|
||||||||
நான்காம் திருமுறை-94 |
||||||||
4.094.திருக்கண்டியூர்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர்.
தேவியார் - மங்கைநாயகியம்மை.
903 வானவர் தானவர் வைகன் மலர்கொணர்ந்
திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி யாத
தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன் றோடிய
பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட வாணர்
தொழுகின்றதே.
4.094.1
தேவர்களும் தேவகணத்தவரான வித்தியாதரர்களும் நாள்தோறும் மலர்களைக் கொணர்ந்து சமர்ப்பித்து வணங்க வைகுந்தத்திலும் சத்தியலோகத்திலும் உள்ள திருமாலும் பிரமனும் உள்ளபடி அறிய முடியாத தன்மையுடைய வியாபகப்பொருளாகியவனாய், காளைவாகனனாய், மூலப் பழம்பொருளாய், அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கக் கருதிய அன்று காட்டில் ஓடிய பன்றியை அம்பு எய்த வேடனாய் உள்ள பெருமானுடைய கண்டியூர்த் திருத்தலத்தை உலகில் உள்ள மக்கள் தொழுகின்றார்கள். கண்டியூரைத் தேவர்களும் தானவர்களும் மண்ணவர்களும் தொழுகின்றனர் என்றவாறு.
904 வான மதியமும் வாளர வும்புன
லோடுசடைத்
தான மதுவென வைத்துழல் வான்றழல்
போலுருவன்
கான மறியொன்று கையுடை யான்கண்டி
யூரிருந்த
ஊனமில் வேத முடையனை நாமடி
யுள்குவதே.
4.094.2
வானத்தில் இயங்கவேண்டிய பிறை, ஒளி பொருந்திய பாம்பு கங்கை இவற்றிற்குத் தன் தலையைத் தங்குமிடமாக வழங்கித் திரிபவனாய், தீ நிறத்தினனாய், காட்டில் வாழும் மான்குட்டியைக் கையில் ஏந்தியவனாய்க் கண்டியூரில் இருக்கும், குறைவு ஒன்றும் இல்லாத வேதத்தை உடைய பெருமானை அவன் திருவடிக்கண் நாம் தியானிப்போமாக.
905 பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத்
தான்றலையை
உண்டங் கறுத்தது மூரொடு நாடவை
தானறியும்
கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி
யூரிருந்த
தொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர்
தொழுகின்றதே.
4.094.3
பிரமன் தலையைப் பண்டு நீக்கிய கையை உடையவனாய், விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இறுத்திய அதனால் நீலகண்டனாய் உயிரினங்களின் அச்சத்தைப் போக்கிய செய்தியை ஊர்களும் நாடுகளும் அறியும். அத்தகைய பெருமான் தொண்டர்கள் தலைவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்க அவனை அங்கே அண்டத்தில் வாழும் சான்றோர்கள் தொழுகின்றார்கள்.
906 முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன்
றானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு
பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி
யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்ட ரில்லைகண் டீரண்ட
வானவரே.
4.094.4
அவன் செய்துமுடிக்க நினைத்தால் வெற்றிகரமாக முடியாத செயல் ஒன்றுமில்லை. எல்லாப் பொருள்களையும் அப்பெருமான் தன்பால் உடையான். கொடியில் தன் உருவம் எழுதப்பட்ட வாகனமாக உடைய காளைமீது இவர்ந்து பார்வதி பாகனாய், அடியார்களுடைய கொடியவினைகளை அடியோடு நீக்குபவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும் அப்பெருமானுடைய திருவடிகளைத் தொண்டர்களே அடைந்தனர். மேலுலகத்தேவர்கள் அடையவில்லை.
907 பற்றியொ ரானை யுரித்தபி ரான்பவ
ளத்திரள்போல்
முற்று மணிந்ததொர் நீறுடை யான்முன்ன
மேகொடுத்த
கற்றங் குடையவன் றானறி யான்கண்டி
யூரிருந்த
குற்றமில் வேத முடையானை யாமண்டர்
கூறுவதே.
4.094.5
ஓர் யானையைக் கீழ்ப்படுத்தி அதன் தோலினை உரித்த தலைவனாய், பவளத்திரள் போன்ற மேனி முழுதும் திருநீறு அணிந்தவனாய், கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த கண்ணனாக அவதரித்த திருமாலால் அறியப்படாதவனாய்க் கண்டியூரில் உறைபவனாய், முன்னமே உலகுக்கு வழங்கிய குற்றமற்ற வேதங்களை உடையவனான அப்பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.
