணீறு பூசிய பெருமானுடைய திருவடிகளை வழிபடாமல், கடைத்தேறலாம் என்று நினைத்துச் சமணசமயத்தைத் தழுவி உறியைத் தூக்கிக்கொண்டு திரிந்து மனத்தை அச்சமயத்தில் பறி கொடுத்து, கொய்தற்காக அடியவர்கள் உலவும் பூக்களை உடைய சோலைகளில் குயில்கள் கூவவும் மயில்கள் ஆடவும் அமைந்திருக்கும் திருவாரூரில் உகந்தருளியிருக்கும் பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கிச் சுவையுடைய இனிய கனி இருக்கவும் அதனை விடுத்துச் சுவையற்ற காய்களை விரும்பிய கள்வனாகி விட்டேனே.
43 என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
டென்னையோ ருருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்
டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி யடியேனைக் கூழாட்கொண்
டருள்செய் தவாரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
காக்கைப்பின் போன வாறே.
4.005.2
எலும்புகளை அடித்தளமாக அமைத்து நரம்புகளையும் தோலையும் பொருந்துமாறு இணைத்து எனக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து, இன்பங்களை நுகர் பொருளாக வைத்து, முன்பு அடியேன் செய்து குவித்திருந்த வினைகளைப் போக்கி அடியேனுடைய உள்ளத்தைத்தம் இருப்பிடமாகச் செய்து அடியேன் உள்ளத்தில் அன்பினை நிலைநிறுத்தி, அடியேனை ஆளுதலைக் கடமை (கூழைமை)யாகக் கொண்ட ஆரூர்ப் பெருமானுடைய திரு முன்னர் இருக்கும் வாய்ப்பினை நெகிழவிட்டு, கைப்பற்றுதற்கு எளிதாய் உண்பார்க்குச் சுவையை உடையதான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய்க் கைக்கொண்டாலும் உணற்குத் தகுதியற்றதாய் உள்ள காக்கை பின் சென்ற அறிவிலியைப் போல ஆகிவிட்டேனே!
44 பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங்
குண்டர்கள்தஞ்சொல்லே கேட்டு
உருகுவித்தென் னுள்ளத்தி னுள்ளிருந்த
கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி யாட்கொண்டு
பிணிதீர்த்த வாரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க
மறம்விலைக்குக் கொண்ட வாறே.
4.005.3
முன்பெல்லாம் உடல்பருத்த சமணத்துறவியரின் சொற்களையே செவிமடுத்து அடியேனுடைய தீவினைகளையே பெருகச் செய்து, உளம் உருகி உள்ளத்தில் தேங்கியிருந்தகள்ள உணர்வை அடியோடு நீக்கி, பிணியை உண்டாக்கித் தம் அருகு வரச்செய்து, அடியவனாகக் கொண்டு அடியேனுடைய பிணியைப் போக்கிய ஆரூர்ப் பெருமானுடைய அருகிலே இருத்தற்குரிய நல்வினையில்லாமல் பல்லாண்டுக் காலம், விலைகொடுத்தாகிலும் பெறத்தக்க அறம் விலை கொடுக்காமலேயே கிட்டவும் அதனை விடுத்து, விலையின்றிக் கிட்டிலும் வெறுக்கத்தக்க. பாவத்தை விலை கொடுத்துப் பெற்ற அறிவில்லாதவனாக ஆகிவிட்டேனே.
45 குண்டனாய்த் தலைபறித்துக் குவிமுலையார்
நகைநாணா துழிதர் வேனைப்
பண்டமாப் படுத்தென்னைப் பாறலையிற்
றெளித்துத்தன் பாதங் காட்டித்
தொண்டெலா மிசைபாடத் தூமுறுவ
லருள்செய்யு மாரூ ரரைப்
பண்டெலா மறியாதே பனிநீராற்
பாவைசெயப் பாவித் தேனே.
