|
||||||||
நான்காம் திருமுறை-8 |
||||||||
4.008.சிவனெனுமோசை
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
72 சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற்
றிருநின்ற செம்மை யுளதே
அவனுமொ ரைய முண்ணி யதளாடையாவ
ததன்மேலொ ராட லரவம்
கவணள வுள்ள வுண்கு கரிகாடு கோயில்
கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றி கண்டு மவனீர்மை கண்டு
மகநேர்வர் தேவ ரவரே.
4.008.1
உலகிலே சிவன் என்னும் ஓசையன்றித் திருவானது நிலைபெறக் காரணமான செஞ்சொல் வேறு இல்லை என்று ஆணையிட்டுக் கூறுவேன். எம்பெருமான் பிச்சை எடுத்து உண்பவன். தோலையே ஆடையாக உடையவன். அத்தோல் மேல் ஆடும்பாம்பை இறுகக்கட்டியவன். கவண் கல் அளவு சிறிதே உண்பவன். சுடுகாடே இருப்பிடம். அவனுடைய உண்கலன் மண்டையோடு. ஆராய்ந்து பார்த்தால் அவன் உடைமைகளைக் கண்டும் அவன் தன்மையைக் கண்டும் தேவர்கள் தம் உள்ளத்தை அப்பெருமானுக்கு அர்ப்பணம் செய்வர்.
73 விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் வேத
விதியல்லர் விண்ணு நிலனும்
திரிதரு வாயு வல்லர் செறுதீயு மல்லர்
தௌநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணி யாளை யொருபாக மாக
வருள்கார ணத்தில்வருவார்
எரியர வார மார்ப ரிமையாரு மல்ல
ரிமைப்பாரு மல்ல ரிவரே.
4.008.2
இப்பெருமானார் ஒளிக்கதிர்கள் விரியும் சூரியனும் அல்லர். சந்திரனும்அல்லர். பிரமனும் அல்லர். வேதத்தில் விதித் தனவும் விலக்கியனவும் அல்லர். விண்ணும் நிலனும் அலையும் காற்றும் துன்புறுத்தும் தீயும் தௌந்த நீரும் அல்லர். செவ்வரி கருவரி பரந்த கண்களை உடைய பார்வதி பாகராக அருள் காரணத்தால் காட்சி வழங்கும் இவர் கோபிக்கின்ற பாம்பினை மார்பில் மாலையாக உடையவர். இவர் கண் இமைக்காத தேவரும் கண் இமைக்கும் மக்களும் அல்லர். இவரே எல்லாமாகி அல்லராய் உடனும் ஆவர்.
74 தேய்பொடி வெள்ளை பூசி யதன்மேலொர் திங்கள்
திலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலை நீல வொளிமா மிடற்றர்
கரிகாடர் காலொர் கழலர்
வேயுட னாடு தோளி யவள்விம்ம வெய்ய
மழுவீசி வேழ வுரிபோர்த்
தேயிவ ராடு மாறு மிவள்காணு மாறு
மிதுதா னிவர்க்கொ ரியல்பே.
4.008.3
நுண்ணிய வெண்ணீறு பூசித் திங்கள் போன்ற வடிவுடைய திலகத்தை இட்ட நெற்றியை உடையவர். சூரியன் தோன்றும் கீழ்க்கடலின் நீல ஒளி பொருந்திய கழுத்தினர். சுடுகாட்டில் உறைபவர். காலில் ஒற்றைக் கழல் அணிபவர். மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி நடுங்குமாறு கொடிய மழுப்படையை வீசி யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து இவர் கூத்தினை நிகழ்த்துவதும், அதனைப் பார்வதி காணுமாறு செய்வதும் இவருக்கு இயல்பு போலும்.
75 வளர்பொறி யாமை புல்கி வளர்கோதை வைகி
வடிதோலு நூலும் வளரக்
கிளர்பொறி நாக மொன்று மிளிர்கின்ற மார்பர்
கிளர்காடு நாடு மகிழ்வர்
நளிர்பொறி மஞ்ஞை யன்ன தளிர்போன்று சாய
லவடோன்று வாய்மை பெருகிக்
குளிர்பொறி வண்டு பாடு குழலா ளொருத்தி
யுளள்போல் குலாவி யுடனே.