908 போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி
வாயரவம்
சேர்ப்பது வானத் திரைகடல் சூழுல
கம்மிதனைக்
காப்பது காரண மாகக் கொண் டான்கண்டி
யூரிருந்த
கூர்ப்புடை யொள்வாண் மழுவனை யாமண்டர்
கூறுவதே.
4.094.6
யானையை உரித்த தோலைப் போர்க்கின்ற பிரானாய், உடம்பில் புள்ளிகளைக் கொண்ட பாம்பினை உடலில் சேர்த்து அணிந்தவனாய், வானளாவிய அலைகளை உடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தைக் காப்பதற்காகக் கூர்மையை உடைய மழுப்படையைக் கொண்ட கண்டியூர்ப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.
909 அட்டது காலனை யாய்ந்தது வேதமா
றங்கமன்று
சுட்டது காமனைக் கண்ணத னாலே
தொடர்ந்தெரியக்
கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி
யூரிருந்த
குட்டமுன் வேதப் படையனை யாமண்டர்
கூறுவதே.
4.094.7
கூற்றுவனை அழித்து, வேதங்கள், ஆறு அங்கங்கள் என்ற இவற்றை ஆராய்ந்து, மன்மதனைக் கண்ணிலிருந்து தோன்றிய தீயினால் சுட்டு, தொடர்ந்து எரிந்து சாம்பலாகுமாறு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய தலைவனாய்க் கண்டியூரில் உறையும் கடல்போன்ற வேதங்களைத் தனக்குப் படையாக உடைய பெருமானையே தேவர்கள் போற்றுகின்றார்கள்.
910 அட்டு மொலிநீ ரணிமதி யும்மல
ரானவெல்லாம்
இட்டுப் பொதியுஞ் சடைமுடி யானிண்டை
மாலையங்கைக்
கட்டு மரவது தானுடை யான்கண்டி
யூரிருந்த
கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர்
கூறுவதே.
4.094.8
உலகத்தை அழிக்கப் பேரொலியோடு வந்த கங்கையையும் பிறையையும் மலர்களையும் வைத்து உள்ளடக்கிய சடைமுடியை உடையவனாய், இண்டைமாலையையும், கையில் அணிகலனாக அணியும் பாம்பையும் உடையவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும், பறையை ஒத்த உடுக்கையை உடைய கூத்தப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.
911 மாய்ந்தன தீவினை மங்கின நோய்கண்
மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச்
செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரானங்க
மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட்
கொண்டவனே.
4.094.9
மன்மதனை வெகுண்டு அழித்த பிரான், கண்டியூரை உகந்தருளியிருக்கும் பிரான், ஆறு அங்கங்களையும் ஆராய்ந்தபிரான் ஆகிய சிவபெருமான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டுள்ளான். அதனால் தீவினைகள் மறைந்தன; நோய்கள் செயலற்று ஒளிகுறைந்தன; கலங்கி விழுமாறு பாவங்கள் தேய்ந்து விட்டன. தீவினை நோய்கள் பாவம் என்ற இவைகள் இனி நம்மை அழிக்க வலிமை அற்றனவாகிவிட்டன.
912 மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ்
வாசுகியைத்
தண்டி யமரர் கடைந்த கடல்விடங்
கண்டருளி
உண்ட பிரானஞ் சொளித்த பிரானஞ்சி
யோடிநண்ணக்
கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட
வானவனே.
4.094.10
தம் ஆற்றலால் மிக்குச்சென்று மந்தரமலையைப் பெயர்த்துச் சென்று அதனை மத்தாகக்கொண்டு வாசுகி என்ற பாம்பைக் கடைகயிறாகச் சுற்றித் தேவர்கள் கடைந்த கடலிலிருந்து புறப்பட்ட விடத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சி ஓடிவந்து தன்னை அணுகுமாறு செய்தபிரானாய், அவர்களிடம் அருள்செய்து விடத்தை உண்ட பிரானாய்ப்பின் அது உள்ளே செல்லாதபடி கழுத்தில் அதனை ஒளிவீசுமாறு செய்த பெருமான் கண்டியூரிலுள்ள தேவர்தலைவன் அல்லனோ?