4.005.4
உடல் பருத்தவனாய்த் தலை மயிரை வலியப் பறித்துத் தலையை மொட்டையாக்கிக்கொண்டு, இள மகளிருடைய ஏளனச் சிரிப்பிற்கும் வெட்கப்படாமல் திரிந்த அடியேனை ஒரு பொருளாக ஏற்றுக் கொண்டு, பால் முதலிய பஞ்சகவ்வியத்தால் தூய்மை பெறச் செய்து தன் திருவடிகளைத் தரிசிப்பதற்குத் தொண்டர்கள் எல்லோரும் தம்புகழைப்பாட அதனைச் செவி மடுத்துப் புன்முறுவலோடு அருள் செய்யும் அப்பெருமானை என் வாழ்க்கையின் முற்பகுதியில் அறியாமல் திரவவடிவமாக இருக்கும் குளிர்ந்த நீரினால் திடப்பொருளாகிய பொம்மையைச் செய்ய முற்படுபவரைப் போல, உண்மையறிவுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டேன் ஆனேனே.
46 துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர்
சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகத் திரிதந்தீங் கிருகையேற்
றிடவுண்ட ஏழை யேனான்
பொன்னாகத் தடியேனைப் புகப்பெய்து
பொருட்படுத்த வாரூ ரரை
என்னாகத் திருத்தாதே யேதன்போர்க்
காதனா யகப்பட் டேனே.
4.005.5
கொடியபாம்பினை ஒத்தேனாகித் தீயவர் சொற்களைக் கேட்டு, கடுக்காயை உண்பதால் அதன் கறை படிந்த பற்களை உடையேனாய், என்விருப்பம்போலத் திரிந்து இருகைகளையும் இணைத்து அவற்றில் பிச்சை ஏற்ற உணவினை உண்ட அறிவிலியாகிய அடியேன், பொன்போன்ற செவ்விய உடலிலே அடியேனை இருத்திக் குறிப்பிடத்தக்க பொருளாக அடியேனை ஆக்கிய ஆரூர்ப் பெருமானை என் உள்ளத்தில் நிலையாக இருக்கச் செய்யாமல், ஒருவன், விளைத்த சண்டையில் அதனோடு யாதும் தொடர்பில்லாத மற்றவன் அகப்பட்டுத் துன்புறுவதுபோல நவீனரான சமணர்கள் செய்த செயல்களில் பரம்பரைச் சைவனாகிய அடியேன் அகப்பட்டுப் பல்லாண்டுகள் துன்புற்றேனே.
47 பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு
தலையோடே திரிதர் வேனை
ஒப்போட வோதுவித்தென் னுள்ளத்தி
னுள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதைக் கப்போது மடியவர்கட்
காரமுதா மாரூ ரரை
எப்போதும் நினையாதே யிருட்டறையின்
மலடுகறந் தெய்த்த வாறே.
4.005.6
உலகில் பிறக்கும் பிறவிகளையே நல்கும் நூல்களை ஓதிச் சமணனாய் வலிய மயிர் நீக்கப்பட்ட மொட்டைத் தலையோடு திரியும் அடியேனை நிகரில்லாத வகையில் உவமையிலாக் கலை ஞானத்தை உபதேசித்து என் உள்ளத்தினுள்ளே தங்கி உயிருக்கு உறுதியானவற்றைத் தெரிவித்து ஒவ்வொரு கணமும் அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமாக உள்ள ஆரூர்ப் பெருமானை எப்பொழுதும் நினையாமல், கறப்பவனொருவன், பயனின்மை மட்டிலன்றிக்காலுதையும் பட்டினைப்பவனாய் இருட்டறையில் மலட்டுப் பசுவை பால் வேண்டிக் கறந்து இளைப்பது போலப் பயனின்றித் துன்புறுதலோடு வாழ்நாளின் முற்பகுதியைக் கழித்தேனே.
48 கதியொன்று மறியாதே கண்ணழலத்
தலைபறித்துக் கையி லுண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண
நகைநாணா துழிதர் வேற்கு
மதிதந்த வாரூரில் வார்தேனை
வாய்மடுத்துப் பருகி யுய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க
மின்மினித்தீக் காய்ந்த வாறே.