4.008.4
பெருமானார் வளர்ந்த, பொறிகளை உடைய ஆமை ஓட்டை அணிந்து, நீண்ட கூந்தலை உடைய பார்வதி தங்கியதும், மான்தோலும் பூணூலும் ஓளிவீசுவதும், மிக்க பொறிகளை உடைய நாகம் விளங்குவதுமான மார்பினராய், காட்டிலும் நாட்டிலும் மகிழ்ந்து ஆடுபவராய் உள்ளார். செறிந்த பொறிகளை உடைய மயில் போன்று கட்புலனாகும் மென்மையும் தளிர் போன்று ஊற்றுக்கினிய மென்மையும் உடையவள் என்று சொல்லப்படும் உண்மை தன்னிடம் நிலைபெறப் புள்ளிகளை உடைய குளிர்ந்த வண்டுகள் பாடும் கூந்தலை உடைய கங்கையாளும் அப்பெருமானோடு கூடி அவருடன் உள்ளாள் போலும்.
76 உறைவது காடு போலுமுரிதோ லுடுப்பர்
விடையூர்வ தோடு கலனா
இறையிவர் வாழும் வண்ண மிதுவேலு மீச
ரொருபா லிசைந்த தொருபால
பிறைநுதல் பேதை மாத ருமையென்னு நங்கை
பிறழ்பாட நின்று பிணைவான்
அறைகழல் வண்டு பாடு மடிநீழ லாணை
கடவா தமர ருலகே
4.008.5
இவர் தங்குமிடம் காடு, உரித்தெடுக்கப்பட்ட புலி முதலியவற்றின் தோலை உடுப்பர். இவர் காளையை ஊர்வர். மண்டையோடு உண்கலம். தலைவராகிய இவர் வாழும் வகை இது. இவர் எல்லோரையும் அடக்கி ஆள்பவர். இவருக்கு உரியது இவர் உடம்பின் வலப்பகுதியே. மற்றொரு பகுதியாகப் பிறைபோன்ற நெற்றியளாய் மடம் என்ற பண்புள்ளவளாய்த் திகழும் விரும்பத்தக்க உமை என்னும் நங்கை உள்ளாள். இடம் பெயர்ந்து ஆடுவதற்காகப் பார்வதியோடும் கூடியிருப்பார். வீரக்கழல் ஒலிக்க வண்டுகள் பாடும் திருவடியின் நிழலாகிய அப்பெருமானாருடைய ஆணையைத் தேவர் உலகம் மீறிச் செயற்படமாட்டாது.
77 கணிவளர் வேங்கை யோடு கடிதிங்கள் கண்ணி
கழல்கால் சிலம்ப வழகார்
அணிகிள ரார வெள்ளை தவழ்சுண்ண வண்ண
வியலா ரொருவ ரிருவர்
மணிகிளர் மஞ்ஞை யால மழையாடு சோலை
மலையான் மகட்கு மிறைவர்
அணிகிள ரன்ன வண்ண மவள்வண்ண வண்ண
மவர்வண்ண வண்ண மழலே.
4.008.6
சோதிடனின் இயல்பை உடையதாய் வளருகின்ற வேங்கைப் பூக்களையும் புதிய பிறையையும் முடிமாலையாகச் சூடி, காலில் கழல் ஒலிப்ப இவற்றால் ஏற்படும் அழகினை உடையவர். அழகு விளங்குகின்ற மாலையையும், வெண்ணீற்றையும் அணிந்து செந்நிறமுடைய இயல்பினர் ஆகிய பெருமான் அம்மையப்பராய் இருவராய் உள்ளார். அழகு விளங்குகின்ற மயில்கள் ஆட மேகங்கள் உலாவும் சோலைகளை உடைய இமயத்து மன்னன் மகளாகிய பார்வதிக்குத் தலைவர். பார்வதியினுடைய நிறத்தின் வண்ணம் அழகுவெளிப்படுகின்ற அன்ன நிறத்தின் வண்ணமாகும். (காரன்னம்)அவருடைய நிறம் நெருப்பின் நிறமாகும்.
78 நகைவளர் கொன்றை துன்று நகுவெண் டலையர்
நளிர்கங்கை தங்கு முடியர்
மிகைவளர் வேத கீத முறையோடும் வல்ல
கறைகொண் மணிசெய் மிடறர்
முகைவளர் கோதை மாதர் முனிபாடு மாறு
மெரியாடு மாறு மிவர்கைப்
பகைவளர் நாகம் வீசி மதியங்கு மாறு
மிதுபோலு மீச ரியல்பே.