திருச்சிற்றம்பலம்
4.094.திருக்கண்டியூர் திருவிருத்தம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீரட்டேசுவரர். தேவியார் - மங்கைநாயகியம்மை.
903 வானவர் தானவர் வைகன் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித் தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான் ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே. 4.094.1
தேவர்களும் தேவகணத்தவரான வித்தியாதரர்களும் நாள்தோறும் மலர்களைக் கொணர்ந்து சமர்ப்பித்து வணங்க வைகுந்தத்திலும் சத்தியலோகத்திலும் உள்ள திருமாலும் பிரமனும் உள்ளபடி அறிய முடியாத தன்மையுடைய வியாபகப்பொருளாகியவனாய், காளைவாகனனாய், மூலப் பழம்பொருளாய், அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கக் கருதிய அன்று காட்டில் ஓடிய பன்றியை அம்பு எய்த வேடனாய் உள்ள பெருமானுடைய கண்டியூர்த் திருத்தலத்தை உலகில் உள்ள மக்கள் தொழுகின்றார்கள். கண்டியூரைத் தேவர்களும் தானவர்களும் மண்ணவர்களும் தொழுகின்றனர் என்றவாறு.
904 வான மதியமும் வாளர வும்புன லோடுசடைத் தான மதுவென வைத்துழல் வான்றழல் போலுருவன் கான மறியொன்று கையுடை யான்கண்டி யூரிருந்த ஊனமில் வேத முடையனை நாமடி யுள்குவதே. 4.094.2
வானத்தில் இயங்கவேண்டிய பிறை, ஒளி பொருந்திய பாம்பு கங்கை இவற்றிற்குத் தன் தலையைத் தங்குமிடமாக வழங்கித் திரிபவனாய், தீ நிறத்தினனாய், காட்டில் வாழும் மான்குட்டியைக் கையில் ஏந்தியவனாய்க் கண்டியூரில் இருக்கும், குறைவு ஒன்றும் இல்லாத வேதத்தை உடைய பெருமானை அவன் திருவடிக்கண் நாம் தியானிப்போமாக.
905 பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத் தான்றலையை உண்டங் கறுத்தது மூரொடு நாடவை தானறியும் கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த தொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர் தொழுகின்றதே. 4.094.3
பிரமன் தலையைப் பண்டு நீக்கிய கையை உடையவனாய், விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இறுத்திய அதனால் நீலகண்டனாய் உயிரினங்களின் அச்சத்தைப் போக்கிய செய்தியை ஊர்களும் நாடுகளும் அறியும். அத்தகைய பெருமான் தொண்டர்கள் தலைவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்க அவனை அங்கே அண்டத்தில் வாழும் சான்றோர்கள் தொழுகின்றார்கள்.
906 முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் றானுடையான் கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான் கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான் அடியுமுற் றார்தொண்ட ரில்லைகண் டீரண்ட வானவரே. 4.094.4
அவன் செய்துமுடிக்க நினைத்தால் வெற்றிகரமாக முடியாத செயல் ஒன்றுமில்லை. எல்லாப் பொருள்களையும் அப்பெருமான் தன்பால் உடையான். கொடியில் தன் உருவம் எழுதப்பட்ட வாகனமாக உடைய காளைமீது இவர்ந்து பார்வதி பாகனாய், அடியார்களுடைய கொடியவினைகளை அடியோடு நீக்குபவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும் அப்பெருமானுடைய திருவடிகளைத் தொண்டர்களே அடைந்தனர். மேலுலகத்தேவர்கள் அடையவில்லை.
907 பற்றியொ ரானை யுரித்தபி ரான்பவ ளத்திரள்போல் முற்று மணிந்ததொர் நீறுடை யான்முன்ன மேகொடுத்த கற்றங் குடையவன் றானறி யான்கண்டி யூரிருந்த குற்றமில் வேத முடையானை யாமண்டர் கூறுவதே. 4.094.5
ஓர் யானையைக் கீழ்ப்படுத்தி அதன் தோலினை உரித்த தலைவனாய், பவளத்திரள் போன்ற மேனி முழுதும் திருநீறு அணிந்தவனாய், கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த கண்ணனாக அவதரித்த திருமாலால் அறியப்படாதவனாய்க் கண்டியூரில் உறைபவனாய், முன்னமே உலகுக்கு வழங்கிய குற்றமற்ற வேதங்களை உடையவனான அப்பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.
