LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1256 - கற்பியல்

Next Kural >

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. (செற்றவர் என்றது ஈண்டும், அப்பொருட்டு. 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 'இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால் என்னை யடைந்த துயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது. இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) (இ-ரை.) செற்றவர் பின்சேறல் வேண்டி-என்னைத் துன்புறத்திப் பிரிந்துசென்றவர் பின்னே யான் செல்லுதலை வேண்டுதலான் ; என்னை உற்ற துயர் எற்று- என்னை யடைந்துள்ள காமநோய் எத்தகையது !; அளித்து-ஐயோ ! இரங்கத்தக்கது !. இக்காம நோய் என்னை அளவிறந்து இழிவுபடுத்துவதால் மிகக். கொடிது என்பதாம் . ' செற்றவர் ' என்றது மேற்குறளிற் 'செற்றார் ' என்றது போன்றதே . ' அளித்து ' எதிர்மறைக் குறிப்பு . ' அரோ ' அசைநிலை.
கலைஞர் உரை:
வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.
சாலமன் பாப்பையா உரை:
என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
துன்பம் செய்தவரிடத்திலேயே போய் அடைக்கலம் புகச்சொல்லி ஆசை மூட்டுகிறதே, அம்மா! எனக்கு வந்துவிட்ட இந்தக் கவலை எப்படிப்பட்ட விசித்திரமான கவலையாக இருக்கிறது!
Translation
My grief how full of grace, I pray you see! It seeks to follow him that hateth me.
Explanation
The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?.
Transliteration
Setravar Pinseral Venti Aliththaro Etrennai Utra Thuyar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >