|
|||||
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் |
|||||
![]() இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின்பு, மொழிவழி மாநிலங்கள் அமைந்திட வேண்டும் என்ற குரல் நாடு முழுக்க கிளம்பியது. மத்திய அரசு இதனை அனுமதிக்க மறுத்து, மாநில எல்லைகள் மறுசீரமைப்பு ஆணையம் அமைத்தும், தமிழ்நாட்டுக்கும், ஆந்திரத்துக்கும் பொதுத் தலைநகராக சென்னை மாநகரை ஆக்கலாம் என்றும், தட்சிணப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என இந்தியாவை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம் என்று திசை திருப்பியும் மொழிவழி மாநில கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்தது. இதனை எதிர்த்து மொழிவழி மாநிலம் அமைய வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், சி.பா.ஆதித்தனார், பொதுஉடைமைச் சிற்பி ஜீவா, சங்கரலிங்கனார், கா.அப்பாத்துரையார், தமிழவேள் பி.டி.ராஜன், நேசமணி என எண்ணற்ற தலைவர்கள் ஓரணியில் திரண்டு போராடினார்கள். குமரி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 18 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பீகார், ஒடிசா, மராட்டியம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என நாட்டின் பல மாநிலங்களிலும் மொழிவழி மாநிலக் கோரிக்கை வலுப்பெற்று போராட்டமாக உருப்பெற்றது. இவ்வளவு கடுமையான போராட்டத்துக்குப் பிறகு பெங்களூரூ, கோலார், திருப்பதி, சித்தூர், தேவிகுளம், பீர்மேடு, நெடுமங்காடு, நெய்யாற்றங்கரை ஆகிய பகுதிகளை அண்டை மாநிலங்களுக்கு நாம் பறிகொடுத்தோம். இந்த வேதனை ஒரு பக்கம் இருப்பினும் இந்திய அரசு, இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு மொழிவழி மாநிலங்களை அறிவித்த மகிழ்ச்சிக்குரிய நாள் இது என்பதில் ஐயமில்லை. நம் பகுதிகளைப் பாதுகாத்து, தமிழ்நாடு என்று அமைக்க உயிர் நீத்த உத்தமர்களுக்கும், போராடி சிறை சென்ற தியாகிகளுக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நாளில் வணக்கம் செலுத்துவோம். மொழிவழி மாநிலங்கள் பிரிந்த நாளை கர்நாடகம், ஆந்திரம், கேரளம், ஒடிசா ஆகிய மாநில அரசுகளே விழா எடுத்துக் கொண்டாடுகிறது. அதனைப் போல தமிழக அரசும் மொழிவழி மாநிலம் அமைந்த நாளை அரசு விழாவாகவே கொண்டாட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைப்போம். -வைகோ |
|||||
by Swathi on 31 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|