908 போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி வாயரவம் சேர்ப்பது வானத் திரைகடல் சூழுல கம்மிதனைக் காப்பது காரண மாகக் கொண் டான்கண்டி யூரிருந்த கூர்ப்புடை யொள்வாண் மழுவனை யாமண்டர் கூறுவதே. 4.094.6
யானையை உரித்த தோலைப் போர்க்கின்ற பிரானாய், உடம்பில் புள்ளிகளைக் கொண்ட பாம்பினை உடலில் சேர்த்து அணிந்தவனாய், வானளாவிய அலைகளை உடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தைக் காப்பதற்காகக் கூர்மையை உடைய மழுப்படையைக் கொண்ட கண்டியூர்ப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.
909 அட்டது காலனை யாய்ந்தது வேதமா றங்கமன்று சுட்டது காமனைக் கண்ணத னாலே தொடர்ந்தெரியக் கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி யூரிருந்த குட்டமுன் வேதப் படையனை யாமண்டர் கூறுவதே. 4.094.7
கூற்றுவனை அழித்து, வேதங்கள், ஆறு அங்கங்கள் என்ற இவற்றை ஆராய்ந்து, மன்மதனைக் கண்ணிலிருந்து தோன்றிய தீயினால் சுட்டு, தொடர்ந்து எரிந்து சாம்பலாகுமாறு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய தலைவனாய்க் கண்டியூரில் உறையும் கடல்போன்ற வேதங்களைத் தனக்குப் படையாக உடைய பெருமானையே தேவர்கள் போற்றுகின்றார்கள்.
910 அட்டு மொலிநீ ரணிமதி யும்மல ரானவெல்லாம் இட்டுப் பொதியுஞ் சடைமுடி யானிண்டை மாலையங்கைக் கட்டு மரவது தானுடை யான்கண்டி யூரிருந்த கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர் கூறுவதே. 4.094.8
உலகத்தை அழிக்கப் பேரொலியோடு வந்த கங்கையையும் பிறையையும் மலர்களையும் வைத்து உள்ளடக்கிய சடைமுடியை உடையவனாய், இண்டைமாலையையும், கையில் அணிகலனாக அணியும் பாம்பையும் உடையவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும், பறையை ஒத்த உடுக்கையை உடைய கூத்தப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.
911 மாய்ந்தன தீவினை மங்கின நோய்கண் மறுகிவிழத் தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றநங்கைக் காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரானங்க மாறினையும் ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே. 4.094.9
மன்மதனை வெகுண்டு அழித்த பிரான், கண்டியூரை உகந்தருளியிருக்கும் பிரான், ஆறு அங்கங்களையும் ஆராய்ந்தபிரான் ஆகிய சிவபெருமான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டுள்ளான். அதனால் தீவினைகள் மறைந்தன; நோய்கள் செயலற்று ஒளிகுறைந்தன; கலங்கி விழுமாறு பாவங்கள் தேய்ந்து விட்டன. தீவினை நோய்கள் பாவம் என்ற இவைகள் இனி நம்மை அழிக்க வலிமை அற்றனவாகிவிட்டன.
912 மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ் வாசுகியைத் தண்டி யமரர் கடைந்த கடல்விடங் கண்டருளி உண்ட பிரானஞ் சொளித்த பிரானஞ்சி யோடிநண்ணக் கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட வானவனே. 4.094.10
தம் ஆற்றலால் மிக்குச்சென்று மந்தரமலையைப் பெயர்த்துச் சென்று அதனை மத்தாகக்கொண்டு வாசுகி என்ற பாம்பைக் கடைகயிறாகச் சுற்றித் தேவர்கள் கடைந்த கடலிலிருந்து புறப்பட்ட விடத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சி ஓடிவந்து தன்னை அணுகுமாறு செய்தபிரானாய், அவர்களிடம் அருள்செய்து விடத்தை உண்ட பிரானாய்ப்பின் அது உள்ளே செல்லாதபடி கழுத்தில் அதனை ஒளிவீசுமாறு செய்த பெருமான் கண்டியூரிலுள்ள தேவர்தலைவன் அல்லனோ?
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|