4.005.7
இனிச்சென்று சேரும் வழியை அறியாமல், கண் எரியுமாறு தலைமயிரை வலியப்பறித்து, கைகளிலேயே உணவை வாங்கியவாறே உண்டு ஊர்களிலுள்ள பெருந்தெருக்களில் பலரும் காண அவருடைய ஏளனச் சிரிப்புக்கு வெட்காமல் திரியும் அடியேனுக்கு நல்லறிவை வழங்கி ஆரூரில் நிறைந்த தேனாகிய பெருமானை நுகர்ந்து கடைத்தேறும் வாய்ப்பினைப் பெறாத நல்லறிவு இல்லாத அடியேன், விளக்கு இருக்கவும் மின்மினியினுடைய தீயைக் குளிர்காயக் கொள்வாரைப் போலப் பயனுடைய பொருளை விடுத்துப் பயனில்லாத பொருளைக் கைகொண்டு வாழ்நாளை வீணாய்க் கழித்தேனே.
49 பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற
சமண்நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார்க் கண்டோடிக்
கதவடைக்குங் கள்வ னேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை
யாட்கொண்ட வாரூ ரரைப்
பாவியே னறியாதே பாழூரிற்
பயிக்கம்புக் கெய்த்த வாறே.
4.005.8
தலைமயிரை வலியப் பறித்து, நல்வினையில்லாத கீழோராகிய சமணத் துறவியரின் உபதேசத்தைச் செவிமடுத்து, நாகணவாய்ப் பறவை போன்ற இனிய குரலை உடையவர்களாய், குவளை மலர் போன்ற கண்களையும் உடைய பெண்களைக் காண்டலே தீவினை என்று அவர்களை ஒரோவழிக் கண்டவழி ஓடிச்சென்று இருப்பிடத்தின் கதவினை மூடிக்கொள்ளும் கள்ளத்தன்மை உடைய அடியேனுடைய உயிர் சூலைநோயால் நீங்காதபடி காத்து, என்னை அடிமை கொண்ட ஆரூர்ப்பெருமானை அடியேன் உள்ளவாறு அறியாதே மக்கள் குடிபோகிய ஊரிலே பிச்சை எடுக்கச் சென்று இளைத்தவர்போல் ஆகிவிட்டேனே.
50 ஒட்டாத வாளவுணர் புரமூன்று
மோரம்பின் வாயின் வீழக்
கட்டானைக் காமனையுங் காலனையுங்
கண்ணினெடு காலின் வீழ
அட்டானை யாரூரி லம்மானை
யார்வச்செற் றக்கு ரோதம்
தட்டானைச் சாராதே தவமிருக்க
அவஞ்செய்து தருக்கி னேனே.
4.005.9
தன்னோடு நட்புறாத கொடிய அசுரர்களின் மும்மதில்களும் ஓரம்பினால் உருக்குலையுமாறு அழித்தவனாய், காமன் தன் கண்ணினாலும், காலன் தன் காலினாலும், அழியுமாறு அவர்களைத் துன்புறுத்தியவனாய், ஆரூரின் தலைவனாய், பற்று, பகைமை, கோபம், என்ற தீப்பண்புகள் தன்மாட்டு அணுகப் பெறானாய் உள்ள பெருமானை அணுகாமல், தவம், செய்தற்குரிய செயலாய் இருக்கவும், அதனை விடுத்து, பயனற்ற செயல்களைச் செய்து பெருமிதம் கொண்டு திரிந்தேனே.
51 மறுத்தானொர் வல்லரக்க னீரைந்து
முடியினொடு தோளுந் தாளும்
இறுத்தானையெழின் முளரித்தவிசின்மிசையி
ருந்தான்றன்தலையி லொன்றை
அறுத்தானை யாரூரி லம்மானை
யாலால முண்டு கண்டம்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க
இரும்புகடித் தெய்த+C36த வாறே.
4.005.10
தேர்ப்பாகன் கூற்றை மறுத்துக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட வலிமை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் தோள்களும் அடிகளும் செயலறும்படி நசுக்கியவனாய், அழகிய தாமரை மலரிலிருந்த பிரமன் தலையில் ஒன்றை அறுத்தவனாய், விடமுண்ட நீலகண்டனாய் உள்ள ஆரூர்ப் பெருமானை மனத்து நினையாமல் மெல்லுதற்கு ஏற்றதாய் மிகுசுவை உடையதாய் இருக்கும் கரும்பை விடுத்து, கடிக்க இயலாத சுவையற்ற இரும்பைக் கடித்து அடியேன் வாழ்வின் முற்பகுதியில் இளைத்தேனே.
திருச்சிற்றம்பலம்
4.005.திருவாரூர்ப்பழமொழி |
||||||||
by Swathi on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|