4.008.7
விளக்கம் மிகுகின்ற கொன்றை மலர் நெருங்கிய தலைமாலையும் குளிர்ந்த கங்கையும் தங்கிய சடைமுடியை உடையவர். உலகில் மேம்பட்டு விளங்குகின்ற வேதப் பாடல்களை ஒலிக்கும் முறையோடு பாடுதலில் வல்ல, விடக்கறை பொருந்திய நீலகண்டர். மொட்டுக்களால் ஆகிய மாலையை அணிந்த பார்வதி, பெருமானுடைய கூத்தாடலுக்கு ஏற்பப்பாடும் முறையும் பெருமான் தீயிடை ஆடும் முறையும், இவர் கையில் ஏந்திய பகைத்தன்மை வளர்கின்ற நாகத்தை அகற்றிப் பிறை அசையுமாறு இவர் இவ்வாறு செய்வதும் போலும் இவர் தன்மையாகும்.
79 ஒளிவளர் கங்கை தங்கு மொளிமா லயன்ற
னுடல்வெந்து வீய சுடர்நீ
றணிகிள ரார வெள்ளை தவழ்சுண்ண வண்ணர்
தமியாரொருவ ரிருவர்
களிகிளர் வேட முண்டொர் கடமா வுரித்த
வுடைதோல் தொடுத்த கலனார்
அணிகிள ரன்ன தொல்லை யவள்பாக மாக
வெழில்வேத மோது மவரே.
4.008.8
எம்பெருமான் ஒளிவளர்கின்ற கங்கை தங்கும் சடையின் செந்நிற ஒளியை உடையர். திருமால் பிரமன் இவர்கள் உடைய உடல்கள் சாம்பலாக அவர்களுடைய ஒளி வீசுகின்ற வெள்ளை நீற்றினை, ஒளி வீசும் மாலையின் வெண்ணிறத்தோடு பூசிய வெண்பொடி நிறத்தவர். தனியராயிருந்த ஒருவர். அழகு விளங்குகின்ற அன்னம் போன்ற அநாதிசக்தி ஒருபாகமாக, அதனால் மகிழ்ச்சி மிகும் இருவர் வேடமும் அவருக்கு உண்டு. ஒரு மத யானையை உரித்த தோலை மேலுடையாகப் போர்த்த, மண்டையோட்டை உடைய அப்பெருமானார் அழகிய வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர் ஆவர்.
80 மலைமட மங்கை யோடும் வடகங்கை நங்கை
மணவாள ராகி மகிழ்வர்
தலைகல னாக வுண்டு தனியே திரிந்து
தவவாண ராகி முயல்வர்
விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி
விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ள முற்று மலறக் கடைந்த
வழனஞ்ச முண்ட வவரே.
4.008.9
பார்வதியோடு, வடக்கில் உற்பத்தியாகும் கங்கை என்ற பெண்ணுக்கும் கணவராகி மகிழ்பவர். மண்டையோட்டையே பிச்சை எடுத்து உண்ணும் பாத்திரமாகக் கொண்டு தனியே திரிந்து, அடியார் செய்யும் தவத்தில் வாழ்பவராகி அவர்களுக்கு அருளும் முயற்சியை உடையார். விலையில்லாது கிட்டும் சந்தனமாக மணங்கமழும் திருநீற்றைப் பூசி விளையாடும் வேடத்தை உடையர், உலகியலிலிருந்து வேறுபட்ட இயல்பை உடைய பெருமான், அலைகளை உடைய கடலின் வெள்ளம் முழுவதும் ஒலிக்குமாறு கடைந்ததனால் ஏற்பட்ட கொடிய விடத்தை உண்ட அப்பெருமான் ஆவார்.
81 புதுவிரி பொனசெ யோலை யொருகா தொர்காது
சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேத கீத மொருபாடு மோத
மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர்
குழல்பாகமாக வருவர்
இதுவிவர் வண்ண வண்ண மிவள்வண்ண வண்ண
மெழில்வண்ண வண்ண மியல்பே.
4.008.10
புதிதாகச் சுருள் பொன்னால் செய்யப்பட்ட ஓலை ஒருகாதிலும் வளைந்த சங்கு ஒரு காதிலும் காதணிகளாக அமைந்து தோள்கள் மீது புரள, முறைப்படி வேதப்பாடலை ஒருபக்கம் ஓத, இடப்பக்கமாகிய பார்வதி பாகம் மெதுவாக முறுவல் செய்யும். சடைப்பகுதியில் தேன் விரியும் கொன்றைப் பூப் பொருந்த, பெண் பகுதி, கூந்தலைப் பின்னியிருக்கும் பாகமாக வருகின்ற பெருமானுடைய நிறமும், இயல்பும் இவை, தேவியினுடைய நிறமும் இயல்பும் இவை. அழகு வண்ணங்கள் இரண்டன் இயல்புகள் இவையே.
திருச்சிற்றம்பலம்
4.008.சிவனெனுமோசை |
||||||||
by Swathi on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|