மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடான சிங்கப்பூர் சாதி,மத, இனம்,மொழி கடந்து சமூக நல்லிணக்கத்துக்கும்,நேர்மைக்கும்,அனைவருக்கும் சமமான சட்டதிட்டத்திற்கும்,ஊழலற்ற நிர்வாகத்திற்கும் உலகில் பெயர் போன நாடாக விளங்குகிறது.
அந்த நாட்டின் அரசியலில் பல முக்கிய துறைகளில் நம் தமிழர்கள்தான் கோலோச்சுகிறார்கள்.இவர்களின் அறிவு,நேர்மை,நிர்வாகத்திறமை ஆகியவை, உலகில் உள்ள எந்த நாட்டினருக்கும் நாம் குறைந்தவர்கள் இல்லை என்பதை அங்கு சென்ற நம் தமிழர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
உதாரணம்;சிங்கப்பூரின் அதிபராக முன்பு இருந்த நாதன் என்ற தமிழர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். தற்போது சிங்கப்பூரி்ன் முதல் பெண் அதிபராகத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஹலிமா யாகூப் பதவியேற்று பலரது பாராட்டைப் பெறும் வண்ணம் பணியாற்றி வருகிறார்.அது போல் துணை பிரதமராக உள்ள தருமன் சண்முக ரெத்தினம் என்ற தமிழரும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று திகழ்கிறார்.சட்டத்துறை அமைச்சராக சண்மும்,வெளியுறவுத் துறை அமைச்சராக விஜயன் பாலகிருஷ்ணன்,தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக ஈஸ்வரன்,கல்வி,மற்றும் நிதித்துறை இரண்டாவது அமைச்சராக இந்திராணியும் கோலோச்சி வருகிறார்கள்.
சிங்கப்பூர் நாட்டின் 9 நியமன எம்.பி.-களில் ஒருவராக,நாகப்பட்டினம் அருகில் உள்ள திட்டச்சேரி என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்ட,29 வயதே ஆன,முகமது இர்ஷத் என்ற இளைஞனை அந்த அரசாங்கம் இப்பொழுது நியமித்துள்ளது. சிங்கப்பூரின் முதல் இளைய எம்பி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் அரசியல் அரங்கில் தமிழர்கள் என்றால் மிகவும் மதிக்கப்படுகிறார்கள்.
ஆனால்,தமிழ் நாட்டிலேயே உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஏன் குடிமக்களாகிய நாமும்தான் ஏன் இப்படி ஆனோம்?
|